என் மலர்
நீங்கள் தேடியது "Infrastructure will be improved"
- கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.
- பல்கலைக்கழகத்திற்கு உரிய திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடுகள், செலவினங்கள், செயல்படுத்தப்பட வேண்டிய திட்டங்கள், மாணவ மாணவிகளின் குறைகள் பற்றியும் பல்கலைக்கழக பதிவாளரிடம் கேட்டறிந்தனர்.
கொடைக்கானல்:
கொடைக்கானலில் சட்டப்பேரவை பொது கணக்கு குழு அதன் தலைவர் செல்வப் பெருந்தகை தலைமையில் ஆய்வு மேற்கொண்டது. இதில் எம்.எல்.ஏ.க்கள் கிருஷ்ணமூர்த்தி, சரஸ்வதி, உதய சூரியன், தேன்மொழி, அக்ரி கிருஷ்ணமூர்த்தி, சேகர், பாலாஜி மற்றும் சட்டமன்ற பேரவை இணைச் செயலாளர் தேன்மொழி, சார்பு செயலாளர் பாலசீனிவாசன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர். மாவட்ட கலெக்டர் பூங்கொடி முன்னிலை வகித்தார். கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.
அங்கு பல்கலைக்கழகத்திற்கு உரிய திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடுகள், செலவினங்கள், செயல்படுத்தப்பட வேண்டிய திட்டங்கள், ஒதுக்கிய நிதியில் செய்யப்பட்ட பணிகள் குறித்தும், இங்கு கல்வி பயிலும் மாணவ மாணவிகளின் குறைகள் பற்றியும் பல்கலைக்கழக பதிவாளரிடம் கேட்டறிந்தனர். அதன் பின்னர் அரசு ஆஸ்பத்திரியில் ஆய்வு மேற்கொண்டனர். அபுபோது நிருபர்களிடம் செல்வபெருந்தகை எம்.எல்.ஏ. கூறுகையில், கொடைக்கானல் நகராட்சி அன்னை தெரசா பல்கலைக்கழகம் மற்றும் அரசு ஆஸ்பத்திரியில் ஆய்வு மேற்கொண்டுள்ளோம். கொடைக்கானல் நகராட்சியில் திடக்கழிவு மேலாண்மைக்காக 2.17 மதிப்பீட்டில் வாங்கப்பட்ட எந்திரங்கள் முறையாக இயங்கவில்லை எனவும் பயன்பாட்டுக்கு முழுமையாக கொண்டு வரப்படவில்லை என்றும் மத்திய கணக்காயர்கள் கணக்கீடு செய்து கூறியிருந்தனர்.
அந்த அறிக்கையின் படி தாமதமானதற்கு பல்வேறு காரணங்கள் கூறியிருக்கின்றனர். அன்னை தெரசா பல்கலைக்கழகத்தில் தொலைதூரக் கல்வி முறை வந்ததாலும், அரசு கலைக் கல்லூரி வந்ததாலும் 400-க்கும் மேற்பட்டவர்கள் கல்வி பயில வேண்டிய நிலையில் 200-க்கும் குறைவான எண்ணிக்கையிலேயே மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இன்னும் 400க்கும் மேற்பட்ட இடங்கள் காலியாக உள்ளதால் காலியிடங்களை பூர்த்தி செய்து கல்வித்திறனை மேம்படுத்துவதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்க பரிந்துரைத்துள்ளோம். கொடைக்கானல் அரசு ஆஸ்பத்தி சுத்தமாகவும் சுகாதாரமாகவும் உள்ளது. மாவட்ட கலெக்டர் தலைமையில் சிறப்பான செயல்பாட்டில் உள்ளது. அன்னை தெரசா பல்கலைக்கழகத்தில் திறன் மேம்பாடுகளை ஊக்குவிக்கும்விதமான வரைவுத் திட்டங்களையும், கட்டமைப்பு வசதிகளையும் உருவாக்க வேண்டும். கொடைக்கானல் குளிர்பிரதேசம் என்பதால் மாணவிகளுக்கு ஸ்வெட்டர் மற்றும் துணி உலர்த்தும் எந்திரங்கள் வழங்க வேண்டும். கொடைக்கானல் குறிஞ்சி ஆண்டவர் கோவிலில் கும்பாபிஷேகம் நடத்துவதற்கான நடவடிக்கைகளை பரிந்துரைத்துள்ளோம்.
கொடைக்கானல் அரசு ஆஸ்பத்திரியில் ஸ்கேன் டெக்னீசியன், பிரேதப் பரிசோதனை நிலையப்பணியாளர்களை நிரந்தரமாக நியமிப்பதற்கு மருத்துவத் துறையிடம் பரிந்துரைப்போம். மேலும் அனைத்து ஆஸ்பத்திரிகளிலும் டாக்டர்கள் மற்றும் செவிலியர் பற்றாக்குறை உள்ளது. அதற்கு பணியாளர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது. இந்த குறைகளை போக்க மருத்துவத்துறை செயலாளரிடம் இது குறித்து பேசி பரிந்துரை செய்வோம்.
மலைச்சாலைகளில் சாலை வசதி ஏற்படுத்தப்பட்டு வருகிறது. வெள்ளகவி கிராமத்துக்கு 6 கி.மீ தூரத்துக்கு சாலை அமைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 3 கி.மீ விரைவில் நிலம் கையகப்படுத்தும் பணிகள் முடிந்ததும் அமைக்கப்படும் என்றார்.
இந்த ஆய்வின் போது கொடைக்கானல் அரசு ஆஸ்பத்திரியில் தாய்சேய் நலப்பெட்டகங்களை அவர் தாய்மார்களுக்கு வழங்கினார். இதில் மாவட்ட வருவாய் அலவலர் ஷேக் முகைதீன், கொடைக்கானல் வருவாய் கோட்டாட்சியர் ராஜா, கொடைக்கானல் நகராட்சி ஆணையாளர் சத்தியநாராயணன், நெடுஞ்சாலைத்துறை கோட்டப்பொறியாளர் சங்கர், சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் அனிதாநேர்முக உதவியாளர் (கணக்கு) கணகவள்ளி, மாவட்ட சுற்றுலா அலுவலர் சுதா உள்பட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.






