search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "devotees"

    • படிப்பாதை, யானைப்பாதை, மின்இழுவை ரெயில் நிலையம், ரோப்கார் உள்ளிட்ட இடங்களில் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.
    • முகூர்த்த தினத்தையொட்டி பல்வேறு விஷேசங்கள் நடைபெற்றதால் திருமண மண்டபங்களிலும் கூட்டம் அலைமோதியது.

    பழனி:

    தமிழ் கடவுள் முருகனின் 3ம் படை வீடான பழனிக்கு தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். வருடம் முழுவதும் திருவிழாக்கோலம் பூண்டிருக்கும் பழனியில் தைப்பூசம், பங்குனி உத்திரம், வைகாசி விசாகம் உள்ளிட்டவை பிரசித்தி பெற்றவையாகும்.

    இதில் பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர். தற்போது கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர். கேரளாவில் இருந்து அதிக அளவு பக்தர்கள் வந்திருந்தனர். மேலும் இன்று முகூர்த்த தினம் என்பதால் அடிவாரம், கிரிவீதி, பஸ்நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான பக்தர்கள் திரண்டனர்.

    மேலும் நகர் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனை போலீசார் சீரமைத்தனர். படிப்பாதை, யானைப்பாதை, மின்இழுவை ரெயில் நிலையம், ரோப்கார் உள்ளிட்ட இடங்களில் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தபோதும் மலைக்கோவிலில் நீண்டநேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

    பக்தர்கள் வசதிக்காக மலைக்கோவிலில் மேட் விரிக்கப்பட்டிருந்தது. மேலும் அதில் தண்ணீர் தெளிக்கப்பட்டிருந்ததால் வெப்பத்தின் தாக்கம் ஓரளவு குறைந்தது. இதனால் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய எளிதாக இருந்தது. மேலும் பஸ்நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. முகூர்த்த தினத்தையொட்டி பல்வேறு விஷேசங்கள் நடைபெற்றதால் திருமண மண்டபங்களிலும் கூட்டம் அலைமோதியது.

    • மகரிஷிகளும், தேவர்களும் பகவானின் பாதங்களில் தங்களின் திருமுடிகள் படும்படி நமஸ்கரித்து வணங்குகிறார்கள்.
    • தர்மத்தை நிலைநாட்ட ராமாவதாரம் நிகழும்போது சக்கரமும், சங்கும் என் சகோதரர்களாக பரதன், சத்ருக்கனன் என்ற பெயர்களில் அவதரிப்பார்கள்.

    பெருமாளை சேவித்த பிறகு பக்தர்களுக்கு ஆசிர்வாதம் செய்ய தலையில் வைக்கும் சடாரி என்ற மகுடத்தை கவனித்து பார்த்தால் அதன் மேல் இரண்டு பாதச் சுவடுகள் பொறிக்கப்பட்டிருப்பதைக் காணலாம். மதிப்புக்குரிய திருமுடியின் மீது திருவடிகள் ஏன் இடம் பெற்றிருக்கிறது. அதிலும் பெருமாள் ஆலயங்களில் அதனை பயன்படுத்துவதற்கான காரணத்தை அறிவோம்.

    ஒரு சமயம் தாம் வாசம் செய்யும் வைகுண்டத்தில் ஸ்ரீமன் நாராயணன் சயன நிலைக்குச் செல்ல ஆயத்தமாகும் முன் தன்னுடைய சங்கு, சக்கரம், திருமுடி ஆகியவற்றை எடுத்து ஆதிசேஷன் மீது வைத்தார்.

    திடீரென தன்னை சந்திக்க வந்த முனிவர்கள் குரல் கேட்டு பாம்பு படுக்கையில் இருந்து அவசரமாக எழுந்து சென்றவர் வழக்கத்துக்கு மாறாக தனது பாதுகைகளை ஆதிசேஷன் அருகில் சயன அறைக்குள்ளையே விட்டுவிட்டார். ஆதிசேஷன் மீது ஒய்யாரமாக சங்கும், சக்கரமும், கிரீடமும் அமர்ந்திருந்தன. அருகிலேயே பாதுகைகளும் இருந்தது அவற்றுக்குப் பிடிக்கவில்லை. அவை பாதுகைகளை பார்த்து கோபத்துடன், 'கவுரவத்தால் உயர்ந்த நாங்கள் இருக்கும் இடத்தில் தூசியிலே புரளும் நீ எப்படி இங்கு இருக்கலாம்?' என்று கேட்டன.


