என் மலர்
நீங்கள் தேடியது "Land cheating case"
பெங்களூரு:
கர்நாடக மாநிலம் பெங்களூரு அருகே தனிசந்தரா என்ற இடத்தில் பெங்களூரு வளர்ச்சி குழுமம் சார்பில் வீட்டு மனை உருவாக்கப்பட்டது.
இதற்காக நிலம் கையகப்படுத்தப்பட்டது. பின்னர் 2007-ம் ஆண்டு அதில் 3.9 ஏக்கர் நிலம் விடுவிக்கப்பட்டது. அப்போது குமாரசாமி முதல்-மந்திரியாக இருந்தார்.
இதில், தனி நபருக்கு சாதகமாக அரசு முடிவு எடுத்திருப்பதாக புகார் கூறப்பட்டது. குமாரசாமி மற்றும் சில அதிகாரிகள், முன்னாள் மந்திரி ஆகியோர் இதில் முறைகேடு செய்திருப்பதாகவும் புகார்கள் வந்தன.
இது சம்பந்தமாக மகா தேவசாமி என்பவர் 2011-ம் ஆண்டு லோக் அயுக்தா கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீண்ட காலமாக நடந்து வந்தது.
இதில் இருந்து தங்களை விடுவிக்க வேண்டும் என்று குமாரசாமி உள்ளிட்டோர் மனு தாக்கல் செய்திருந்தனர்.
இதை விசாரித்த நீதிபதி பி.வி.பட்டேல், முதல்-மந்திரி குமாரசாமி, அப்போதைய மந்திரி சென்னிகப்பா, ஐ.ஏ.எஸ். அதிகாரி ஜோதி ராமலிங்கம் உள்ளிட்டோரை வழக்கில் இருந்து விடுவித்து உத்தரவிட்டார்.
இந்த வழக்கு 4 ஆண்டுகள் கழித்து தாமதமாக தொடரப்பட்டுள்ளது. மேலும் குமாரசாமி உள்ளிட்டோர் முறைகேடு செய்தார்கள் என்பதற்கான எந்த ஆதாரங்களும் தாக்கல் செய்யப்படவில்லை. விதி முறைகளை மீறியதற்கான ஆவணங்களும் தாக்கல் ஆகவில்லை.
எனவே, அவர்களை வழக்கில் இருந்து விடுவிக்கிறேன் என்று நீதிபதி கூறினார்.