search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "kovai student suicide"

    மாணவி தற்கொலை செய்த வழக்கில் பள்ளி முதல்வர் மீரா ஜாக்சனை போலீசார் கோவை சிறையில் அடைத்தனர்.

    கோவை:

    கோவையை சேர்ந்த 17 வயது மாணவி ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் வீட்டில் இருந்த அவர் தற்கொலை செய்து கொண்டார்.

    இது தொடர்பாக கோவை மேற்கு அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் மாணவி ஆர்.எஸ். புரத்தில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-1 படித்த போது, அந்த பள்ளியில் இயற்பியல் ஆசிரியராக பணிபுரிந்த மிதுன்சக்கரவர்த்தி பாலியல் தொல்லை கொடுத்ததும், அதனாலேயே மாணவி தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது. இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

    இதையடுத்து போலீசார் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தியை கைது செய்தனர். ஆனால் உறவினர்கள், பாலியல் தொல்லை குறித்து புகார் தெரிவித்தும் பள்ளி முதல்வர் மீரா ஜாக்சன் நடவடிக்கை எடுக்காமல் இருந்துள்ளார். எனவே அவரையும் கைது செய்ய வேண்டும் என கூறி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    பள்ளி முதல்வர் மீரா ஜாக்சன் மீதும் போக்சோ வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரை பெங்களூருவில் உள்ள உறவினர் வீட்டில் வைத்து அதிரடியாக கைது செய்தனர்.

    பின்னர் அவரை கோவை ஆர்.எஸ்.புரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். அங்கு துணை கமி‌ஷனர்கள் ஜெயச்சந்திரன், உமா ஆகியோர் விசாரணை மேற்கொண்டனர்.

    பள்ளி முதல்வரிடம், ஆசிரியரின் பாலியல் தொல்லை குறித்து மாணவி உங்களிடம் தெரிவித்தும், நீங்கள் ஏன் முறையான நடவடிக்கை எடுக்கவில்லை.

    மேலும் பாலியல் தொல்லை தெரிந்ததும், போலீசாருக்கும், மாவட்ட குழந்தைகள் மையத்திற்கு தகவல் தெரிவிக்காது ஏன்? அதற்கு என்ன காரணம். யாராவது நடவடிக்கை எடுக்க வேண்டாம், வெளியில் சொல்ல வேண்டாம் என உங்களுக்கு அழுத்தம் கொடுத்தார்களா? கைது செய்யப்பட்ட ஆசிரியர் இந்த மாணவியை போன்று வேறு யாராவது மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தாரா? அது குறித்து யாராவது புகார் உங்களிடம் தந்தார்களா? இதில் வேறு யாரும் சம்பந்தப்பட்டுள்ளனரா? அது குறித்த தகவல் உங்களுக்கு தெரியுமா? என பல்வேறு கேள்விகளை எழுப்பி விசாரணை மேற்கொண்டனர். அதற்கு மீரா ஜாக்சனும் பதில் அளித்துள்ளார். அதனை போலீசார் வீடியோ பதிவுடன் வாக்குமூலமாக பதிவு செய்து கொண்டனர்.

    காலையில் தொடங்கிய விசாரணை இரவு வரை சுமார் 12 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது.

    விசாரணை முடிந்ததும் போலீசார் பள்ளி முதல்வர் மீரா ஜாக்சனை மகளிர் கோர்ட்டு நீதிபதி நந்தினி தேவி வீட்டில் ஆஜர்படுத்தினர். நீதிபதி, அவரை வருகிற 26-ந் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து போலீசார் பள்ளி முதல்வர் மீரா ஜாக்சனை கோவை சிறையில் அடைத்தனர்.

    இதுகுறித்து துணை கமி‌ஷனர் ஜெயச்சந்திரன் கூறுகையில், மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல் இருந்தா? என விசாரணை நடந்து வருகிறது. இந்த வழக்கில் கைப்பற்றப்பட்டுள்ள துண்டு சீட்டு மற்றும் வாட்ஸ்- அப் ஆதாரங்கள், ஆடியோ உரையாடல்களை வைத்தும் அடுத்தகட்ட விசாரணை நடக்கிறது. மாணவி தற்கொலைக்கு வேறு ஏதாவது காரணங்கள் உள்ளதா? வேறு யாருக்காவது இதில் தொடர்பு உள்ளதா? எனவும் விசாரித்து வருகிறோம். இதுதவிர மாணவி எழுதிய துண்டு சீட்டில் உள்ள பெயர்கள், விவரங்கள் குறித்து விசாரணை நடக்கிறது. சக மாணவிகள், ஆசிரியர்களிடம் விசாரணை நடத்த உள்ளோம் என்றார்.

