என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "high power tower stopped"

    • விவசாயிகளுக்கு சொந்தமான விளை நிலங்களில் உயர் மின் கோபுரம் அமைக்கப்பட்டு வருகிறது. கடந்த 2019-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட பணிகள், தற்போது முடிவடையும் நிலையில் உள்ளது.
    • இந்நிலையில், உயர் மின்கோபுரம் அமைக்க இடம் கொடுத்த விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு தொகை வழங்காததால், அமைச்சர் இ.பெரியசாமியிடம் நேரில் சந்தித்து விவசாயிகள் புகார் செய்தனர்.

    செம்பட்டி:

    திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி அருகே, தெற்கு மேட்டுப்பட்டி வழியாக, தூத்துக்குடியில் இருந்து கொச்சின் வரை மின்சாரம் உயர் மின் கோபுரம் மூலம் கொண்டு செல்லப்படுகிறது. செம்பட்டி அடுத்த, வீரக்கல் ஊராட்சிக்கு உட்பட்ட, வீ.கூத்தம்பட்டி, தெற்கு மேட்டுப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதியை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு சொந்தமான விளை நிலங்களில் உயர் மின் கோபுரம் அமைக்கப்பட்டு வருகிறது. கடந்த 2019-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட பணிகள், தற்போது முடிவடையும் நிலையில் உள்ளது.

    இந்நிலையில், உயர் மின்கோபுரம் அமைக்க இடம் கொடுத்த விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு தொகை வழங்காததால், அமைச்சர் இ.பெரியசாமியிடம் நேரில் சந்தித்து விவசாயிகள் புகார் செய்தனர். அதன்பின்னர் அவர், நடவடிக்கை எடுத்ததின் பேரில், விவசாயிகள் சிலருக்கு மட்டும் மின்வாரிய அதிகாரிகள் பணம் வழங்கியுள்ளனர்.

    அதன்பின்னர், மின்வாரிய அதிகாரிகள் அப்பகுதிக்கு செல்லவில்லை. இந்நிலையில் தெற்கு மேட்டுப்பட்டி பகுதிக்கும் சென்ற மின்வாரிய அதிகாரிகளை இடம் கொடுத்த விவசாயிகள் முற்றுகையிட்டு தங்களுக்கு வழங்கவேண்டிய இழப்பீடு தொகையை வழங்கும்படி கூறி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    மேலும் பணிகள் செய்ய விடாமல் அவர்களை திருப்பி அனுப்பி விட்டனர். இந்நிலையில் நேற்று இப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் கொழுந்தான் (58), மாரிமுத்து (45), விக்னேஷ் (25), சரவணன் (42) உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட விவசாயிகள் மீண்டும் மின்வாரிய ஊழியர்களை பணி செய்ய விடாமல் அனுப்பிவிட்டனர்.

    இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில்,

    விவசாயிகளிடம் இடம் கேட்க வரும்போது அதிகாரிகள் உங்கள் இடத்திற்குரிய இழப்பீடு தொகையை உடனடியாக வழங்குகிறோம் என கூறி 3 ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆனால், இதுநாள்வரை முறையாக உரிய இழப்பீடு தொகையை தரவில்லை. அதனால் இங்கு வந்த மின்சாரத்துறை அதிகாரிகளை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினோம். இதுகுறித்து அமைச்சர் இ.பெரியசாமியிடம் புகார் செய்துள்ளோம் என்றனர். இந்நிலையில் மின்வாரிய உதவி பொறியாளர் லெனின் பணிகள் செய்ய விடாமல் தடுத்ததாக தெற்கு மேட்டுப்பட்டி பகுதியை சேர்ந்த விவசாயிகள் மீது செம்பட்டி போலீசில் புகார் செய்துள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×