search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Apply for crop loan"

    • விருதுநகர் மாவட்ட விவசாயிகள் வட்டியில்லா பயிர்க்கடன் பெற ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம்.
    • இந்த தகவலை கூட்டுறவு இணைப்பதிவாளர் தெரிவித்துள்ளார்.

    விருதுநகர்

    விருதுநகர் மண்டல கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர் செந்தில்குமார் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    விருதுநகர் மாவட்டத்தில் கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் தகுதியுள்ள விவசாயிகளுக்கு நடப்பு ஆண்டில் ரூ.200 கோடி வரை பயிர் கடன் வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதுவரை 6 ஆயிரத்து 972 விவசாய உறுப்பினர்கள் ரூ.58.06 கோடி பயிர்க்கடன் பெற்றுள்ளனர்.

    விவசாமிகள் அனைவரும் அருகில்‌ உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் பயிர்க்கடன் கோரி விண்ணப்பிக்கலாம். கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் கடந்தாண்டு 20 ஆயிரத்து 353 உறுப்பினர்களுக்கு ரூ.135.51 கோடி பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது.

    இவற்றில் 3 ஆயிரத்து 420 புதிய உறுப்பினர்கள் ரூ.23.07 கோடிக்கு பயிர்க்கடன் பெற்றுள்ளனர். நடப்பு ஆண்டில் மாநில தொழில்நுட்ப குழுவினரால் நிர்ணயம் செய்யப்பட்ட 2022-23 ஆண்டு பயிர்க்கடனளவு திட்டத்தின்படி அருகில் உள்ள சங்கங்களில் அனைத்து விவசாயிகளும் கடன் பெறலாம்.

    6 முதல் 15 மாதங்களுக்கு உட்பட்டு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் கே.சி.சி. குறுகிய கால பயிர் கடன்களை உரிய ஆவணங்களுடன் நபர் ஜாமீன் அல்லது தங்க நகை அடமானத்தின் பேரில், அதிகபட்சமாக ரூ.1.60 லட்சம் வரையிலும், தங்க நகை அடமானத்தின் பேரில் அல்லது சாகுபடி நில அடமானத்தின் பேரில் அதிகபட்சமாக ரூ.3 லட்சம் வரையிலும் அனைத்து சங்கங்களிலும் வட்டியில்லா பயிர்க்கடன் பெறலாம். உரிய தவணை தேதிக்குள் கடனை திருப்பி செலுத்தினால் வட்டி செலுத்த தேவையில்லை.

    இதன்படி ஏக்கர் ஒன்றுக்கு பயிர்க்கடன் அளவானது நெல் (பாசனம்/மானாவாரி) ரூ.26100, மக்காச்சோளம் (பாசனம்) ரூ.28750, (மானாவாரி) ரூ.19200, பருத்தி (பாசனம்) ரூ.26350, (மானாவாரி) ரூ.17550, மிளகாய் (பாசனம்) ரூ.26950, (மானாவாரி) -ரூ.20250, தென்னை (பராமரிப்பு) ரூ.25450, நிலக்கடலை (பாசனம்) ரூ.24900, நிலக்கடலை (மானாவாரி) ரூ.20200 ஆகும்.

    விவசாயிகள் தங்கள் பகுதியில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தை கீழ்க்காணும் ஆவணங்களுடன் அணுகி கடன் பெற்று பயன் அடையலாம்.

    கடன் தேவையுள்ள விவசாயிகள் பயிர்க்கடன் பெறுவதற்கு கிராம நிர்வாக அலுவலர் வழங்கும் பயிர் அடங்கல், 10(1) சிட்டா, ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல் மற்றும் பாஸ்போர்ட் அளவு உள்ள 2 புகைப்படம் ஆகியவற்றுடன் அருகாமையில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் நேரில் விண்ணப்பித்து பயிர்க்கடன் பெறலாம்.

    இதுவரை பயிர்க்கடன் பெறாத விவசாயிகள் அருகில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் உரிய பங்குத் தொகை மற்றும் நுழைவு கட்டணம் செலுத்தி புதிய உறுப்பினர்களாக சேர்ந்து பயிர்க்கடன் பெறலாம். விருதுநகர் மாவட்டத்தின் அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களிலும் போதிய உரம் இருப்பு வைத்து விவசாயிகளுக்கு ரொக்கமாகவும், கடன் அடிப்படையிலும் வழங்கப்பட்டு வருகிறது.கூடுதல் விபரங்களுக்கு விருதுநகர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் முதன்மை வருவாய் அலுவலர்-94899 27003, பொது மேலாளர்-94899 27001, உதவி பொது மேலாளர்-94899 27006, மேலாளர் (விவசாயம்) 94899 27177, களமேலாளர் (விருதுநகர்)-94899 27044, களமேலாளர் (ஸ்ரீவில்லிபுத்தூர்) 94899 27021, களமேலாளர் (அருப்புக்கோட்டை)-94899 27023 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×