search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "jewel seized"

    ஆவூர், கீரனூர் பகுதிகளில் தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட 3 வாலிபர்கள் கைது செய்து, அவர்களிடமிருந்து 33 பவுன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
    ஆவூர்:

    புதுக்கோட்டை மாவட்டம், ஆவூர் அருகே உள்ள சித்தாம்பூர் கிராமத்தை சேர்ந்தவர் பழனியம்மாள் (வயது 45). இவர் கடந்த வாரம் அப்பகுதியில் கீரனூர்-விராலிமலை சாலையோரத்தில் மாடு மேய்த்துக்கொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 3 வாலிபர்கள் பழனியம்மாளை தாக்கிவிட்டு அவர் அணிந்திருந்த 2 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்றனர். இதைத்தொடர்ந்து அந்த பகுதியை சேர்ந்தவர்கள் வழிப்பறியில் ஈடுபட்டவர்களை பிடிக்க விரட்டிச்சென்றபோது அவர்கள் மின்னல் வேகத்தில் தப்பிச்சென்றனர். அப்போது அவர்கள் பேராம்பூர் வழியாக சென்றபோது அங்குள்ள வேகத்தடையில் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்து லேசான காயமடைந்தனர்.

    இதையடுத்து அப்பகுதியில் இருந்தவர்கள் அவர்கள் பெண்ணிடம் நகை பறித்து சென்றவர்கள் என்று தெரியாமல் அவர்களை தூக்கி விட்டு அனுப்பி வைத்தனர். ஆனால் பின்னர் தான் தெரிந்தது தாங்கள் அனுப்பி வைத்தது பெண்ணிடம் தங்க சங்கிலி பறித்தவர்கள் என்று தெரிந்தது. இதையடுத்து பழனியம்மாள் மண்டையூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

    போலீசாரின் தீவிர விசாரனையிவ் இலுப்பூரை அடுத்த மலைக்குடிப்பட்டி சீத்தப்பட்டியை சேர்ந்த மாரிமுத்து மகன் பாண்டியன் (30), அவரது தம்பி கார்த்தி (22) மற்றும் இவர்களது நண்பரான பாசிப்பட்டி கிராமத்தை சேர்ந்த ராஜேந்திரன் மகன் விஜய் என்கிற கருப்பையா (20) ஆகியோர் இந்த வழிப்பறியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் தங்களது வீட்டில் பதுங்கியிருந்தபோது அவர்களை போலீசார் பிடித்துச்சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், பழனியம்மாளிடம் வழிப்பறி செய்தது மட்டுமின்றி, சித்தாம்பூரை அடுத்த ஆலங்குடியில் ஒரு பெண்ணின் வீட்டுக்கதவை உடைத்து பீரோவில் இருந்த 2½ பவுன், கீரனூர் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட ஒடுக்கூரில் ஒரு பெண்ணிடம் 3 பவுன் தங்க சங்கிலி, கீரனூரில் ஒரு ஆசிரியரை மிரட்டி 15 பவுன் சங்கிலி, மோதிரத்தை பறித்தது, உடையாளிப்பட்டி போலீஸ் நிலைய பகுதியில் ஒரு நபரை மிரட்டி 7 பவுன் தங்க சங்கிலியை பறித்தது, ஆசிரியையிடம் 4 பவுன் சங்கிலியை பறித்துச்சென்றதை அவர்கள் ஒப்புக்கொண்டனர். இதையடுத்து அவர்களிடம் இருந்து மொத்தம் 33 பவுன் நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    மேலும் இதுகுறித்து மண்டையூர், கீரனூர், உடையாளிப்பட்டி ஆகிய போலீஸ் நிலையங்களில் உள்ள புகார்களின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து தொடர் வழிப்பறியில் ஈடுபட்டு வந்த பாண்டியன், கார்த்தி, விஜய் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். 
    ×