search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Farmer Labor Party"

    • ஊராட்சி செயலாளர் தங்க பாண்டியன் என்பவர் அந்த விவசாயியை காலால் எட்டி உதைத்த சம்பவம் ஜனநாயக விரோத செயல்.
    • இது போன்ற நிகழ்வுகள் நிகழாத வண்ணம் அந்த ஊராட்சி செயலாளர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    பல்லடம்:

    விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது பிள்ளையார்குளம் ஊராட்சி. இங்கு காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் விவசாயி அம்மையப்பன் என்பவர் பேசி கொண்டு இருந்தபோது ஊராட்சி செயலாளர் தங்கப்பாண்டியன் என்பவர் அவரை காலால் எட்டி உதைத்து தாக்கியதாக கூறப்படுகிறது.

    இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், கிராம சபை கூட்டத்தில் விவசாயி தாக்கப்பட்டதற்கு உழவர் உழைப்பாளர் கட்சித் தலைவர் செல்லமுத்து கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் பல்லடத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

    விருதுநகர் மாவட்டம்,பிள்ளையார் குளம் ஊராட்சி, கங்கா குலம் கிராமத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயி அம்மையப்பன் கேட்ட நியாயமான கேள்விகளுக்கு பதிலளிக்காமல் ஊராட்சி செயலாளர் தங்க பாண்டியன் என்பவர் அந்த விவசாயியை காலால் எட்டி உதைத்த சம்பவம் ஜனநாயக விரோத செயல்.

    இது மொத்த விவசாயிகளையும் அவமதிக்கின்ற செயலாகவே கருதப்படுகிறது. கிராம சபை கூட்டம் என்பது மக்கள் கேள்வி கேட்பதற்கே என்பது கூட தெரியாமல் ஒரு அரசு ஊழியர் இருப்பதா? எனவே விவசாயியை தாக்கிய அந்த ஊராட்சி செயலாளரின் மீது தமிழக அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் காயம் பட்ட அந்த விவசாயின் மருத்துவ செலவுகளை அரசு ஏற்க வேண்டும்.

    இனியும் இது போன்ற நிகழ்வுகள் நிகழாத வண்ணம் அந்த ஊராட்சி செயலாளர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் இவ்வாறு அவர் தெரிவித்தார். இது குறித்து தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனர் வழக்கறிஞர் ஈசன் முருகசாமி கூறியதாவது:-

    விருதுநகர் மாவட்டம், பிள்ளையார் குளம் ஊராட்சி, கங்கா குலம் கிராமத்தில் நடைபெற்ற கிராம சபையில் மிகவும் பொறுமையாக, நிதானமாக கேள்வி கேட்டவிவசாயி அம்மையப்பனை காலால் எட்டி உதைத்து, கடுமையாக தாக்கிய ஊராட்சி செயலர் தங்க பாண்டியனை நிரந்தரமாக பணி நீக்கம் செய்ய வேண்டும், வழக்கு பதிவு செய்து சிறையில் அடைக்க வேண்டும், அரசு ஊழியரால் ஏற்பட்ட அவமானத்தால் பாதிக்கப்பட்ட விவசாயி அம்மையப்பனுக்கு ரூ. 10லட்சம் தமிழ்நாடு அரசு இழப்பீடாக வழங்க வேண்டும்.

    அரசு ஊழியரால் பாதிக்கப்பட்ட விவசாயி அம்மையப்பனுக்கு உரிய நீதி கிடைக்கவில்லை என்றால் தமிழக விவசாயிகள் சங்கம் போராட்டத்தில் குதிக்க தயங்காது இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    ×