search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ice Cream Candle"

    • வித்தியாசமாக பரிசுப்பொருட்கள் கொடுப்பதற்கும் முதல் சாய்ஸ்.
    • பார்க்கவும் வித்தியாசமாகவும், அழகாகவும் இருக்கும்.

    பொதுவாக மெழுகுவர்த்தி செய்ய மோல்டு அவசியம். சில மோல்டுகளின் விலை மிகவும் அதிகம். மேலும் அச்சில் ஊற்றி அது காய்ந்ததும் இறக்கி செய்வது அவ்வளவு கடினமில்லை. யார் வேண்டுமானாலும் செய்யலாம். அனைவரையும் கவரும் வகையில் உருவானதே இந்த ஐஸ்கிரீம் மெழுகுவர்த்தி. கல்யாண நிகழ்ச்சியில் சீர்வரிசை தட்டு, ஆரத்தி தட்டு வைக்கும் போது இந்த ஐஸ்கிரீம், கேக், ஸ்நாக் வடிவ மெழுகு வர்த்திகளை பயன்படுத்தலாம். பார்க்கவும் வித்தியாசமாகவும், அழகாகவும் இருக்கும். மேலும் வித்தியாசமாக பரிசுப்பொருட்கள் கொடுப்பதற்கும் இது முதல் சாய்ஸ்.

    தேவையான பொருட்கள்:

    சிலிக்கான் அச்சுகள்

    கண்ணாடி டம்ளர்கள்

    லிக்விட் டை (மெழுகுவர்த்தியில் நிறம் சேர்ப்பதற்கு)

    பாரபின் மெழுகு - 3 கப்

    சோயா மெழுகு 1 கப்

    ஜெல் மெழுகு - 1 கப்

    அரோமா எண்ணெய்- சில துளிகள்

    திரி- 2

    செய்முறை:

    அடிகனமான பாத்திரத்தில் ஒரு கப் பாரபின் மெழுகை போட்டு மிதமான தீயில் கவனமுடன் உருக்க வேண்டும். பின்னர் அதனுடன் உங்களுக்குப் பிடித்த நிறங்களைச் சேர்த்து கலக்க வேண்டும். பல வடிவங்களில் இருக்கும் சிலிக்கான் அச்சுகளில் மெழுகை ஊற்றி ஆற வைக்க வேண்டும்.

    சாக்லேட் செய்ய பயன்படுத்தும் சிலிக்கான் அச்சுகளையும் இதற்கு பயன்படுத்திக்கொள்ளலாம். அச்சுகளில் இருக்கும் மெழுகை 30 நிமிடங்கள் கழித்து மெதுவாக எடுக்க வேண்டும். மீதம் இருக்கும் பாரபின் மெழுகில் ஒரு பகுதியை எடுத்து உருக்கி, அதில் தேவையான நிறத்தை சேர்த்து கலக்க வேண்டும்.

    பின்னர் அதை கண்ணாடி டம்ளர்களின் அடிப்பகுதியில் ஊற்றி ஆற வைக்க வேண்டும். அடிகனமான பாத்திரத்தில் சோயா மெழுகையும், 3 பாரபின் மெழுகையும் சம அளவு எடுத்து குறைவான தீயில் கவனமுடன் உருக்க வேண்டும். சில நிமிடங்களில் அது கெட்டியாகத் தொடங்கும்.

    முட்டையை அடித்து கலக்க பயன்படுத்தும் விஸ்க்கைக் கொண்டு, அந்த மெழுகை 5 நிமிடங்களுக்கு ஒரு முறை அடித்து கலக்க வேண்டும். இவ்வாறு நான்கு முறை செய்ய வேண்டும். பின்பு கேக் அலங்கரிக்கப் பயன்படுத்தும் பேஸ்ட்ரி பேக் அல்லது பாலித்தீன் கவரில் மெழுகை நிரப்ப வேண்டும்.

    ஜெல் மெழுகை உருக்கி அதனுடன் தேவையான நிறங்களைச் சேர்த்து கலக்குங்கள். பின்னர் பாரபின் மெழுகை ஊற்றி வைத்திருக்கும் கண்ணாடி டம்ளர்களில், அலங்காரத்திற்காக சில சிலிக்கான் அச்சு வடிவங்களைப் போடுங்கள்.

    அதன்பிறகு ஒரு சிறிய டீஸ்பூன் கொண்டு, உருக்கிய ஜெல் மெழுகை கண்ணாடி டம்ளர்களின் உள்ளே பக்கவாட்டுப் பகுதி வழியாக ஊற்றுங்கள். பேஸ்ட்ரி பேக்கில் நிரப்பிய மெழுகைக் கொண்டு ஐஸ்கிரீம் போல டம்ளரின் மேல் பகுதி வரை வட்ட வட்டமாக நிரப்பிக் கொண்டே வாருங்கள்.

    அலங்காரத்திற்காக அதன் மேல் பூக்கள், செர்ரி. சாக்லேட் போன்ற அச்சு வடிவங்களை ஆங்காங்கே வையுங்கள். மெழுகு கெட்டியாவதற்கு முன்பு அதில் திரியை பொறுத்த வேண்டும். இதன் மேலே உருக்கிய ஜெல் மெழுகை ஊற்றி அதற்கு மேல் உங்களுக்கு விருப்பமான அரோமா எண்ணெய் சில துளிகளை தெளியுங்கள். அவ்வாறு செய்வதால் மெழுகுவர்த்திகள் எரியும் போது நறுமணம் வீசும். இப்போது அழகான ஐஸ்கிரீம் மெழுகுவர்த்திகள் தயார்.

    ×