search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Floods In Courtallam Falls"

    குற்றாலம் அருவிகளில் இன்று 4-வது நாளாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. #Courtallam
    தென்காசி:

    ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் தொடக்கத்திலே குற்றாலத்தில் சீசன் ஆரம்பம் ஆகும். இந்த ஆண்டு மே மாத இறுதியிலேயே சீசன் தொடங்கியது. தொடர்ந்து குற்றாலம் மலைப்பகுதியில் கனமழை பெய்து வந்ததால் அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்தது.

    இதனால் சீசன் களை கட்டியது. இடையிடையே பலத்த மழை பெய்ததால் குற்றாலம் மெயினருவி, ஐந்தருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இடையில் ஓரிரு நாட்கள் மட்டுமே அருவிகளில் தண்ணீர் குறைவாக உள்ளது. தொடர்ந்து கடந்த 2 மாதத்திற்கும் மேலாக சீசன் முழுஅளவில் உள்ளது. இந்த நிலையில் கடந்த 3 நாட்களாக குற்றாலம் மலைப்பகுதியில் இடைவிடாமல் மழை பெய்து வருகிறது.

    இதனால் அருவிகளில் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. குற்றாலம் மெயினருவி, ஐந்தருவி, பழையகுற்றாலம் அருவி, புலியருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் இன்று 4-வது நாளாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

    மெயினருவி, ஐந்தருவி ஆகிய பகுதிகளில் ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர். தொடர்ந்து போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

    குற்றாலம் புலியருவியில் நேற்று முன்தினம் குளிக்க சென்ற வாலிபர் பலியான சம்பவத்தை தொடர்ந்து அங்கு சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. எனினும் புலியருவியில் விழுந்து வரும் ஓடை பகுதியில் வரும் தண்ணீரில் மட்டுமே சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. குற்றாலம் மெயினருவியில் இருந்து வரும் தண்ணீர் சிற்றாற்றில் சேருவதாலும், காட்டாற்று வெள்ளம் காரணமாகவும் சிற்றாறில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    ஆற்றில் இருகரைகளையும் தொட்டபடி தண்ணீர் செல்கிறது. சிற்றாற்று கால்வாய்களிலும் அதிகளவு தண்ணீர் செல்கிறது. இதனால் சிற்றாற்றின் கரையோர பகுதிகளில் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டார்கள்.

    சிற்றாற்று பாசன குளங்களில் உடைப்பு ஏற்படாமல் இருக்க அதிகாரிகள் பல்வேறு குழுக்களாக சென்று கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். #Courtallam
    மலைப்பகுதியில் பெய்துவரும் கன மழை காரணமாக ஐந்தருவி, பழைய குற்றால அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் குளிக்க தடை விதிக்கப்பட்டது. #courtallam
    தென்காசி:

    தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்ததை தொடர்ந்து மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை பெய்து வருகிறது. குற்றாலத்தில் ஆண்டுதோறும் ஜூன் மாத தொடக்கத்தில் இருந்து ஆகஸ்டு மாதம் இறுதி வரை சீசன் இருக்கும். இந்த ஆண்டு மே மேத இறுதியிலேயே சீசன் தொடங்கியது. தொடர்ந்து வழக்கத்தை விட சீசன் ரம்மியமாக உள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    மலைப்பகுதியில் அவ்வப்போது கன மழை பெய்வதால் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வருகிறது. நேற்று குற்றாலம் மெயினருவி, ஐந்தருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. இந்த நிலையில் நேற்று இரவு முதல் குற்றாலம் மலைப்பகுதியில் கன மழை பெய்து வருகிறது. இதனால் குற்றாலம் மெயினருவியில் நள்ளிரவு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    இன்று காலையும் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. இதேபோல் ஐந்தருவி, பழைய குற்றால அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், அங்கும் குளிக்க தடை விதிக்கப்பட்டது. இதை தொடர்ந்து போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

    குற்றாலத்தில் இன்று வழக்கத்தை விட சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. அருவிகளில் வெள்ளம் காரணமாக அவர்கள் குளிக்க முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர். புலியருவி, சிற்ற‌ருவி ஆகிய 2 அருவிகளிலும் மிதமான தண்ணீர் விழுவதால் அங்கு சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்ப‌ட்டனர். இதனால் சுற்றுலா பயணிகள் அந்த அருவிகளுக்கு படையெடுத்தனர். வெள்ளம் சற்று குறைந்தாலும் குளிக்க அனுமதி கிடைக்கும் என சுற்றுலா பயணிகள் அருவிக்கரையில் காத்து நின்றனர்.

