search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "License Fee"

    • வருவாய் ஆதாரத்தைப்பெருக்க, கிராமங்களில் இயங்கும் நிறுவனங்களிடம் ஒருமுறை நிறுவன கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
    • உரிமம் புதுப்பிப்பு கட்டணம் வசூலிக்கப்படாததால், பல ஊராட்சிகள், வறுமை நிலையில் உள்ளன.

    திருப்பூர் :

    ஊராட்சிகளுக்கு சொத்துவரி, குடிநீர் கட்டணம், தொழில்வரி உள்ளிட்ட இனங்கள் மட்டுமே முக்கிய வருவாய் இனமாக உள்ளன. வருவாய் ஆதாரத்தைப்பெருக்க, கிராமங்களில் இயங்கும் நிறுவனங்களிடம் ஒருமுறை நிறுவன கட்டணம் வசூலிக்கப்படுகிறது.அந்நிறுவனங்கள், ஆண்டுதோறும், உரிமக்கட்டணம் செலுத்தி, உரிமம் புதுப்பிப்பு செய்து கொள்ள வேண்டும். ஆனால் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல ஊராட்சி நிர்வாகங்கள், உரிமக்கட்டணம் வசூலிப்பதில்லை. புற்றீசல் போல நிறுவனங்கள் உருவாகிய பின்பும் கூட, உரிம புதுப்பிப்பு கட்டணம் வசூலிக்கப்படாததால், பல ஊராட்சிகள், வறுமை நிலையில் உள்ளன.

    இந்நிலையில் நிறுவனங்களிடம் இருந்து உரிமம் புதுப்பிப்பு கட்டணம் வசூலிக்க மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.அவ்வகையில் உடுமலை ஒன்றியத்தில், தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்களில் எந்திரம் நிறுவி தொழில் உரிமம் வழங்க, திருத்திய உரிமக்கட்டணம் நிர்ணயிக்கப்படுகிறது.

    இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:- ஒன்று முதல் 5 குதிரைத்திறன் வரை ஒவ்வொரு குதிரைத்திறனுக்கும் 50 ரூபாய், 5 முதல் 10 குதிரைத்திறன் வரை ஒவ்வொரு குதிரைத்திறனுக்கும் 100 ரூபாய், 10 முதல் 25 குதிரைத் திறன் வரை ஒவ்வொரு குதிரைத்திறனுக்கும் 80 ரூபாய்,25 முதல் 50 குதிரைத்திறன் வரை ஒவ்வொரு குதிரைத் திறனுக்கும் 70 ரூபாய், 51 முதல் 100 குதிரைத் திறன் வரை, ஒவ்வொரு குதிரைத்திறனுக்கும் 60 ரூபாய், 100 முதல் 200 குதிரைத் திறன் வரை ஒவ்வொரு குதிரைத்திறனுக்கும், 40 ரூபாய்,201 முதல் 500 குதிரைத் திறன் வரை ஒவ்வொரு குதிரைத்திறனுக்கும் 30 ரூபாய், 501 குதிரைத்திறனுக்கு மேல் ஒவ்வொரு குதிரைத் திறனுக்கும் 20 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    இதேபோல எந்திரம் ஒன்றுக்கு 50 ரூபாய், ஆய்வுக்கட்டணம் 3,000 ரூபாய், வரைபடக் கட்டணம், 500 ரூபாய், நிலம் கட்டணம் 2,000 ரூபாய் என வசூலிக்கப்படவுள்ளது.எனவே கிராம ஊராட்சி பகுதியில் இயங்கும் நிறுவனங்கள் உரிமம் பெற வேண்டும். உரிமம் பெறாத நிறுவனங்களுக்கு ஊராட்சி ஒன்றிய பி.டி.ஓ.,க்கள் வாயிலாக நோட்டீஸ் அனுப்பப்படவும் உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

    ×