search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Azad Hind Fauj"

    இந்தியாவின் இறையாண்மைக்கு யாராவது சவால் விடுத்தால் இரு மடங்கு பலத்துடன் பதிலடி கொடுக்கப்படும் என்றும் பிரதமர் மோடி எச்சரிக்கை விடுத்து உள்ளார். #PMModi #AzadHindFauj
    புதுடெல்லி:

    சுதந்திர போராட்ட தலைவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் 1943-ம் ஆண்டு ஆங்கிலேய அரசுக்கு எதிராக நிறுவிய ஆசாத் ஹிந்த் அரசின் 75-ம் ஆண்டு விழா டெல்லி செங்கோட்டையில் நேற்று நடந்தது.

    இந்த விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அவருக்கு நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் இந்திய தேசிய ராணுவத்தினர் பயன்படுத்திய தொப்பி அணிவிக்கப்பட்டது.

    விழாவில் பிரதமர் மோடி பேசுகையில், பெயரை குறிப்பிடாமல் பாகிஸ்தான், சீனா நாடுகளுக்கு மறைமுகமாக எச்சரிக்கை விடுத்தார்.



    அவர் பேசுகையில், எந்த நாட்டின் மண்ணையும் அபகரிக்கும் எண்ணம் இந்தியாவுக்கு கிடையாது என்றும், ஆனால் நமது இறையாண்மைக்கு யாராவது சவால் விடுத்தால், அவர்களுக்கு இரு மடங்கு பலத்துடன் தக்க பதிலடி கொடுக்கப்படும் என்றும் எச்சரித்தார்.

    மேலும் வெளிநாடுகளுக்கு ஆதரவாக நாட்டுக்கு உள்ளேயும், வெளியேயும் யாராவது செயல்பட்டாலோ, நமது அரசியலமைப்பை சீர்குலைக்க முயன்றாலோ அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அப்போது அவர் உறுதியுடன் கூறினார்.

    மோடி தொடர்ந்து பேசுகையில் கூறியதாவது:-

    நாடு சுதந்திரம் அடைந்த பிறகு இந்தியாவின் கொள்கைகள் வெள்ளையர்களின் நடைமுறைகளையே பின்பற்றியது. அதன் விளைவாக கல்வித்துறை மிகவும் பாதிக்கப்பட்டது.

    வல்லபாய் பட்டேல் மற்றும் நேதாஜி போன்ற தலைவர்களின் வழிகாட்டுதல்களின்படி நடந்து கொண்டிருந்தால் நாடு இன்னும் நல்ல நிலைமைக்கு சென்றிருக்கும். அதனால்தான் எனது அரசு கல்வியில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்துள்ளது.

    சுதந்திரத்துக்கு பிறகு, ஒரு குடும்பத்தின் பங்களிப்பு பற்றி மட்டுமே பேசப்பட்டது. சுதந்திரத்துக்காக போராடிய பட்டேல், அம்பேத்கர், நேதாஜி போன்ற தலைவர்களின் தியாகங்கள் திட்டமிட்டே புறக்கணிக்கப்பட்டன. அவர்கள் நாட்டுக்கு ஆற்றிய சேவைகளும் மறைக்கப்பட்டன.

    வெள்ளையர்கள் உரிய அங்கீகாரம் அளிக்காததால் இந்தியாவின் கிழக்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்களுக்கு நேதாஜி மிகவும் முக்கியத்துவம் அளித்தார். இப்போது எனது அரசும் வடகிழக்கு மாநிலங்களின் பொருளாதார வளர்ச்சிக்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

    மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளின்போது சிறப்பாக செயல்படும் போலீசாருக்கு ஒவ்வொரு ஆண்டும் நேதாஜி பெயரில் தேசிய விருது வழங்கப்படும். அடுத்த ஆண்டு முதல் நேதாஜியின் பிறந்த தினமான ஜனவரி 23-ந்தேதி இந்த விருது வழங்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    விழாவில் நேதாஜியுடன் இந்திய தேசிய ராணுவத்தில் இணைந்து பணியாற்றிய லலித் ராம் உள்ளிட்ட தியாகிகள் சிலரை மோடி கவுரவித்தார்.

    டெல்லி சாணக்கியபுரியில் அமைக்கப்பட்டுள்ள போலீஸ் நினைவுத் தூண் மற்றும் போலீஸ் அருங்காட்சியகத்தை பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார். மேலும் போலீஸ் நினைவு தின நிகழ்ச்சியிலும் அவர் பங்கேற்றார்.

    அப்போது மோடி பேசியதாவது:-

    இந்த நினைவிடம் போலீசாரின் வீரம், பலம் ஆகியவற்றுக்கு எடுத்துக்காட்டாக உள்ளது. நாட்டுக்காக போலீசார் செய்த தியாகங்கள் மறக்க முடியாதவை. அவர்களுக்கு எனது வீரவணக்கம்.

    தேசிய பேரிடர் மீட்பு படை மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினர் நாட்டுக்கு ஆற்றி வரும் சேவை மிகவும் போற்றத்தக்கது.

    காஷ்மீரில், சட்டம்- ஒழுங்கை பராமரிப்பதிலும், பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகளிலும் ஈடுபடும் படை வீரர்களின் பணிகளும் நினைவில் கொள்ளவேண்டிய தினம் இதுவாகும். அதுமட்டுமல்ல நக்சலைட்டுகளால் பாதிக்கப்பட்டுள்ள பகுதியில் படை வீரர்கள் ஆற்றும் சேவை அளப்பரியது. அவர்களால்தான் தற்போது நாட்டில் நக்சலைட்டுகளால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் எண்ணிக்கை குறைந்து உள்ளது. இளைஞர்களும் தேசிய நீரோட்டத்தில் இணைந்து வருகின்றனர்.

    உங்களின் விழிப்பான செயல்பாடுகளால் நாட்டில் அமைதியை சீர்குலைக்கும் முயற்சிகள் தோல்வி அடைகின்றன. நாட்டில் பாதுகாப்பற்ற சூழலை ஏற்படுத்த முயற்சிப்பவர்கள் தோல்வி காண்கின்றனர். நாடு அமைதியாக இருக்கிறது என்றால் அதற்கு நீங்கள்தான்(படை வீரர்கள்) காரணம்.

    முந்தைய அரசு இந்த நினைவிடத்தை அமைக்க அனுமதிக்கவில்லை. வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது அத்வானியால் இந்த நினைவிடம் கட்டுவதற்கான பணிகள் தொடங்கி வைக்கப்பட்டன. ஆனால் அதன்பிறகு ஆட்சிக்கு வந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு போலீஸ் நினைவிடம் கட்டும் பணிகளை நிறுத்தி விட்டது. முந்தைய அரசு (காங்கிரஸ்) நமது பாதுகாப்பு படைகளின் வீரத்தையும், தியாகத்தையும் மதிக்கவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக பிரதமர் மோடி, மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங், பா.ஜனதாவின் மூத்த தலைவர் எல்.கே.அத்வானி ஆகியோர் போலீஸ் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.
    ×