    தொடர்ந்து குற்றாலம் மலைப்பகுதியில் கன மழை பெய்து வருகிறது. தொடர் மழை காரணமாக குற்றாலம் சுற்றுப்பகுதியில் உள்ள குளங்களும் நிரம்பியுள்ளன.  #courtallam


    மலைப்பகுதியில் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருவதால் மெயினருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவிகளில் குளிக்க விதிக்கப்பட்ட தடை இன்று 2-வது நாளாக நீடித்தது.
    தென்காசி:

    கேரளாவில் தென்மேற்கு பருவ மழை பெய்யத் தொடங்கியதும் குற்றாலத்தில் சீசன் ஆரம்பிக்கும். ஒவ்வொரு ஆண்டும் ஜூன், ஜூலை, ஆகஸ்டு ஆகிய 3 மாதங்கள் குற்றாலத்தில் சீசன் நிலவும். சீசன் காலத்தில் அவ்வப்போது சாரல் மழை பெய்து குளிர்ச்சியான தட்ப வெப்ப நிலை நிலவும்.

    மேலும் மெயினருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டும். அருவிகளில் குளிக்கவும், குற்றால சீசனை அனுபவிக்கவும் சீசன் காலத்தில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மட்டுமின்றி, பல்வேறு மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் குற்றாலம் வருவார்கள்.

    இந்த ஆண்டு குற்றால சீசன் மே மாத இறுதியிலேயே தொடங்கி விட்டது. அப்போது முதல் ஜூன் மாத இறுதி வரை குற்றாலத்தில் சீசன் அருமையாக இருந்தது. அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டியபடி இருந்தது.

    இந்த மாத தொடக்கத்தில் தொடர்ந்து வெயில் அடித்ததால் குற்றால அருவிகளில் தண்ணீர் குறைந்தது. இருந்தபோதிலும் 2-வது வாரத்தில் சீசன் மீண்டும் களை கட்டியது. அதிலிருந்து அருவி களில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. இந்நிலையில் குற்றாலம் மலைப் பகுதி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது.

    அதிலும் மலைப்பகுதியில் தொடர்ந்து பலத்த மழை பெய்ததால் மெயினருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவி உள்ளிட்ட அருவிகளில் நேற்று வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. தொடர்ந்து மழை பெய்வதால் அருவிகளில் இன்றும் வெள்ளப்பெருக்கு குறையவில்லை.

    மெயினருவியில் ஆர்ச்சை தாண்டி தண்ணீர் அதிகளவில் கொட்டுகிறது. இதே போல் ஐந்தருவியில் 5 கிளைகளிலும் தண்ணீர் அதிகளவில் விழுகிறது. பழைய குற்றால அருவியிலும் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    இதனால் மெயினருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவிகளில் குளிக்க விதிக்கப்பட்ட தடை இன்று 2-வது நாளாக நீடித்தது. அருவிகளில் குளிக்க வந்த சுற்றுலா பயணிகள் குளிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

    புலியருவியில் அதிக அளவு தண்ணீர் விழுந்த போதிலும் அங்கு மட்டும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். இதையடுத்து சுற்றுலா பயணிகள் அனைவரும் புலியருவிக்கு சென்றனர். ஏராளமான வாகனங்கள் சென்றதால் புலியருவி பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அருவியிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது.

    குற்றாலம் பகுதியில் மட்டுமின்றி தென்காசி, செங்கோட்டை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மேலும் காற்றும் வேகமாக அடிக்கிறது. இதனால் பல இடங்களில் மரங்கள் விழுந்தன. மின் கம்பிகள் அறுந்ததால் அடிக்கடி மின்தடை ஏற்பட்டது.

    குற்றாலம் பராசக்தி கல்லூரி அருகே இருந்த பழமையான பெரிய மருதமரம் காற்றுக்கு வேரோடு சாய்ந்தது. அந்த மரம் அங்கிருந்த டிரான்ஸ்பார்மர் மீது விழுந்தது. இதையடுத்து மின்வாரிய ஊழியர்கள் அங்கு சென்று டிரான்ஸ்பார்மர் மீது விழுந்த மரத்தை வெட்டி அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

    ×