என் மலர்
நீங்கள் தேடியது "Collector inspects Suruli Falls"
- சாரல் திருவிழா நடைபெற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தியதன் அடிப்படையில் மாவட்ட நிர்வாகம் மற்றும் சுற்றுலாத்துறை இணைந்து இந்த ஆண்டு சாரல் திருவிழாவினை சிறப்பாக கொண்டாட திட்டமிடப்பட்டுள்ளது.
- சுருளி அருவிக்கு செல்லும் சாலை , சுற்றுலா பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
தேனி:
தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே சுருளி அருவி பகுதியில் சுருளி சாரல் திருவிழா-2023 நடைபெறுவதற்கு மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகள் பணிகள் குறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் - மேகமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் ஆனந்த் முன்னிலையில் மாவட்ட கலெக்டர் ஷஜீவனா ஆய்வு மேற்கொண்டார்.
சுருளி அருவி பகுதியில் சாரல் திருவிழா கடந்த காலங்களில் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. கொரோனா நோய் தாக்கத்தினால் கடந்த 3 வருடங்களாக இந்த சாரல் திருவிழா நடைபெறவில்லை. பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் சாரல் திருவிழா நடைபெற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தியதன் அடிப்படையில் மாவட்ட நிர்வாகம் மற்றும் சுற்றுலாத்துறை இணைந்து இந்த ஆண்டு சாரல் திருவிழாவினை சிறப்பாக கொண்டாட திட்டமிடப்பட்டுள்ளது.
சாரல் திருவிழா முன்னேற்பாடு பணிகள் குறித்து விரிவாக கள ஆய்வு மேற்கொண்ட மாவட்ட கலெக்டர் மேடை அமையுள்ள இடம் மற்றும் நிகழ்ச்சி நடைபெறும் இடங்களை உள்ளாட்சி அமைப்பினர் விரைந்து சீர் செய்து கொடுக்க வேண்டும். வனத்துறையினர் தேவையான ஒத்துழைப்பு மற்றும் அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும். மேலும் மின்சாரம் மற்றும் சாலை வசதிகளை சரி செய்ய தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
முன்னதாக 13-வது உலக புலிகள் தின விழாவை கொண்டாடும் விதமாக சுருளி அருவி பகுதியில் கட்டப்பட்டுள்ள 2 சுற்றுச்சூழல் அங்காடிகளை மாவட்ட கலெக்டர் திறந்து வைத்தார். இந்த அங்காடியில் புலிகள் மற்றும் வனவிலங்குகளை காப்பது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலான ஆடைகள் டி-ஷர்ட், கீ செயின்கள் மற்றும் துணி பைகள் போன்ற பொருட்கள் விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பின்னர் சுருளி அருவிக்கு செல்லும் சாலை , சுற்றுலா பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வின் போது மாவட்ட வன அலுவலர் சமர்த்தா, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் இந்துமதி, உத்தமபாளையம் வருவாய் கோட்டாட்சியர் பால்பாண்டி, ஊராட்சிகள் உதவி இயக்குனர் அண்ணாதுரை, கம்பம் ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் பாலாமணி கணேசன், வனசரகர் பிச்சைமணி, சுற்றுலா அலுவலர் (பொறுப்பு) பாஸ்கரன் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.






