search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Andhra MLA Murdred"

    ஆந்திராவில் எம்.எல்.ஏ.வை சுட்டுக்கொன்ற நக்சலைட்டுகளை பிடிக்க போலீசார் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தியுள்ளனர். #TDPMLA #MLAKidariSarveswaraRao
    அமராவதி:

    ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டம் அரக்கு தொகுதியில் இருந்து சட்டசபைக்கு தேர்வானவர் கிடாரி சர்வேஸ்வரா ராவ்.

    ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற இவர். பிறகு ஆளும் தெலுங்கு தேசம் கட்சியில் சேர்ந்தார். இவர் பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர். இவருக்கு சந்திரபாபு நாயுடு அரசு கொறடா பொறுப்பை வழங்கி இருந்தது.

    இவர் தனது அரக்கு தொகுதியில் உள்ள குடா கிராமம் உள்பட பல இடங்களில் கருங்கல் குவாரிகளை நடத்தி வந்தார். அந்த குவாரிகளால் தங்களது வீடுகள் சேதம் அடைவதாக பழங்குடி இன மக்கள் குற்றம் சாட்டி வந்தனர். அதோடு கிடாரி சர்வேஸ்வரா ராவுக்கு எதிராக கிராம மக்கள் போராட்டங்களும் நடத்தி வந்தனர்.

    இந்த நிலையில் மக்களை பாதிக்கும் செயல்களை சர்வேஸ்வரா ராவ் நிறுத்த வேண்டும் என்று மாவோயிஸ்டுகள் கடிதம் மூலமாகவும் துண்டு பிரசுரங்கள் மூலமாகவும் எச்சரித்தனர். அதை சர்வேஸ்வரா ராவ் கண்டு கொள்ளவில்லை. இதைத் தொடர்ந்து அவரை கொலை செய்யப் போவதாக மாவோயிஸ்டுகள் கடந்த ஏப்ரல் மாதம் கடிதங்கள் மூலம் மிரட்டல் விடுத்தனர்.

    மாவோயிஸ்டுகளின் அச்சுறுத்தல் குறித்து ஆந்திர போலீசார் கடந்த சில மாதங்களாக அடிக்கடி எம்.எல்.ஏ. சர்வேஸ்வரா ராவை உஷார்படுத்தியபடி இருந்தனர். ஆனால் சர்வேஸ்வர ராவ் போலீஸ் எச்சரிக்கையை கண்டு கொள்ளவில்லை.

    இந்த நிலையில் மாவோயிஸ்டு தீவிரவாதிகள் செப்டம்பர் 21-ந்தேதி முதல் 27-ந்தேதி வரை ஒரு வார காலத்தை தங்கள் அமைப்பின் உதய வாரமாகக் கொண்டாடப்போவதாக அறிவித்தனர். எனவே இந்த கால கட்டத்தில் மாவோயிஸ்டுகள் கொலை பட்டியலில் உள்ள எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் உஷாராக இருக்கும்படி போலீசார் எச்சரிக்கை விடுத்திருந்தனர்.

    சர்வேஸ்வரா ராவ் எம்.எல்.ஏ.வுக்கு போலீசார் பிரத்யேகமாக கடிதம் அனுப்பி இருந்தனர். அதில் மாவோயிஸ்டுகள் செப்டம்பர் 21-ந்தேதி முதல் 27-ந்தேதி வரை உதய தினம் கொண்டாடுவதால் நீங்கள் இந்த ஒரு வாரம் வெளியில் செல்வதைத் தவிர்க்கவும். வீட்டிலேயே இருப்பது நல்லது” என்று அறிவுறுத்தி இருந்தனர்.

    போலீசாரின் இந்த குறிப்பிட்ட எச்சரிக்கையையும் சர்வேஸ்வரா ராவ் எம்.எல்.ஏ. உதாசீனப்படுத்தினார். ஆந்திரா-ஒடிசா எல்லை அருகே தனது தொகுதிக்குட்பட்ட ஒரு கிராமத்தில் நேற்று நடந்த “கிராமதர்சினி” திட்ட விழாவில் கலந்து கொள்ள சென்றார். அவருடன் முன்னாள் எம்.எல்.ஏ. சிவேரி சோமாவும் சென்றிருந்தார்.