    ''இது எங்கள் தவறில்லை. பகவான்தான் எங்களை இங்கே விட்டுச் சென்றார்'' என்றன பாதுகைகள். அவற்றைக் காதில் வாங்காமல், ''பகவான் திருமுடியை அலங்கரிப்பவன் நான். கரங்களை அலங்கரிப்பவர்கள் சங்கும், சக்கரமும். எனவே, ஆதிசேஷன் மீது அமரும் அருகதை எங்களுக்கு மட்டுமே உண்டு. பாதங்களை அலங்கரிக்கும் பாதுகைகளான உங்களுக்கு இங்கே இருக்க அருகதை இல்லை. உங்கள் வழக்கமான இடத்திற்கு போய்விடுங்கள்'' என்று கோபத்துடன் சொன்னது கிரீடம்.

    அதுவரை பொறுமையாக இருந்த பாதுகைகள், கிரீடம் இப்படி சொன்னதும் கோபத்துடன், "நாங்கள் பாதங்களை அலங்கரிப்பவர்கள்தான். ஆனால், கேவலமானவர்கள் அல்ல. மகரிஷிகளும், தேவர்களும் பகவானின் பாதங்களில் தங்களின் திருமுடிகள் படும்படி நமஸ்கரித்து வணங்குகிறார்கள். தவிர, உங்களை தழுவி தரிசிப்பதில்லை. புனிதமான திருவடிகளை அலங்கரிக்கும் நாங்களும் புனிதமானவர்கள்தான்'' என்று பதிலுக்கு வாதித்தனர்.

    கிரீடத்துடன் சங்கு, சக்கரமும் சேர்ந்து கொண்டதால் தனித்து நின்ற பாதுகைகளால் ஏளனப் பேச்சை தாங்கிக்கொள்ள முடியாமல் பகவான் எப்போது வருவார், அவரிடம் முறையிடலாம் என்று கலங்கிக் காத்து நின்றன. பகவான் வந்ததும் அவர் பாதத்தில் கண்ணீர் சிந்தி பாதுகைகள் முறையிட்டன. ''இங்கே நடந்ததை நான் அறிவேன். என் சன்னிதியில் ஏற்றத்தாழ்வுகள் கிடையாது என்பதை உணராமல் கிரீடமும், சங்கும், சக்கரமும் கர்வம் கொண்டு புனிதமான உங்களை தூற்றியதற்கான பலனை அனுபவிக்க வேண்டி வரும்.


    தர்மத்தை நிலைநாட்ட ராமாவதாரம் நிகழும்போது சக்கரமும், சங்கும் என் சகோதரர்களாக பரதன், சத்ருக்கனன் என்ற பெயர்களில் அவதரிப்பார்கள். அந்த அவதாரத்தில் நான் அரசப்பதவியை ஏற்று சிம்மாசனத்தில் அமர முடியாத ஒரு சூழல் ஏற்படும். அப்போது இந்தத் திருமுடியை சிம்மாசனத்தில் வைத்து அதன் மீது பாதுகைகளான உங்களை வைத்து சங்கும், சக்கரமும் 14 வருடங்கள் உங்களை பூஜிப்பார்கள். அவரவர் வினைக்கேற்ப அவரவர் தேடிக் கொள்ளும் பயன் இது'' என்றார்.

    அதன்படியே ஸ்ரீராமாவதாரத்தில் அவரது பாதுகைகள் சிம்மாசனத்தில் அமர்ந்து ஆட்சி புரிந்தன. திருமுடி ஒருவகையில் உயர்ந்தது எனில், பெருமாளின் திருப்பாதங்களை அலங்கரிக்கும் பாதுகைகளும் மற்றொரு வகையில் உயர்ந்தவையே.

    இன்னும் சொல்லப்போனால் பாதம் பற்றி சரணாகதி அடையும் விதமாக நமது பார்வை பெருமாளின் திருப்பாதங்களையே முதலில் நாடும். பாதச்சுவடுகள் தாங்கிய சடாரி எனும் மகுடத்தை நம் தலையில் வைத்துக் கொள்ளும்போது நம்முடைய, 'நான்' என்று ஆணவம், அகங்காரம் அழிய வேண்டும் என்பதே சடாரி சாத்தலின் பின்னணியில் உள்ள காரணம்.

    • தென்பெண்ணை ஆற்றங்கரையோரம், நூற்றாண்டு பழமை வாய்ந்த அனுமன்தீஸ்வரர் கோவில் உள்ளது.
    • கடந்த ஒரு மாதமாக அனுமன் தீர்த்தம் தென்பெண்ணை ஆறு வற்றியுள்ளதால் கோவிலுக்கு வருவோர் குளிக்க முடியாமல் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

    மத்தூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த அனுமன்தீர்த்தம் தென்பெண்ணை ஆறு வறண்டு காணப்படுவதால், ஆஞ்சநேயர் கோவிலுக்கு வரும் பக்தர்கள், குளிக்க முடியாமல் அவதியடைந்து வருகின்றனர்.

    கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி மாவட்ட எல்லையில் தென்பெண்ணை ஆற்றின் கரையில் உள்ளது அனுமான் தீர்த்தம். இங்கு தென்பெண்ணை ஆற்றங்கரையோரம், நூற்றாண்டு பழமை வாய்ந்த அனுமன் தீஸ்வரர் கோவில் உள்ளது.

    தருமபுரி, கிருஷ்ணகிரி மற்றும் வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர் மாவட்டங்களை சேர்ந்தவர்களும், கர்நாடகா மற்றும் ஆந்திரா மாநிலங்களைச் சேர்ந்த ஏராளமானோர் இங்கு வருவர்கள். இவர்கள் ஆற்றில் குளித்து விட்டு அனுமன் கோவிலில் சாமி தரிசனம் செய்வார்கள், இந்நிலையில், கே.ஆர்.பி., அணையில் இருந்த ஆற்றில் தண்ணீர் திறந்து விடுவது தற்போது வறட்சி என்பதால் நிறுத்தப்பட்டது.

    கே.ஆர்.பி அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக தற்போது திறந்து விடப்படும் தண்ணீர், அரசம்பட்டி வரை மட்டுமே செல்கிறது. இதனால், கடந்த ஒரு மாதமாக அனுமன் தீர்த்தம் தென்பெண்ணை ஆறு வற்றியுள்ளதால் கோவிலுக்கு வருவோர் குளிக்க முடியாமல் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

    தற்பொழுது கோவில் நிர்வாகம் சார்பாக தண்ணீர் தனியாக பைப்புகள் அமைக்கப்பட்டு பக்தர்கள் குளிப்பதற்காக காலையில் குறித்த நேரத்துக்கு மட்டும் தண்ணீர் விடுதொக கூறப்படுகிறது. மேலும் இந்த பைப்புகளில் ஆண்கள், பெண்கள் என இருபாலரும் ஒரே இடத்தில் குளிப்பதால் பெண்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். எனவே பெண்களுக்கு தனியாக குளிப்பதற்கு அறைகளை ஏற்படுத்தி தர வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • காணிக்கையாக செலுத்திய 300 ஆடுகளை வெட்டி பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
    • விழாக்குழுவினர் ஏராளமானோர் கலந்து கொண்டு அசைவ உணவை தயார் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

    பழனி:

    திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே, மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் கோம்பையட்டிகிராமம் உள்ளது. இங்கு 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில், பழமை வாய்த்த பிரசித்தி பெற்ற பெரியதுரையான் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டு தோறும் சித்திரை திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான சித்திரைத் திருவிழா தீர்த்தம் கொண்டு வருதல் நிகழ்ச்சி நடந்தது. இதைத்தொடர்ந்து கோவிலில் உள்ள விநாயகர், கருப்பண்ணசாமி, மூலவர், நவகிரக சாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பக்தர்களுக்கு மாபெரும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதற்காக காணிக்கையாக செலுத்திய 300 ஆடுகளை வெட்டி பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். இதேபோல் கோழிகளையும் பக்தர்கள் கருப்பண்ணசாமிக்கு பலியிட்டனர். இதைத்தொடர்ந்து அருகிலேயே ஆடுகள் உறிக்கப்பட்டு இறைச்சியாக்கப்பட்டது. கோழி இறைச்சியும் தயாரானது. அதன்பிறகு கோவில் வளாகத்திலேயே சமையல் செய்யும் பணியும் நடந்தது. இதற்காக விழாக்குழுவினர் ஏராளமானோர் கலந்து கொண்டு அசைவ உணவை தயார் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

    மேலும் அங்கு சாப்பாடு சமைக்கப்பட்டு மலை போல் குவித்து வைக்கப்பட்டது. ஆட்டிறைச்சி, கோழி இறைச்சி குழம்பும் தயாரானது. இதைத்தொடர்ந்து அன்னதானம் தொடங்கியது. மதியம் தொடங்கிய அன்னதானம் மாலை வரை நடைபெற்றது. இதில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். இது குறித்து கோம்பைப்பட்டி பகுதியை சேர்ந்த துரைச்சாமி என்பவர் கூறுகையில், சித்திரை திருவிழா அன்று மழை வேண்டி 100க்கும் மேற்பட்ட கிடாய்கள் வெட்டப்படும். இந்த ஆண்டு நடைபெற்ற திருவிழாவின் போது நேற்று மழை பெய்தது. இதனால் விவசாயிகள் மற்றும் கோம்பைப்பட்டி பகுதி பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர் என்றார்.

