search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ex ayyappan mla"

    தி.மு.க.வில் இணைய உள்ள முன்னாள் எம்.எல்.ஏ. அய்யப்பன் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    கடலூர்:

    கடலூர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க.  அவைத் தலைவராக முன்னாள் எம்.எல்.ஏ. அய்யப்பன் இருந்து வருகிறார். இவருக்கும், கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளரும், அமைச்சருமான எம்.சி.சம்பத்துக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்து வந்தது. வருகிற 11-ந் தேதி தி.மு.க. தலைவர் ஸ்டாலின் பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு வடலூர் பகுதியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார். அப்போது அய்யப்பன் தலைமையில் அவரது ஆதரவாளர்கள் தி.மு.க.வில் இணைய உள்ளதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் முன்னாள் எம்.எல்.ஏ. அய்யப்பன் வீட்டுக்கு இன்று மதியம் 1 மணிக்கு வருமான வரித்துறை அதிகாரிகளும் தேர்தல் பறக்கும் படை தாசில்தார் கீதா மற்றும் பறக்கும் படையினரும் ஜீப்பில் வந்தனர். இதனை தொடர்ந்து கடலூர் போலீசார் 10-க்கும் மேற்பட்டோர் முன்னாள் எம்.எல்.ஏ. அய்யப்பன் வீட்டுக்கு வந்தனர்.

    இதையடுத்து வருமானவரி துறை அதிகாரிகள் அதிரடியாக அய்யப்பன் வீட்டுக்குள் சென்றனர். அப்போது வீட்டின் முன்பு திரண்டு இருந்த அய்யப்பன் ஆதரவாளர்கள் வருமான வரித்துறை அதிகாரிகளை பார்த்து, என்ன காரணத்திற்காக இங்கே வந்து உள்ளீர்கள்? என கேட்டனர். அதற்கு, நாங்கள் வீட்டை சோதனை செய்ய வந்துள்ளோம் என கூறினார்கள். இதனை பார்த்த முன்னாள் எம்.எல்.ஏ. அய்யப்பன், அதிகாரிகளிடம் வீட்டை சோதனை செய்யலாம் என்றார். 

    இதன் பின்னர் அதிகாரிகள் அதிரடியாக வீட்டுக்குள் நுழைந்து சோதனை செய்ய தொடங்கினர். அப்போது வீட்டின் முன்புற கதவு மூடப்பட்டது. மேலும் நிர்வாகிகள் யாருக்கும் தெரியாமல் இருக்க வெளிப்புற கதவையும் போலீசார் மூடினார்கள். அ.தி.மு.க.வில் இருந்து முன்னாள் எம்.எல்.ஏ. அய்யப்பன் தி.மு.க.வுக்கு செல்ல உள்ள நிலையில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையிட்ட சம்பவம் கடலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
    ×