search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Child Protection Program"

    தமிழ்நாட்டில் பெண் குழந்தைகளை காத்திடும் நோக்கத்தில் உருவாக்கப்பட்ட முதல்-அமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தில் பயனடையுமாறு அரியலூர் மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி கேட்டுக்கொண்டுள்ளார்.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் பெண் குழந்தைகளை காத்திடும் நோக்கத்தில் முதல்-அமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் உருவாக்கப்பட்டது.

    இத்திட்டம் இரண்டு வகையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. திட்டம் 1-ன் கீழ் குடும்பத்தில் ஒரு பெண் குழந்தையுடன் பெற்றோர் இருவரில் ஒருவர் கருத்தடை செய்திருந்தால், அப்பெண் குழந்தையின் பெயரில் நிலையான வைப்பு தொகையாக ரூ.50 ஆயிரம், திட்டம் 2-ன் கீழ் குடும்பத்தில் 2 பெண் குழந்தைகளில் 2-வது பெண் குழந்தை பிறந்து 3 ஆண்டுகளுக்குள் பெற்றோர் இருவரில் ஒருவர் கருத்தடை செய்திருந்தால், இரண்டு பெண் குழந்தைகளின் பெயரில் தலா ரூ.25 ஆயிரம் வீதம் நிலையான வைப்பு தொகையாக தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தில் முதலீடு செய்யப்படுகிறது. அக்குழந்தைக்கு 18 வயது பூர்த்தியடைந்ததும், வட்டியுடன் கூடிய முதிர்வு தொகை பெண் குழந்தைகளுக்கு வழங்கப்படுகிறது.

    இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் அரியலூர் மாவட்ட பயனாளிகள் ஒரு பெண் குழந்தையுடன் அல்லது இரு பெண் குழந்தைகளுடன் அல்லது ஒரு பெண் குழந்தை இருந்தும், இரண்டாவது பிரசவத்தில் இரண்டும் பெண் குழந்தைகளாக உள்ள பெற்றோர்களில் யாரேனும் ஒருவர் கருத்தடை செய்தப்பின் இரண்டாவது குழந்தை மூன்று வயது முடிவதற்குள் குழந்தை பிறப்பு சான்று, பெற்றோர்கள் வயது சான்று, குடும்ப நல அறுவை சிகிச்சை செய்த சான்று, வருமான சான்று, இருப்பிட சான்று, ஆண் வாரிசு இல்லை என சான்று, சாதிச்சான்றிதழ், குடும்ப அட்டை நகலுடன் அந்தந்த ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள சமூக நல விரிவாக்க அலுவலர் அல்லது கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட சமூக நல அலுவலகத்தில் முறையாக ஆலோசனை பெற்று விண்ணப்பித்து பயன்பெறலாம்.

    இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

    ×