search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kartika Vratam"

    • கந்த சஷ்டி விரதம் தொடர்ந்து 6 வருடங்களும், கார்த்திகை விரதம் 12 வருடங்களும், வெள்ளிக்கிழமை விரதம் 3 வருடங்களும் ஆகும்.
    • மூலம் தேவர்களை வென்றதுடன் தனக்கு நிகரான எதிரி மூவுலகிலும் இல்லை என்ற ஆணவம் கொண்டிருந்தார்.

    பட்டீஸ்வரம்:

    தமிழ் கடவுளான திருமுருகப் பெருமானுக்கு உரிய விரதங்களில் கந்த சஷ்டி விரதம், கார்த்திகை விரதம், வெள்ளிக்கிழமை விரதம் ஆகிய மூன்றும் பிரதானமானவையாகும். கந்த சஷ்டி விரதம் தொடர்ந்து 6 வருடங்களும், கார்த்திகை விரதம் 12 வருடங்களும், வெள்ளிக்கிழமை விரதம் 3 வருடங்களும் ஆகும். இவ்விரதங்கள் முருக பக்தர்களால் இன்றும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    அதில் ஐப்பசித் திங்கள் சதுர்த்தசி திதியில் வளர்பிறை பிரதமை முதல் சஷ்டி வரை 6 நாட்களும் கந்தப் பெருமானை நினைத்து வழிபட்டு விரதம் இருப்பதை சிறப்பாக ஞான புராணங்கள் எடுத்துரைக்கின்றன. சூரபதுமன் என்ற அரக்கன் இறைவனிடம் கடும் தவம் புரிந்து அரிய வரங்களை பெற்றார். அதன் மூலம் தேவர்களை வென்றதுடன் தனக்கு நிகரான எதிரி மூவுலகிலும் இல்லை என்ற ஆணவம் கொண்டிருந்தார். சூரபதுமனின் அட்டகாசங்களை தாங்க முடியாத தேவர்கள் ஈசனிடம் முறையிட்டனர். உடன் சிவபெருமான், முருகப்பெருமானை சிருஷ்டித்தார்.

    அதனை தொடர்ந்து அன்னை மகாசக்தியின் அருளாசியுடன் அவரிடம் வேலாயுதம் பெற்று முருகப் பெருமான் சூரபதுமனுடன் போர் புரிந்து தனது ஞான வேலால் சூரபதுமனை இரண்டாகப் பிளந்து ஒரு பாதியை மயிலாகவும், மறுபாதியை சேவலாகவும் மாற்றி மயிலை வாகனமாகவும், சேவலைக் கொடியாகவும் குமரவேள் கொண்டு தேவர்களை காத்து அருளினார் என்பது கந்த புராணமாகும். இதனையே அனைத்து முருகன் கோயில்களிலும் உலகை ஆட்டிப் படைக்கும் ஆசை எனும் இச்சைகளை அழித்து நற்குணங்களை நல்கும் கந்தசஷ்டி விழாவாக இக்காலம் வரை கொண்டாடப்பட்டு வருகிறது.

    விரதத்திற்கு முதல் நாளன்றே வீட்டினை கழுவி சுத்தப்படுத்தி மஞ்சள் நீர் தெளித்தல் அவசியம். விரத நாளன்று அதிகாலையில் நீராடி காலையும் மாலையும் வீட்டின் சுவாமி அறையில் விளக்கேற்றி, விபூதி பூசி கந்த சஷ்டி கவசம், கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, திருப்புகழ், கச்சியப்ப சுவாமிகளின் கந்த புராணம் ஆகியவற்றைப் படிப்பது கூடுதல் சிறப்பை தரும் என்பது திண்ணம்.

    சரியான விரத முறை என்பது 25-ம் தேதி முதல் விரதம் தொடங்கி 31-ம் தேதி திருக்கல்யாணம் முடியும் வரை அவரவர் தேக நலத்திற்கு ஏற்றாற்போல் இருப்பதே இன்றைய காலத்தில் சிறப்பு.

    மகத்துவம் நிறைந்த கந்தசஷ்டி நாளில் நல்லருள் நல்கும் திருமுருகப் பெருமானை வணங்கி வழிபட்டு, விரதம் மேற்கொண்டு வந்தால் நினைத்த காரியம் வெற்றி பெறும் என்பது ஐதீகம்.திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயில் மற்றும் அனைத்து முருகன் கோவில்களிலும் கந்த சஷ்டி திருவிழா இந்த ஆண்டு திருச்செந்தூா் கோயிலில் கந்த சஷ்டி திருவிழாவானது அக்.25-ல் தொடங்கி 30-ம் தேதி சூரசம்ஹாரம் விழா நடைபெறும்.

    அக். 25-ம் தேதி கோயில் நடை அதிகாலை 1 மணிக்கு திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனமும் அதனை தொடர்ந்து 2 மணிக்கு உதய மாா்த்தாண்ட அபிஷேகம், காலை 5.30 மணிக்கும் ஸ்ரீஜெயந்தி நாதா் யாகசாலைக்கு புறப்படுதலைத் தொடா்ந்து, காலை 9 மணிக்கு உச்சிகால பூஜை, பிற்பகல் 3 மணிக்கு சாயரட்சை தீபாராதனைகள், மற்ற கால பூஜைகள் வழக்கம்போல நடைபெறும்.

    2ஆம் நாள்முதல் 5ஆம் நாள்வரை அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 3.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 4 மணிக்கு உதயமாா்த்தாண்ட அபிஷேகம் தொடா்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெறும்.அக். 30-ம் தேதி சூரசம்ஹாரத்தை முன்னிட்டு, அதிகாலை 1 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 2 மணிக்கு உதயமாா்த்தாண்ட அபிஷேகம், காலை 9 மணிக்கு உச்சிகால அபிஷேகம், பிற்பகல் 1 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, மாலை 4 மணிக்கு மேல் கோயில் கடற்கரையில் சூரசம்ஹாரம் நடைபெறும்.

    31-ம் தேதி திருக்கல்யாண வைபவத்தையொட்டி அதிகாலை 3 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, 3.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 4 மணிக்கு உதயமாா்த்தாண்ட அபிஷேகம், தொடா்ந்து பூஜைகள் நடைபெற்று, அதிகாலை 5 மணிக்கு தெய்வானை அம்மன் தவசுக் காட்சிக்கு புறப்பாடு, மாலை 6.30 மணிக்கு சுவாமி-அம்மன் தோள்மாலை மாற்றுதல், இரவு திருக்கல்யாண வைபவம் நடைபெறும்.

    இதே தினங்களில் புகழ் பெற்ற மற்ற முருகன் கோவில்களிலும் சஷ்டி திருவிழாவானது சில கால நேர மாறுதல்களுடனும், சில நிகழ்ச்சிகள் மாற்றங்களுடனும் மிக சிறப்பாக நடைபெறும்.

    ×