    பிறகு அவர்கள் இருவரும் அருகில் உள்ள மற்ற கிராமங்களுக்கு சென்று மக்களை சந்தித்தனர். நிகழ்ச்சிகளை முடித்து விட்டு அவர்கள் தங்கள் சொந்த ஊருக்கு கார்களில் திரும்பிக் கொண்டிருந்தனர்.

    துடாங்கி எனும் கிராமம் அருகே அவர்கள் கார்கள் வந்து கொண்டிருந்தபோது ஏராளமான பெண் தீவிரவாதிகள் உள்பட சுமார் 40- மாவோயிஸ்டுகள் வழி மறித்தனர். கார்கள் நின்றதும் பின்னால் இருந்து வந்த சுமார் 20 பேர் முற்றுகையிட்டனர். அவர்கள் 60 பேரும் நவீன துப்பாக்கிகள் வைத்திருந்தனர்.

    எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ. கார்களுக்கு பாதுகாப்பாக சென்றிருந்த 2 போலீசார் உள்பட சிலர் காரில் இருந்து இறங்கி சென்று மாவோயிஸ்டுகளை கலைந்து செல்லுமாறு கூறினார்கள். உடனே மாவோயிஸ்டுகள் காவலர்களிடம் இருந்த ஏ.கே.47 ரக துப்பாக்கிகளை பறித்துக் கொண்டு அங்கிருந்து ஓடுமாறு உத்தரவிட்டனர்.

    பயந்து போன காவலர்கள் அடுத்த நிமிடமே துப்பாக்கிகளை கொடுத்து விட்டு ஓடி விட்டனர்.

    இதையடுத்து மாவோயிஸ்டுகள் காரில் இருந்து எம்.எல்.ஏ. சர்வேஸ்வரா ராவையும், முன்னாள் எம்.எல்.ஏ. சிவேரி சோமாவையும் காரில் இருந்து இறக்கினார்கள். பிறகு அவர்களை அருகில் உள்ள காட்டுக்குள் அழைத்துச் சென்றனர். அங்கு சுமார் 10 நிமிடங்கள் எம்.எல்.ஏ.வுக்கும், மாவோயிஸ்டுகளுக்கும் இடையே பேச்சு நடந்தது.

    மாவோயிஸ்டுகள் வழக்கமாக கடத்தி வருபவர்களை கோர்ட்டில் விசாரிப்பது போல விசாரித்து விட்டு சுட்டுக் கொல்வது வழக்கம். அதுபோல்தான் சர்வேஸ்வரா ராவ் எம்.எல்.ஏ.விடம் மாவோயிஸ்டுகள் விசாரித்ததாக கூறப்படுகிறது.

    அந்த விசாரணை நடந்து கொண்டிருக்கும் போதே முன்னாள் எம்.எல்.ஏ. சிவேரி சோமா தப்பி ஓட முயன்றார். உடனடியாக அவரை மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொன்றனர். அடுத்ததாக சர்வேஸ்வரா ராவ் எம்.எல்.ஏ.வையும் சுட்டுக் கொன்றனர்.

    சர்வேஸ்வரா ராவை நோக்கி மாவோயிஸ்டுகள் மொத்தம் 6 ரவுண்டுகள் சுட்டனர். இதில் எம்.எல்.ஏ.வின் உடல் சல்லடையாக துளைக்கப்பட்டது. அவர் அந்த இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பிணமானார். பிறகு அவர்களது உடல்களை போட்டு விட்டு மாவோயிஸ்டுகள் தப்பி ஓடி விட்டனர்.

    எம்.எல்.ஏ. சுட்டுக் கொல்லப்பட்ட தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்தனர். சர்வேஸ்வரா ராவ் எம்.எல்.ஏ. உடலை மீட்டு விசாகப்பட்டினத்துக்கு கொண்டு சென்றனர். இதற்கிடையே தகவல் அறிந்ததும் சர்வேஸ்வராராவ் குடும்பத்தினரும் அங்கு விரைந்தனர்.

    இதையடுத்து பழங்குடியினர் வசிக்கும் கிராமங்களில் பதட்டம் ஏற்பட்டது. அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். என்றாலும் ஆங்காங்கே அசம்பாவித சம்பவங்கள் நடந்தன.

