search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "IRCTC hotels allotment money laundering case"

    ரெயில்வே ஓட்டல் ஊழல் வழக்கில் லாலு பிரசாத் யாதவ், அவரது மனைவி ரப்ரி தேவி மற்றும் மகன் தேஜஸ்வி யாதவ் ஆகியோர் ஆஜராகுமாறு டெல்லி நீதிமன்றம் இன்று சம்மன் அனுப்பி உள்ளது. #LaluPrasadYadav #IRCTCcase
    டெல்லி:

    பீகார் மாநில முன்னாள் முதல் மந்திரியும், ராஷ்ட்ரீய ஜனதாதள தலைவருமான லாலு பிரசாத் யாதவ் கடந்த 2004 முதல் 2009-ம் ஆண்டு வரை ரெயில்வே துறை மந்திரியாக இருந்தார். அவரது பதவிக்காலத்தில் ராஞ்சி மற்றும் பூரி நகரில் உள்ள ரெயில்வேக்கு சொந்தமான 2 ஓட்டல்களின் நிர்வாகத்தையும் விஜய் கோச்சார், வினய் கோச்சார் குழுமத்துக்கு சொந்தமான சுஜாதா ஓட்டல் என்ற தனியார் நிறுவனத்திடம் ஒப்படைத்தற்கு கைமாறாக பீகார் தலைநகர் பாட்னாவில் உள்ள பினாமி நிறுவனத்துக்கு 3 ஏக்கர் வீட்டுமனை லஞ்சமாக பெறப்பட்டதாக புகார் எழுந்தது.

    இந்த விவகாரம் முடிந்த பின்னர் வேறொருவருக்கு சொந்தமாக இருந்த அந்த பினாமி நிறுவனம் லாலுவின் மனைவி ராப்ரி தேவி மற்றும் அவரது மகன் தேஜஸ்வி யாதவ் பெயரில் மாற்றப்பட்டது. 2010 முதல் 2014-ம் ஆண்டுகளுக்கு இடையில் நடைபெற்ற இந்த பரிமாற்றங்கள் முடிவடைதற்குள் ரெயில்வே மந்திரி பதவியை லாலு ராஜினாமா செய்தார்.



    இது தொடர்பாக லாலு பிரசாத் யாதவ், அவரது மனைவியும் பீகார் முன்னாள் முதல் மந்திரியுமான ராப்ரி தேவி மற்றும் அவரது குடும்பத்தினர் மீது சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் லாலு, அவரது மனைவி ராப்ரி தேவி, மகன் தேஜஸ்வி யாதவ் உள்பட 14 பேர் மீது சி.பி.ஐ. நீதிமன்றத்தில் கடந்த ஏப்ரல் மாதம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

    இந்நிலையில், இந்த வழக்கு இன்று டெல்லி நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், லாலு பிரசாத் யாதவ், ராப்ரி தேவி மற்றும் தேஜஸ்வி யாதவ் ஆகியோர் வரும் அக்டோபர் மாதம் 6-ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவிட்டது.

    ஏற்கனவே கால்நடை தீவன ஊழல் வழக்கில் லாலு பிரசாத் யாதவ் சிறையில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. #LaluPrasadYadav #IRCTCcase
    ×