search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "date extended"

    மதுரை மீனாட்சி அம்மன் கோவில் உள்பட 15 கோவில்களில் கடை வைத்திருப்பவர்கள், அந்த கடைகளை காலி செய்ய டிசம்பர் 31-ந் தேதி வரை காலஅவகாசம் வழங்கி சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
    சென்னை:

    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கடந்த பிப்ரவரி 2-ந் தேதி திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து, முதல்-அமைச்சர் தலைமையில் உயர்மட்ட குழுக் கூட்டம் நடத்தப்பட்டது. இந்த கூட்டத்தில், எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில், மதுரை மீனாட்சி அம்மன் கோவில் உள்பட 15 கோவில்களை சுற்றி கடை வைத்திருப்பவர்களுக்கு கடந்த பிப்ரவரி 14-ந் தேதி நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதில், கடைகளை காலி செய்யும்படி கூறப்பட்டிருந்தது.

    இந்த நோட்டீசை எதிர்த்து குமார் என்பவர் உள்பட ஏராளமான கடைக்காரர்கள் ஐகோர்ட்டு மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை நீதிபதி வி.பாரதிதாசன் விசாரித்தார்.

    பின்னர், இந்த வழக்கின் தீர்ப்பை சென்னை ஐகோர்ட்டில் வைத்து நேற்று நீதிபதி பிறப்பித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    வரலாற்று சிறப்பு மிக்க கோவில்களின் தொல்லியல் தன்மைகளை பாதுகாக்க வேண்டும் என்று அரசு எடுத்த முடிவின் அடிப்படையில், மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில், திருப்பரங்குன்றம் சுப்ரமணியசுவாமி கோவில், மேலமாசி வீதியில் உள்ள மதனகோபால சுவாமி கோவில், அண்ணா நகர் சேவுகப் பெருமாள் கோவில், மதுரை கிருஷ்ணராயர் தெப்பம் ஆஞ்சநேயர் கோவில், திருநெல்வேலி நெல்லையப்பர் - காந்திமதி கோவில், சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவில், குற்றாலம், திருக்குற்றாலநாதர் சுவாமி கோவில்,

    சிவகாசி விஸ்வநாத சுவாமி கோவில், ஸ்ரீவில்லிபுத்தூர் நாச்சியார் (ஆண்டாள்) கோவில், கன்னியாகுமரி பகவதியம்மன் கோவில், ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோவில், திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவில், திருச்சி நாகநாதசுவாமி கோவில், ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில் என்று 15 கோவில்களில் கடை வைத்திருப்பவர்களுக்கு, கடையை காலி செய்யும்படி இந்து சமய அறநிலையத்துறை கடந்த பிப்ரவரி மாதம் 14-ந் தேதி நோட்டீஸ் அனுப்பியது.

    அதாவது, கோவில் வளாகத்துக்குள்ளும், வெளியேயும், கோவில் மதில்சுவர் அருகேயும் கடை வைத்திருப்பவர்கள், பூஜை பொருட்கள், பிளாஸ்டிக் விளையாட்டு பொருட்களை விற்பனை செய்து வருகின்றனர்.

    பல ஆண்டுகளாக, பல தலைமுறைகளாக இந்த கடைகளை நடத்தி வருகின்றனர். அவர்கள் சார்பில் ஆஜரான வக்கீல்கள், ‘மனுதாரர்கள் வைத்திருக்கும் கடைகளினால் பொதுமக்களுக்கு எந்த இடையூறும் ஏற்படவில்லை. எனவே, கடைகளை காலி செய்தால், இவர்களது வாழ்வாதாரம் பாதிக்கும்’ என்று வாதிட்டனர். கோவில்களை பாதுகாப்பது என்பது பொதுநலன் ஆகும். எனவே, கடை வைத்திருப்பவர்களுக்கு வாழ்வாதாரம் பாதிக்கும் என்று கூறினாலும், தனிப்பட்டவர்களின் நலனைவிட, பொதுநலன் தான் முக்கியமாகும்.

    அதனால், கோவிலை சுற்றியுள்ள கடைகளை காலி செய்யவேண்டும் என்று இந்து சமய அறநிலையத்துறை சரியான முடிவினை எடுத்துள்ளனர். அந்த நடவடிக்கையில் சட்டவிரோதம், விதிமீறல் எதுவும் இல்லை. எனவே, இந்த நோட்டீசில் தலையிட இந்த ஐகோர்ட்டு விரும்பவில்லை.

    அதேநேரம், மனுதாரர்கள் எல்லோரும் பல ஆண்டுகளாக, கடை வைத்திருப்பதால், அவர்களுக்கு மாற்று இடம் வழங்க முடியுமா? என்று இந்து சமய அறநிலையத்துறையிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த இந்து சமய அறநிலையத்துறை, திருநெல்வேலி நெல்லையப்பர் காந்திமதி அம்மாள் கோவில், சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி திருக்கோவிலில் கடைகள் வைத்திருப்பவர்களுக்கு மட்டும் மாற்று இடம் வழங்க முடியும். மற்ற கோவில்களில் மாற்று இடம் வழங்க இடம் இல்லை’ என்று கூறியது.

    எனவே, இந்த இரு கோவில்களில் கடை வைத்திருப்பவர்கள், மாற்று இடம் கேட்டு மனு செய்தால், அதை கருணையுடன் அதிகாரிகள் பரிசீலிக்கவேண்டும். பிற கோவில்களில் கடை வைத்திருப்பவர்களை உடனடியாக காலி செய்ய உத்தரவிட்டால், அவர்களுக்கு பாதிப்பு ஏற்படும். அவர்களுக்கு காலஅவகாசம் வழங்கவேண்டும்.

    அதனால், வருகிற டிசம்பர் 31-ந் தேதிக்குள் அவர்கள் கடைகளை காலி செய்யவேண்டும். அதுவரையில் குத்தகை தொகை மற்றும் வாடகை கட்டணத்தை கோவில் நிர்வாகத்திடம் முறையாக செலுத்த வேண்டும். அதுமட்டுமல்ல, டிசம்பர் 31-ந் தேதி வரையில், கடை நடத்திக்கொள்ள அனுமதி கேட்டு சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் மனுவும் கொடுக்க வேண்டும். இந்த வழக்கை தள்ளுபடி செய்கிறேன்.

    இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.#tamilnews
    ×