    • கடந்த சில மாதங்களாக கோவிலில் திருப்பணி வேலைகள் நடைபெற்று வருகிறது.
    • கோவில் வளாகத்தில் போதிய இட வசதி இல்லாததினால் பக்தர்கள் கூட்டம் கொழுத்தும் வெயிலையும் பொருப்படுத்தாமல் கடற்கரையில் குவிகின்றனர்.

    திருச்செந்தூர்:

    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கிறார்கள்.

    இந்த கோவில் குரு தலமாகவும், பரிகார தலமாகவும் விளங்கி வருவதாலும் பரிகார பூஜைகள், திருமணங்கள் மற்றும் சிறப்பு வழிபாடு செய்ய மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து நாளுக்கு நாள் ஏராளமான பக்தர்கள் காலையில் இருந்தே கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.

    கடந்த சில மாதங்களாக கோவிலில் திருப்பணி வேலைகள் நடைபெற்று வருகிறது. இதனால் கோவில் வளாகத்தில் போதிய இட வசதி இல்லாததினால் பக்தர்கள் கூட்டம் கொழுத்தும் வெயிலையும் பொருப்படுத்தாமல் கடற்கரையில் குவிகின்றனர்.

    தற்போது பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதாலும், ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளான இன்று திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் காலையில் இருந்தே ஏராளமான பக்தர்கள் கடலில் புனித நீராடி நீண்ட வரிசையில் சுமார் 4 மணிநேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

    இக்கோவில் அருகில் வாகனங்கள் நிறுத்த போதிய இடவசதி இல்லாததினால் பக்தர்கள் தங்கள் வந்த வாகனங்களை கோவில் அருகில் உள்ள தெருக்களில் நிறுத்தி செல்வதால் அந்த பகுதி மக்கள் தங்கள் அவசர தேவைக்கு வெளியே வரமுடியாத நிலை உள்ளது. 

    கோவில் முன்பு அலைமோதிய பக்தர்கள் கூட்டத்தின் ஒரு பகுதியை காணலாம்.

    கோவில் முன்பு அலைமோதிய பக்தர்கள் கூட்டத்தின் ஒரு பகுதியை காணலாம்.

    இதனால் விடுமுறை தினங்கள் மற்றும் கூட்டம் அதிகமாக காணப்படும் நேரங்களில் கோவில் அருகில் உள்ள தெரு இளைஞர்கள் தங்கள் தெருவுக்கு வரும் பாதைகளை அவர்களே பேரிகாட் அமைத்து தடுக்கின்றனர்.

    மேலும் ஏராளமான வாகனங்கள் தெப்பகுளத்தில் இருந்து சுமார் 1 கிலோமீட்டர் வரை சாலையின் இருபக்கங்களிலும் நிறுத்தி விடுகின்றனர். இதனால் எதிர் எதிரே வரும் வாகனங்களுக்கு வழி விட முடியாமல் போக்குவரத்து ஸ்தம்பித்து விடுகிறது. இதற்கு போக்குவரத்து போலீசார் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

    • அம்மன் குறி சொல்லும் நிகழ்வும் நடைபெற்று வருகிறது.
    • கடந்த 3 ஆண்டுகளாக அம்மன் மீது சூரிய ஒளிபடும் நிகழ்வு தன்னிச்சையாக நடைபெற்றது.

    சின்னமனூர்:

    தேனி மாவட்டம் சின்னமனூர் அருகில் உள்ள தாடிச்சோரி பகுதி மக்கள் பஞ்சம் ஏற்பட்டதால் கடந்த 150 ஆண்டுகளுக்கு முன்பு மூர்த்தி நாயக்கன்பட்டிக்கு இடம் பெயர்ந்தனர். சில வருடங்கள் கழித்து மீண்டும் தாடிசேரி சென்று சூடம்மாள் அம்மனை வழிபட்ட இடத்தில் இருந்து சிறிது கைப்பிடி மண் எடுத்து வந்து மூர்த்தி நாயக்கன்பட்டியில் சிறிதாக கோவில் எழுப்பி வழிபட்டனர்.

    இவ்வாறு உருவான அம்மன் ஊர் மக்களுக்கு கேட்கும் வரத்தை கொடுத்து மிகுந்த சக்தி வாய்ந்த அம்மனாக சூடம்மாள் விளங்கினார். 100 ஆண்டுகளுக்கு பழமையான அம்மன் சன்னதியில் சில வருடங்களுக்கு முன்பு ராஜ கோபுரம் அமைத்து ஊர் மக்கள் விழா எடுத்து சிறப்பாக வழிபட்டு வருகின்றனர்.