    நேற்று ஆந்திராவில் பல்வேறு இடங்களில் கலவரம் மூண்டது. அரக்கு மற்றும் தும்ரிகுடா நகரங்களில் உள்ள போலீஸ் நிலையங்களுக்குள் சர்வேஸ்வரா ராவின் ஆதரவாளர்கள் புகுந்து போலீசாரிடம் சண்டையிட்டனர். அந்த 2 காவல் நிலையங்களும் சூறையாடப்பட்டன.


    சர்வேஸ்வரா ராவுக்கு போதிய பாதுகாப்பு கொடுக்கவில்லை என்று கூறி ஒரு போலீஸ் நிலையத்தை பொதுமக்கள் தீ வைத்து எரித்தனர். போலீசாரையும் தாக்க முயற்சிகள் நடந்தது. இதையடுத்து அரக்கு மற்றும் தும்ரிகுடா பகுதிகளில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    இதற்கிடையே தெலுங்கு தேசம் தொண்டர்களும் போராட்டத்தில் குதித்தனர். சில இடங்களில் போலீசார் மீது தாக்குதல்கள் நடந்தன. அதுமட்டுமின்றி எதிரே வந்த வாகனங்கள் அனைத்தையும் அடித்து உடைத்து சூறையாடி னார்கள்.

    சுமார் 50-க்கும் மேற்பட்ட வாகனங்கள் இந்த கலவரத்தால் முற்றிலும் சேதம் அடைந்தன. நூற்றுக்கணக்கான வாகனங்கள் கடும் சேதம் அடைந்துள்ளன.

    ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு தற்போது அமெரிக்காவில் இருக்கிறார். சர்வேஸ்வரா ராவ் எம்.எல்.ஏ. சுட்டுக் கொல்லப்பட்ட தகவல் அறிந்ததும் அவர் கடும் அதிர்ச்சி அடைந்தார். உயர் போலீஸ் அதிகாரிகள் மற்றும் கலெக்டர்களை தொடர்பு கொண்டு நிலவரத்தை விசாரித்தார்.

    கூடுதல் பாதுகாப்பு அளிக்கும்படி உத்தரவிட்டார். மேலும் தாக்குதலில் ஈடுபட்ட மாவோயிஸ்டுகளை வேட்டையாடவும் அவர் உத்தரவு பிறப்பித்தார். இதையடுத்து ஆந்திரா, ஒடிசா எல்லை பகுதிகளில் மாவோயிஸ்டுகள் தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    மாவோயிஸ்டுகளை பிடிப்பதற்கு கூடுதல் படையினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். ஹெலிகாப்டர்களும் ரோந்து சென்று மாவோயிஸ்டுகள் நடமாட்டத்தை கண்காணித்தது.

    தாக்குதல் நடத்திய மாவோயிஸ்டுகள் அடர்ந்த காட்டுக்குள் தப்பி சென்று விட்டதாக தெரிகிறது. இந்த நிலையில் தாக்குதல் நடத்திய மாவோயிஸ்டுகள் யார் என்பதும் தெரிய வந்துள்ளது.

    ஆந்திராவில் மாவோயிஸ்டுகளின் சிறப்பு மண்டல கமிட்டி தலைவராக இருக்கும் பிரதாப் ரெட்டி என்ற சலாபதி தலைமையில் தாக்குதல் நடந்ததாக கூறப்படுகிறது. கடந்த 2 வாரங்களாக இவர் தாக்குதல் நடந்த பகுதியில் சுற்றி திரிந்ததாக தெரிய வந்துள்ளது. எனவே தாக்குதலை மிக மிக திட்டமிட்டு மாவோயிஸ்டுகள் நடத்தி இருப்பது தெரிகிறது.

    இதற்கிடையே போலீசாரில் சிலர் சலாபதியின் மனைவி அருணா தலைமையிலான மாவோயிஸ்டுகள் தாக்குதல் நடத்தியதாக சொல்கிறார்கள். முதலில் ஆந்திரா-ஒடிசா எல்லையில் ஆதிக்கம் செலுத்தி வரும் ராமகிருஷ்ணா என்பவர் தலைமையிலான மாவோயிஸ்டு குழுவினர் இந்த தாக்குதலை நடத்தி இருக்கலாம் என்று கருதப்பட்டது.

    ஆனால் தற்போது சலாபதியின் கைவரிசை என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவர் தலைமையிலான மாவோயிஸ்டுகளை வேட்டையாட போலீசார் முடுக்கி விடப்பட்டுள்ளனர்.  #TDPMLA #MLAKidariSarveswaraRao
    ×