    மாணவியை இழந்த பெற்றோர் தங்கள் வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை வேண்டும் என்றும், தங்கள் மற்ற குழந்தையை படிக்க வைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார்.

    கோவை:

    கோவையில் ஆசிரியரின் பாலியல் தொல்லையால் 17 வயது மாணவி தற்கொலை செய்து கொண்டார்.

    இந்த நிலையில் கோவை கோட்டைமேடு பகுதியில் உள்ள இறந்த மாணவியின் வீட்டிற்கு அமைச்சர்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, செந்தில் பாலாஜி ஆகியோர் சென்றனர். அவர்கள் மாணவியின் பெற்றோரை சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் கூறினர்.

    அதனை தொடர்ந்து அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    நடக்கக் கூடாத காரியம் சில நாட்களுக்கு முன்பு நடந்துவிட்டது. இன்றைக்கு நடந்துள்ள இந்த இழப்பானது எங்கோ தமிழகத்தின்ஒரு மூலையில் நடந்தது என்று நான் பார்க்கவில்லை. மாறாக என்னுடைய சொந்த பெண் இந்த நிலைமைக்கு ஆளாகி இருந்தால் எப்படிப்பட்ட நிலையில் இருப்பேனோ அந்த மனநிலையில் தான் நான் தற்போது இங்கு வந்துள்ளேன்.

    இது தொடர்பாக விரிவாக விசாரணை நடத்தவும் உத்தரவிட்டுள்ளேன். சம்பவம் நடந்த 24 மணி நேரத்திலேயே ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். தற்போது பள்ளி முதல்வரையும் கைது செய்துள்ளோம்.

    கைதான பள்ளி முதல்வர்

    போக்சோ சட்டம் குறித்து அனைவருக்கும் விழிப்புணர்வு தேவை. அரசு பள்ளியை போல் தனியார் பள்ளிகளிலும் அந்தந்த ஆசிரியர்கள் மூலம் ஒரு மணி நேரம் போக்சோ சட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். பாலியல் தொல்லைக்கு ஆளாகும் மாணவர்கள் அரசின் உதவி எண்ணிற்கு அழைத்து தகவலை தெரிவிக்கலாம்.

    தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு உரிய தண்டனை வாங்கித் தருவது எங்களுடைய கடமை. அதனை நாங்கள் செய்வோம்.

    மாணவியை இழந்த பெற்றோர் தங்கள் வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை வேண்டும் என்றும், தங்கள் மற்ற குழந்தையை படிக்க வைக்க வேண்டும். மேலும் இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். இதனை முதல்- அமைச்சர் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும்.

    மாணவி எழுதியதாக கூறப்படும் அந்தக் கடிதம் எந்த ஒரு குறிப்பும் இல்லாமல் உள்ளது. அது மாணவியின் கையெழுத்து தானா? என்பதை அறிய அவரது பெற்றோரிடம் விசாரிக்கப்படுகிறது. அவர்கள் தங்கள் மகள் கையெழுத்து என்று கூறினால் அதன்பிறகு அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். 

    இதையும் படியுங்கள்...மழை நின்று 2 நாட்கள் ஆன பிறகும் சென்னையில் 70 தெருக்களில் தண்ணீர் இன்னமும் தேங்கியுள்ளது

    பிளஸ்-2 மாணவி தற்கொலை செய்துக்கொண்ட விவகாரத்தில், கைது செய்யப்பட்ட பள்ளி முதல்வர் மீரா ஜாக்சனிடம் போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்த உள்ளனர்.
    கோவை:

    கோவையில் பிரபல தனியார் பள்ளி ஆசிரியரின் பாலியல் தொல்லையால் பிளஸ் 2 மாணவி தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் தற்கொலைக்கு தூண்டியதாக ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி மீது போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    மேலும், இதுதொடர்பாக மாணவி புகார் அளித்தும் பாலியல் தொல்லையில் ஈடுபட்ட ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்காத பள்ளி முதல்வர் மீரா ஜாக்சன் மீதும் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்தனர். ஆனால், மீரா ஜாக்சன் தலைமறைவானதை அடுத்து அவரைப் பிடிக்க 2 குழுக்கள் அமைக்கப்பட்டிருந்தன.

    இந்நிலையில், பெங்களூரு தனிப்படை போலீசார் மீரா ஜாக்சனை சுற்றி வளைத்து கைது செய்தனர். பெங்களூருவில் கைது செய்யப்பட்ட அவரை,  இன்று மாலை கோவை அனைத்து மகளிர் காவல் நிலையம் (மேற்கு) அழைத்து வரப்பட்டு மேற்கொண்டு விசாரணை நடத்த உள்ளனர்.

    ×