    ஒவ்வொரு வருடமும் மாசி மாதம் 2ம் தேதி 3 நாட்கள் திருவிழா எடுத்து வழிபடுகின்றனர். அம்மன் குறி சொல்லும் நிகழ்வும் நடைபெற்று வருகிறது. தற்பொழுது ராஜகோபுரம் கட்டிய பின்பு கடந்த 3 ஆண்டுகளாக அம்மன் மீது சூரிய ஒளிபடும் நிகழ்வு தன்னிச்சையாக நடைபெற்றது.

    இது எவ்வாறு நடைபெறுகிறது என்று தெரியவில்லை ஆனால் சூரிய பகவான் அம்மனை வழிபடுவதை போன்று தத்ரூபமாக சூரிய ஒளி அம்மன் பாதங்களில் விழுகிறது. இதனை சுற்று வட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் கண்டு வழிபட்டனர்.

    • வைகை ஆற்றில் இறங்குவதற்காக கள்ளழகர் மதுரை வந்தடைந்தார்.
    • ஏராளமான பக்தர்கள் திரண்டு அழகரை எதிர்கொண்டு வரவேற்றனர்.

    மதுரை:

    இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழா கடந்த 12-ந்தேதி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    அழகர்கோவில் சார்பில் தல்லாகுளம் பெருமாள் கோவிலில் கடந்த 8-ந் தேதி முகூர்த்தக்கால் ஊன்றி திருவிழா ஆரம்பமானது.

    மீனாட்சி அம்மன் கோவிலில் கடந்த 19-ந்தேதி பட்டாபிஷேகமும், 20-ந்தேதி திக்கு விஜயமும் நடந்தன. மீனாட்சி அம்மன்-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நேற்று முன்தினமும், நேற்று காலை தேரோட்டமும் கோலாகலமாக நடைபெற்றன.

    சித்திரை திருவிழாவுக்காக அழகர்மலையில் இருந்து சுந்தரராஜ பெருமாள், கள்ளழகர் வேடம் பூண்டு கண்டாங்கி பட்டு உடுத்தி, கையில் கைத்தடி, நேரிக்கம்பு ஏந்தி தங்கப்பல்லக்கில் நேற்று முன்தினம் மாலை மதுரையை நோக்கி புறப்பட்டார்.

    பொய்கைக்கரைப்பட்டி, கள்ளந்திரி, அப்பன்திருப்பதி, கடச்சனேந்தல் பகுதிகளில் உள்ள மண்டபங்களில் எழுந்தருளி நேற்று காலை 6 மணி அளவில் மதுரையை அடுத்த மூன்றுமாவடிக்கு வந்தார்.

    அங்கு கள்ளழகரை வரவேற்கும் எதிர்சேவை நடந்தது. அழகர்வேடம் அணிந்த பக்தர்கள், தோல் பைகளில் இருந்த தண்ணீரை பீய்ச்சி அடித்து, கள்ளழகரை வர்ணித்து பாடல்கள் பாடி அதிர்வேட்டுகள் முழங்க எதிர்கொண்டு வரவேற்றனர். பின்னர் அங்கிருந்து புதூர், டி.ஆர்.ஓ. காலனி, ரிசர்வ்லைன், ரேஸ்கோர்ஸ், அவுட்போஸ்ட் வழியாக வழிநெடுகிலும் அமைக்கப்பட்டு இருந்த மண்டகப்படிகளில் கள்ளழகர் எழுந்தருளினார். கள்ளழகர் வருகையால் மதுரை மகிழ்ச்சி வெள்ளத்தில் திளைக்கிறது.

    நேற்று இரவு 10 மணியளவில் தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாசலபதி கோவிலுக்கு வந்தார். நள்ளிரவில் திருமஞ்சனமாகி தங்கக்குதிரை வாகனத்தில் எழுந்தருளினார். ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து ஆண்டாள் சூடிக்கொடுத்து கொண்டு வரப்பட்ட மாலை, கள்ளழகருக்கு அணிவிக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

    பின்னர் இன்று அதிகாலை 2.30 மணி அளவில் தல்லாகுளம் கருப்பணசாமி கோவிலுக்கு வந்து, தங்கக்குதிரையில் அமர்ந்தவாறே ஆயிரம் பொன் சப்பரத்தில் கள்ளழகர் எழுந்தருளினார். அதன்பின் 3 மணிக்கு வைகை ஆற்றை நோக்கி புறப்பட்டார்.

