search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "kodiyakarai sanctuary"

    தற்போது நிலவிவரும் கடும் வறட்சி காரணமாக கோடியக்கரை சரணாலயத்தில் விலங்குகள் தண்ணீரை தேடி வனத்தை விட்டு வெளியேறி வருகின்றன.
    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா கோடியக்கரையில் வனவிலங்கு சரணாலயம் உள்ளது. இந்த சரணாலயம் 23 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது.

    இங்கு புள்ளிமான், வெளிமான், நரி, குரங்கு, குதிரை, உடும்பு, மயில், காட்டுப்பன்றி உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளன. 2,000-க்கும் மேற்பட்ட புள்ளிமான் மற்றும் வெளிமான்களும், 150 குதிரைகளும், 1000-க்கும் மேற்பட்ட குரங்குகளும், 100 நரிகளும், 500 காட்டுப்பன்றிகளும், 100-க்கும் மேற்பட்ட முயல் மற்றும் உடும்புகளும், பழந்தின்னி வவ்வால்களும் உள்ளன.

    இந்த சரணாலயத்திற்கு ஆண்டுதோறும் பல்வேறு பகுதியில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்து செல்வார்கள். சரணாலயத்தில் 56 குளங்களும், 17 இடங்களில் தொட்டிகளும் உள்ளன.

    வழக்கமாக இந்த பகுதியில் வடகிழக்கு பருவமழை சராசரியாக 120 செ.மீ பெய்யும். ஆனால் சென்ற ஆண்டு மிகக்குறைந்த அளவே பெய்துள்ளது. தற்போது கடும் வறட்சியால் வனவிலங்கு சரணாலயத்தில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் வனப்பகுதியிலுள்ள நண்டுபள்ளம், அருவங்கன்னி, சவுக்குபிளாட், இரட்டைவாய்க்கால், நல்லதண்ணீர்குளம், புதுக்குளம், ஓனான்குளம் உள்ளிட்ட 56-க்கும் மேற்பட்ட குளங்களிலும் தண்ணீர் இன்றி காணப்படுகிறது.

    குளங்கள் வறண்டதால் வனத்துறையினர் டேங்கர் லாரி மூலம் நாள்தோறும் விலங்குகளுக்கு தண்ணீர் வினியோகம் செய்து வருகின்றனர். இருந்த போதிலும் தண்ணீர் பற்றாக்குறையால் விலங்குகள் தண்ணீரை தேடி வனத்தை விட்டு வெளியேறி வருகின்றன. இதுபோல வெளியேறும் மான் உள்ளிட்ட விலங்குகள் வாகனங்களில் அடிபட்டு இறந்து விடுகின்றன.

    பள்ளி, கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் அதிகம் வருவார்கள் என்று எதிர்பார்த்த நிலையில் கடும் வெயில் சுட்டெரிப்பதால் சுற்றுலா பயணிகளின் வருகை வெகுவாக குறைந்துள்ளன. சரணாலயத்தில் வனத்துறையினர் கூடுதலாக தொட்டி அமைத்து வன விலங்குகள் குடிக்க தண்ணீர் விட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


    கஜா புயலால் கோடியக்காடு வன விலங்குகள் சரணாலயத்தில் 373 பறவைகள், 18 மான்கள் உயிரிழந்திருப்பது முதல் கட்ட கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. #GajaCyclone
    நாகப்பட்டினம்:

    கஜா புயலால் நாகை மாவட்டத்தில் வேதாரண்யம், தலைஞாயிறு ஆகிய பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. வேதாரண்யம் அருகே கோடியக்காட்டில் உள்ள வன விலங்குள் சரணாலயத்தில் இருந்த ஆயிரக்கணக்கான மரங்கள் புயல் காற்றில் வேரோடு சாய்ந்தன.

    கண்ணுக்கு எட்டிய தூரம் வரை மரக்குவியல்களாகவே காணப்பட்டன. இதனால் வன விலங்குகளின் கதி என்ன ஆனது என்று வனவிலங்கு ஆர்வலர்கள் கவலை தெரிவித்து வந்தனர்.

    இந்நிலையில் மாவட்ட வன உயிரின காப்பாளர் நாகசதீஷ் கிடிசாலா தலைமையில் வனத்துறை ஊழியர்கள், கல்லூரி மாணவ, மாணவிகள் கணக்கெடுப்பில் ஈடுபட்டுள்ளனர்.

    இதுகுறித்து வனச்சரகர் கிருஷ்ணமூர்த்தி கூறியபோது,



    கஜா புயல் தாக்கத்தில் ஆயிரக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளன. புயலால் 17 வெளிமான்களும், ஒரு புள்ளி மானும், 4 பன்றிகளும், 373 பறவைகளும் உயிரிழந்திருப்பது முதல் கட்ட கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. கணக்கெடுப்பு பணி இன்னும் ஒருவாரத்தில் நிறைவடையும், அப்போது இறந்த விலங்குகள், பறவைகள் குறித்த முழுமையான விவரம் தெரியவரும் என்றார்.

    பொலிவிழந்த நிலையில் உள்ள கோடியக்காட்டில் முன்புபோல் மரங்கள், மூலிகைச் செடிகளை நட்டுப் பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். #GajaCyclone

    ×