என் மலர்
நீங்கள் தேடியது "Bodi rain"
மேலசொக்கநாதபுரம்:
போடியில் கடந்த பல நாட்களுக்கு பிறகு நேற்று மாலை சாரல் மழை பெய்தது. நேரம் செல்லச்செல்ல கன மழையாக மாறி நகர் முழுவதும் தண்ணீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது.
இரவு 7 மணி முதல் 9 மணி வரை இடைவிடாது பெய்த மழையினால் மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டது. தாழ்வான பகுதிகளில் மழை நீர் கழிவு நீருடன் சேர்ந்து பெருக்கெடுத்து ஓடியது.
கரட்டு பட்டி என்ற இடத்தில் 100 ஆண்டு பழமையான மரம் இருந்தது. இந்த மரத்தின்மீது இடி விழுந்ததில் 90 சதவீத பகுதி முறிந்து தரைமட்டமானது. அந்த நேரத்தில் பயங்கர சத்தம் கேட்டதால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் உருவானது. அதனைத் தொடர்ந்து இரவு முழுவதும் விட்டு விட்டு சாரல் மழை பெய்தபடி இருந்தது.
நீண்ட நாட்களுக்கு பிறகு போடி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் பெய்த மழையினால் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
போடி தாலுகா பகுதியில் நேற்று விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெற்றது. தேவர் சிலையில் இருந்து தொடங்கிய ஊர்வலம் மேளதாளம் முழங்க கொட்டக்குடி பெரியாற்றில் கரைக்க எடுத்து சென்றனர். ஊர்வலம் தொடங்குவதற்கு முன்பாகவே சாரல் மழை பெய்ததால் போலீசார் விரைவாக சிலைகளை கொண்டு செல்ல அறிவுறுத்தினர். இருப்பினும் ஊர்வலம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே கன மழை பெய்யத் தொடங்கியது.
இதனால் விநாயகர் சிலைகளும் நனைந்தது. இதனையடுத்து சிலைகளை நனையாமல் பிளாஸ்டிக் கவர் மூலம் மூடி ஊர்வலமாக எடுத்து சென்று கொட்டக்குடி பெரியாற்றில் கரைத்தனர்.