    இந்நிலையில் இன்று அதிகாலை தங்கக்குதிரை வாகனத்தில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார். முன்னதாக வண்டியூர் வீரராகவப்பெருமாள் முன்கூட்டியே அங்கு வந்திருந்து கள்ளழகரை வரவேற்க எழுந்தருளி இருந்தார். இதனைத்தொடர்ந்து கள்ளழகர் வைகை ஆற்றில் பக்தர்களுக்கு காட்சி அளித்து வருகிறார்.

    வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் அந்த கண்கொள்ளா காட்சியை கண்டு தரிசிப்பதை பக்தர்கள் பெரும் பாக்கியமாக கருதுகிறார்கள்.

    அந்த உன்னத காட்சியை காண மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம், தேனி மாவட்டங்கள் உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பல லட்சம் பக்தர்கள் மதுரை மாநகரில் குவிந்துள்ளனர்.

    வைகை ஆற்றில் நேற்று இரவு முதலே பக்தர்கள் கூட தொடங்கினர். கள்ளழகர் வேடம் அணிந்த பக்தர்கள் விடிய, விடிய கள்ளழகரை வர்ணனை செய்து ஆடிப்பாடி மகிழ்ந்தனர். தீப்பந்தம் ஏந்தியும், தோலினால் செய்த பைகளில் தண்ணீரை நிரப்பி பீய்ச்சி அடித்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    • கோவிலுக்கு நாள் ஒன்றுக்கு சராசரியாக ஒரு லட்சம் பேர் வருவதாக கணக்கிடப்பட்டுள்ளது.
    • ஒரே நேரத்தில் 25 ஆயிரம் பேர் தங்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    அயோத்தி:

    உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் கடந்த ஜனவரி மாதம் 22-ந்தேதி பாலராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. பிரமாண்டமாக நடத்தப்பட்ட இந்த நிகழ்வில் பிரபலங்கள் உள்பட லட்சக்கணக்கானோர் கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து தினமும் ஏராளமான பக்தர்கள் பாலராமரை தரிசனம் செய்து வருகின்றனர்.

    இதுகுறித்து ஸ்ரீராம ஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா பொதுசெயலாளர் சம்பத் ராய் கூறியதாவது:-

    அயோத்தி ராமர் கோவிலில் பால ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்ட நாள்முதல் இதுவரை 1½ கோடி பேர் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்து ராமபிரானை தரிசித்துள்ளனர். கோவிலுக்கு நாள் ஒன்றுக்கு சராசரியாக ஒரு லட்சம் பேர் வருவதாக கணக்கிடப்பட்டுள்ளது.

    கோவில் கீழ்தளம் கட்டுமான பணி முழு அளவில் முடிந்துள்ளது. முதல் தளத்தில் விடுபட்ட கட்டுமான பணி வேகமாக நடந்து வருகிறது.

    கோவிலை சுற்றி 14 அடி உயரத்தில் காம்பவுண்டு சுவர் விரைவில் கட்டி முடிக்கப்படும். கோவில் வளாகத்தில் 600 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. இதனை உள்ளூர் மக்களே அவரவர் அக்கறை எடுத்து தண்ணீர் ஊற்றி பராமரித்து வருகின்றனர். ஒரே நேரத்தில் 25 ஆயிரம் பேர் தங்கும் வசதி ஏற்படுத்தப் பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • பவுர்ணமி நாட்களில் கிரிவலம் செல்லும் பக்தர்கள் கூட்ட எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
    • முன்னேற்பாடு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளையும் விரைந்து செயல்படுத்த வேண்டும்.

    சென்னை:

    பா.ம.க. கவுரவ தலைவர் ஜி.கே.மணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    திருவண்ணாமலையில் பவுர்ணமி நாட்களில் கிரிவலம் செல்லும் பக்தர்கள் கூட்ட எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதன் அடிப்படையில் நாளை சித்ரா பவுர்ணமி (செவ்வாய்க்கிழமை) அதிகாலையில் 4.16 மணி முதல் அடுத்த நாள் 24-ந்தேதி அதிகாலை 5.47 மணி உள்ளதால் கூட்டம் அலை மோதும்.

