search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "idol cheating"

    பழனி கோவில் சிலை மோசடி வழக்கில் முன்னாள் அறநிலையத்துறை அதிகாரி கும்பகோணம் கோர்ட்டில் சரண் அடைந்தார். #Idolsmuggling

    கும்பகோணம்:

    பழனி பால தண்டாயுத பாணி சிலை வடிவமைப் பதில் ஏற்பட்ட முறைகேடு தொடர்பாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து சிலையை வடிவமைத்த கோவில் ஸ்தபதி முத்தையா என்பவர் பழனி கோவில் இணை ஆணையராக பதவி வகித்த ராஜா 2 பேரையும் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு கைது செய்தனர்.

    மேலும் இந்தவழக்கில் நகை சரிபார்ப்பு அலுவலர்களான புகழேந்தி, தேவேந்திரன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நான்கு பேரும் தற்போது ஜாமீனில் வெளியில் வந்துள்ளனர்.

    மேலும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரால் இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக தேடப்பட்ட முன்னாள் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் தனபால் என்பவரை போலீசார் தேடி வந்தனர். அவர் தலைமறைவாக இருந்தார். அவரைப் பிடித்து கொடுப்பவர்களுக்கு ரூ. 20 ஆயிரம் சன்மானம் வழங்கப்படும் என சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் ஏற்கனவே அறிவித்திருந்தனர். இதற்கிடையில் 2முறை முன்ஜாமீன் கேட்டு மதுரை உயர்நீதிமன்றத்தில் தனபால் மனு தாக்கல் செய்திருந்தார். அதன்பிறகு கடந்த 15 தினங்களுக்கு முன்பாக மதுரை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

    அந்த மனுவை விசாரித்த நீதிபதி இந்தவழக்கு நடைபெறும் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் சரண் அடைந்து முன்ஜாமீன் பெற்றுக் கொள்ளுமாறும் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரின் நேரடி கண்காணிப்பில் கும்பகோணத்தில் 60 நாட்கள் தங்கியிருக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.

    இதனால் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், தனபால் வருகைக்காக கும்பகோணம் நீதிமன்றத்தில் தினமும் காத்திருந்தனர்.

    இந்தநிலையில் இன்று காலை கும்பகோணம் 2-வது நடுவர் நீதிமன்றத்தில் தனபால் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதை அடுத்து காலை 10 மணிக்கு நீதிமன்றத்தில் தனபால் சரண் அடைந்தார்.

    அப்போது மனுவை விசாரித்த நீதிபதி கோதண்டராமன் விசாரணையை பிற்பகல் 2 மணிக்கு ஒத்திவைத்து அதுவரை நீதிமன்ற வளாகத்தை விட்டு வெளியில் செல்லக் கூடாது என உத்தரவிட்டார். #Idolsmuggling

    பழனி கோவில் சிலை மோசடி விவகாரத்தில் முக்கிய பிரமுகர்கள் சிக்கியதால் டி.எஸ்.பி. இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. #Idolsmuggling

    பழனி:

    பழனி கோவில் மூலவர் சன்னதியில் உள்ள பழமை வாய்ந்த நவபாஷாண சிலைக்கு பதிலாக புதிய சிலை கடந்த 2004-ம் ஆண்டு புதிதாக வடிவமைக்கப்பட்டது. இதில் மோசடி நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

    சிலை கடத்தல் பிரிவு ஐ.ஜி.பொன்மாணிக்கவேல் தலைமையில் டி.எஸ்.பி. கருணாகரன் மற்றும் போலீசார் அதிரடி விசாரணையில் இறங்கினர்.

    குறிப்பாக டி.எஸ்.பி. கருணாகரன் 2 மாதமாக பழனியில் முகாமிட்டு குருக்கள் மற்றும் அதிகாரிகளிடம் தீவிர விசாரணை மேற் கொண்டார்.

    இவ்வழக்கு தொடர்பாக தலைமை ஸ்தபதி முத்தையா, முன்னாள் இணை ஆணையர் ராஜா, அதிகாரிகள் புகழேந்தி, தேவேந்திரன் ஆகியோரை கைது செய்தனர்.

    நேர்மையான முறையில் விசாரணை நடைபெற்று வருவதாக பக்தர்கள் எதிர்பார்த்திருந்தனர். இந்த நிலையில் திடீரென சி.பி.சி.ஐ.டி.க்கு சிலை கடதல் வழக்கு மாற்றப்பட்டது. அதன்பின் கோர்ட்டில் முறையிட்டு மீண்டும் சிலை கடத்தல் பிரிவு போலீசாரே விசாரணை நடத்தி வந்தனர்.

    தற்போது டி.எஸ்.பி. கருணாகரன் கோவை மின் திருட்டு தடுப்பு பிரிவுக்கு திடீரென மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக பழனி டி.எஸ்.பி. வெங்கட்ராமன் நியமிக்கப்பட்டுள்ளார்.

    இது குறித்து பக்தர்கள் கூறுகையில், முக்கிய பிரமுகர்கள், அரசியல் வாதிகள், அதிகாரிகள் சிலை கடத்தல் வழக்கில் சிக்கியதால் டி.எஸ்.பி. மாற்றப்பட்டுள்ளார். நேர்மையான முறையில் சிலை கடத்தலை வெளிகொண்டு வந்த ஐ.ஜி. பொன்மாணிக்கவேலுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு கோர்ட்டிலும் ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் தங்களுக்கு போதுமான ஒத்துழைப்பு அரசு தரவில்லை என குற்றம்சாட்டியிருந்தார்.

    கோர்ட்டு உத்தரவால் மீண்டும் சிலை கடத்தல் பிரிவு போலீசாரே விசாரித்ததால் பல உண்மைகள் வெளிவந்து குற்றவாளிகளை நெருங்கிய நிலையில் இந்த இடமாற்றம் நடந்துள்ளது. இதனால் பக்தர்கள் அதிருப்தியில் உள்ளனர்.

    சிலை மோசடி வழக்கில் முக்கிய புள்ளிகளை காப்பாற்ற முயற்சிக்கின்றனர். மீண்டும் டி.எஸ்.பி. கருணாகரனே விசாரித்தால் மட்டுமே பல உண்மைகள் வெளிவரும் என்றனர். #Idolsmuggling

    ×