search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Industry Exposition"

    சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள, சென்னை வர்த்தகமையத்தில் வருகிற ஜனவரி 23 மற்றும் 24 ஆகியநாட்களில், முதலீட்டாளர்கள் பங்கேற்கும் மாநாடு நடைபெற உள்ளது. #WorldInvestorsConference
    சென்னை:

    தமிழ்நாடு அரசின் தொழில்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள, சென்னை வர்த்தகமையத்தில் வருகிற ஜனவரி 23 மற்றும் 24 ஆகியநாட்களில், முதலீட்டாளர்கள் பங்கேற்கும் “தமிழ்நாடு இரண்டாவது உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2019” மற்றும் முதலீட்டாளர்கள் மாநாடு தொடர்பான தொழில் பொருட்காட்சி நடக்க உள்ளன.

    மாநாட்டின் போது முதலீட்டாளர்கள், தேசிய மற்றும் பன்னாட்டு நிறுவனங்கள், கூட்டமைப்புகள் மற்றும் தூதரகங்கள் ஆகியவற்றைச் சார்ந்த பிரதிநிதிகள் பங்கேற்கிறார்கள்.

    அங்கு அமைக்கப்பட உள்ள 250-க்கும் மேற்பட்ட பொருட்காட்சி அரங்குகளில் தொழில் முதலீட்டாளர்கள் மற்றும் கூட்டாளர் நாடுகள் ஆகியோரின் தயாரிப்பு மற்றும் சேவைகள் பார்வைக்கு வைக்கப்படும்.

    மோட்டார் வாகனம் மற்றும் மோட்டார் வாகன உதிரிபாகங்கள், உணவு பதப்படுத்துதல் மற்றும் விவசாய வர்த்தகம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் மின்னணு சாதனங்கள் போன்ற தொடர்புடைய 12 முன்னணி துறைகளை முன்னிலைப்படுத்தி அமைக்கப்பட உள்ள பொருட்காட்சிக்கான முன்பதிவுகள் துவங்கப்பட்டுள்ளன.

    பொருட்காட்சியில் பங்கேற்பதற்கு முன் பதிவுகள் செய்து கொள்வதற்கான கடைசி நாள் 15.11.2018 ஆகும். பொருட்காட்சி அரங்கத்திற்கான இடம் கட்டணமின்றி ஒதுக்கப்படும். இதற்கென உருவாக்கப்பட்ட ஒரு குழு பொருட்காட்சி அரங்கிற்கு விண்ணப்பித்தவர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கான இடத்தினைத் தேர்வு செய்து வழங்கும்.

    கூடுதலாக தேவைப்படும் அனைத்து விபரங்களுக்கும் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: தலைவர், பொருட்காட்சிக்குழு, தமிழ்நாடு உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2019 மற்றும் மேலாண் இயக்குநர், தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனம் (சிப்காட்) தொலைபேசி :914428554514 நிகரி : 914428518999 மின்னஞ்சல்முகவரி : md@sipcot.com

    பொருட்காட்சியில் பங்கேற்பதற்காகப் பதிவு செய்ய www.tngim.com இணைய தளத்தை பார்வையிடும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    மேலும், முதலீட்டாளர்கள் இந்த அருமையான வணிக மற்றும் வளர்ச்சி வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளும்படியும் வேண்டப்படுகிறார்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #WorldInvestorsConference
    ×