    தற்போது கடுமையான வறட்சியும், சுட்டெரிக்கும் வெயில் நிலவுவதால் கோவில் நிர்வாகமும், இந்து சமய அறநிலையத்துறையும், காவல் துறையும் முன்னேற்பாடு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளையும் விரைந்து செயல்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • கோயிலின் கருவறைக்கு அருகில் பணியில் ஈடுபட்டுள்ள காவலர்கள், பூசாரிகள் போல உடை அணிந்து பணியாற்றி வருகின்றனர்
    • காவி நிறத்திலான இந்த புதிய சீருடை முறையை சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் கண்டித்துள்ளார்

    காசி விஸ்வநாதர் கோவில் உலகப் புகழ் பெற்ற வழிபாட்டுத்தலங்களில் ஒன்றாக உள்ளது. இங்கு தினசரி ஆயிரக்கணக்கானோர் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

    இப்போது காசி விஸ்வநாதர் கோவிலுக்குள் பணியமர்த்தப்பட்டுள்ள காவல்துறை அதிகாரிகளுக்கு காவி மற்றும் சிவப்பு நிறத்திலான புதிய சீருடைகள் வழங்கப்பட்டுள்ளது. பக்தர்கள் பூசாரிகளை போல காவி உடையிலான சீருடை அணிந்து காவலர்கள் பணியாற்றி ஏற்படுத்தியுள்ளது.

    இது குறித்து பேசிய வாரணாசி காவல் ஆணையர் மோஹித் அகர்வால், நாட்டின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மக்கள் கோவிலுக்கு வந்து செல்கின்றனர். இங்கு அனைத்து நாளும் கூட்டம் அதிகமாக இருப்பதால் அனைவரும் கடவுளை சிக்கல் இன்றி தரிசனம் செய்ய வேண்டும் என்று விரும்புகிறோம். அதன் காரணமாக கூட்டத்தை கட்டுப்படுத்தும் பணியில் காவலர்கள் ஈடுபட்டுள்ளனர்.

    சில நேரங்களில் காவலர்கள் தங்கள் வலுக்கட்டாயமாக தள்ளுவதாக சில புகார் தெரிவிக்கின்றனர். ஆனால் பூசாரிகள் பக்தர்களை தடுத்தால் அதை அவர்கள் பணிவுடன் ஏற்றுக் கொள்வார்கள். அதற்காகவே இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    கோவிலின் கருவறைக்கு அருகில் பணியில் ஈடுபட்டுள்ள காவலர்கள், பூசாரிகள் போல உடை அணிந்து பணியாற்றி வருகின்றனர். இவர்கள் பக்தர்களிடம் கனிவாக எடுத்து சொல்லி கூட்டத்தை நகர செய்வார்கள். கோயிலின் மற்ற பகுதியில் காவலர்கள், சீருடை அணிந்தே பணியாற்றுகின்றனர்" என்று அவர் தெரிவித்துள்ளார்.

    காவி நிறத்திலான இந்த புதிய சீருடை முறையை கண்டித்துள்ள சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ், "காவல் துறையின் வழக்கத்தின்படி இது சரியா? பூசாரிகளை போல காவலர்கள் உடை அணிந்து பணி செய்யலாமா? இந்த உத்தரவை பிறப்பித்தவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

    மேலும், 'இதை சமூக விரோத சக்திகள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளவும் வாய்ப்பு உள்ளது. இதனால் மக்களுக்கு பாதிப்பு ஏற்படலாம். அதன் பின்னர் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநில அரசின் பதில் என்னவாக இருக்கும்? இது கண்டனத்துக்குரியது" என்று கூறியுள்ளார்.

    • கோவில் கருவறை மற்றும் வளாகம் முழுவதும் தூய்மைப்படுத்தும் கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெற உள்ளது.
    • நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் 24 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

    திருப்பதி:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மார்ச் மாதத்தில் ரூ.118 கோடி உண்டியல் வருவாய் கிடைத்தது. இதன் மூலம் கடந்த 25 மாதங்களாக தொடர்ந்து ரூ.100 கோடியை தாண்டி உண்டியல் வசூலாகி உள்ளது.

    வருகிற 9-ந் தேதி யுகாதி ஆஸ்தானத்தையொட்டி தெலுங்கு வருட பிறப்பு கொண்டாடப்பட உள்ளது. இதனால் திருப்பதி ஏழுமலையான் கோவில் நாளை காலை 6 மணி முதல் 11 மணி வரை கோவில் கருவறை மற்றும் வளாகம் முழுவதும் தூய்மை ப்படுத்தும் கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெற உள்ளது.

    இதனால் நாளை வி.ஐ.பி. பிரேக் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. நாளை காலை 6 மணி முதல் 12 மணி வரை பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படமாட்டார்கள்.

    தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்ததால் ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் தரிசனத்திற்காக கொண்டுவரும் பரிந்துரை கடிதங்களை தேவஸ்தானம் ரத்து செய்தது.

