search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "CPL cricket"

    சி.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட்டில் ஜமைக்கா கேப்டனும், ஆல்-ரவுண்டருமான ஆந்த்ரே ரஸ்செல் கடைசி ஓவரில் வரிசையாக மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி ‘ஹாட்ரிக்’ சாதனை படைத்தார். #AndreRussell
    போர்ட் ஆப் ஸ்பெயின்:

    ஐ.பி.எல். பாணியில் கரீபியன் பிரிமியர் லீக் (சி.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வெஸ்ட் இண்டீசில் நடந்து வருகிறது. இதில் போர்ட் ஆப் ஸ்பெயினில் நேற்று முன்தினம் இரவு நடந்த ஒரு லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் டிரின்பகோ நைட் ரைடர்ஸ்-ஜமைக்கா தலவாஸ் அணிகள் மோதின. முதலில் பேட் செய்த டிரின்பகோ அணி 6 விக்கெட் இழப்புக்கு 223 ரன்கள் குவித்தது. காலின் முன்ரோ (61 ரன், 42 பந்து, 5 பவுண்டரி, 3 சிக்சர்), பிரன்டன் மெக்கல்லம் (56 ரன், 27 பந்து, 5 பவுண்டரி, 4 சிக்சர்) அரைசதம் விளாசினர். ஜமைக்கா கேப்டனும், ஆல்-ரவுண்டருமான ஆந்த்ரே ரஸ்செல் கடைசி ஓவரில் வரிசையாக மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி ‘ஹாட்ரிக்’ சாதனை படைத்தார்.

    பின்னர் இமாலய இலக்கை நோக்கி களம் இறங்கிய ஜமைக்கா அணி 41 ரன்னுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்து தள்ளாடியது. இதைத் தொடர்ந்து இறங்கிய கேப்டன் ஆந்த்ரே ரஸ்செல், முதல் பந்தில் கொடுத்த எளிதான கேட்ச் வாய்ப்பை அலிகான் கோட்டை விட்டார். அதன் பிறகு ருத்ர தாண்டவமாடிய ரஸ்செல் சிக்சர் மழை பொழிந்து மிரள வைத்தார். 40 பந்துகளில் சதத்தை எட்டிய அவர் சி.பி.எல். தொடரில் அதிவேகமாக சதம் அடித்தவர் என்ற சாதனைக்கும் சொந்தக்காரர் ஆனார். அவருக்கு கென்னர் லீவிஸ் (51 ரன்) ஒத்துழைப்பு கொடுத்தார். ஜமைக்கா தலவாஸ் அணி 19.3 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 226 ரன்கள் குவித்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ரஸ்செல் 121 ரன்களுடன் (49 பந்து, 6 பவுண்டரி, 13 சிக்சர்) களத்தில் இருந்தார்.

    20 ஓவர் போட்டி வரலாற்றில் ஒரே ஆட்டத்தில் ‘ஹாட்ரிக்’ விக்கெட்டுடன் சதத்தை சுவைத்த 2-வது வீரர் என்ற பெருமையை 30 வயதான ரஸ்செல் பெற்றார். இதற்கு முன்பு இங்கிலாந்தை சேர்ந்த ஜோ டென்லி, உள்நாட்டில் நடந்த 20 ஓவர் கிரிக்கெட்டில் கென்ட் அணிக்காக கடந்த மாதம் இச்சாதனையை செய்திருந்தார். 
    ×