    இதனால் ரேணிகுண்டா விமான நிலையம் மற்றும் திருப்பதி தேவஸ்தானத்தில் விற்பனை செய்யப்பட்டு வரும் ஸ்ரீ வாணி அறக்கட்டளை டிக்கெட்டுகள் அதிக அளவில் விற்பனையாகின்றன.

    அதன்படி கடந்த 15 நாட்களில் ரூ.22.75 கோடிக்கு ஸ்ரீவாணி டிக்கெட்டு விற்பனையாகி உள்ளது.

    திருப்பதியில் நேற்று 81, 224 பேர் தரிசனம் செய்தனர். 24,093 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.4.35 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

    நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் 24 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

    • மகாசிவராத்திரியை முன்னிட்டு பிப்ரவரி மாதம் முதல் மே மாதம் இறுதி வரை பக்தர்கள் மலையேற வனத்துறை அனுமதி வழங்கி வருகிறது.
    • மலையடிவாரத்தில் உள்ள டாக்டர்கள் குழுவினர், பக்தர்களை பரிசோதித்து மலையேற அனுமதித்து வந்தனர்.

    கோவை:

    கோவை மாவட்டம் பூண்டி அருகே வெள்ளியங்கிரி மலை உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியான இங்குள்ள 7 மலைகளை கடந்து மலை உச்சியில் இருக்கும் சுயம்புலிங்கத்தை வழிபடுவதை பக்தர்கள் வழக்கமாக கொண்டு வருகிறார்கள்.

    இங்கு மலையேறுவதற்காக தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகிறார்கள். மலையேற சிரமமாக இருக்கும் என்பதால் மலையேறுபவர்கள் கையில் கம்பை ஊன்றியபடியே செல்வார்கள். ஒவ்வொரு ஆண்டும் மகாசிவராத்திரியை முன்னிட்டு பிப்ரவரி மாதம் முதல் மே மாதம் இறுதி வரை பக்தர்கள் மலையேற வனத்துறை அனுமதி வழங்கி வருகிறது.

    இவ்வாறு வெள்ளியங்கிரி மலையேறும் போது மூச்சுத்திணறல் ஏற்பட்டு ஒரு மாதத்தில் மட்டும் 5 பக்தர்கள் பலியானார்கள். ஏற்கனவே அவர்கள் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் உள்ளிட்டவைகளால் பாதிக்கப்பட்டு இருந்து மலையேறும் போது உடல்நிலை ஒத்துக் கொள்ளாமல் அவர்கள் இறந்தது தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து வனத்துறையினர் பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து மலையேற அனுமதித்து வருகிறார்கள். இதயநோய், மூச்சுத்திணறல், உடல் பருமன், நீரிழிவு நோய், வயது முதிர்ந்தவர்கள், உடல் நிலை சரியில்லாதவர்கள், கொரோனாவில் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் வெள்ளியங்கிரி மலையேற வேண்டாம் என கேட்டுக் கொண்டனர். இதற்காக மலையடிவாரத்தில் உள்ள டாக்டர்கள் குழுவினர், பக்தர்களை பரிசோதித்து மலையேற அனுமதித்து வந்தனர்.

    இந்நிலையில் வெள்ளியங்கிரி மலையேறிய மேலும் ஒரு பக்தர் மரணம் அடைந்தார். சென்னை முகப்பேரைச் சேர்ந்தவர் ரகுராம் (வயது 50). தனியார் வேலைவாய்ப்பு மையம் நடத்தி வந்தார். தீவிர ஆன்மீக ஈடுபாடு கொண்டவர்.

    இவரும், அவரது பகுதியில் வசிக்கும் 15 பேரும் சென்னையில் இருந்து ஒரு வேன் மூலம் வெள்ளியங்கிரி மலையேறுவதற்காக நேற்று இரவு கோவை மாவட்டம் வந்தனர். பின்னர் அவர்கள் மலையேற தொடங்கினர். 4 மலைகளை கடந்து 5-வது மலைக்கு சென்ற நிலையில் ரகுராமுக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. அந்த இடத்திலேயே அவர் மயங்கி விழுந்தார்.

    இதனால் அவருடன் சென்றவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அங்குள்ள மலைவாழ் மக்களின் உதவியுடன் ரகுராமை மீட்டு அடிவாரத்துக்கு கொண்டு வந்தனர். முகாமில் இருந்த மருத்துவர்கள், ரகுராமை சோதித்து பார்த்து அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து ஆலாந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். ரகுராமின் உடல் பிரேத பரிசோதனை க்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது. ஏற்கனவே 5 பேர் இறந்தநிலையில் நேற்று ரகுராமும் மரணம் அடைந்ததால் சாவு எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.

    ×