search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "adyar creek"

    கூடுவாஞ்சேரி அருகே அடையாறு ஓடையில் கட்டப்பட்ட ஆக்கிரமிப்பு வீடுகள் இடிக்கப்பட்டன. இதில் அரசுக்கு சொந்தமான ஒன்றரை ஏக்கர் நிலம் மீட்கப்பட்டது.

    செங்கல்பட்டு:

    வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வதற்காக காஞ்சீபுரம் மாவட்டத்தில் பல்வேறு முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

    நீர்வழிபாதைகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுகின்றன. மழைநீர் கால்வாய்கள் சீரமைப்பு, நீர் ஓடைகளை அகலப்படுத் துதல், ஏரிகளை தூர்வாருதல் போன்ற பணிகளை வருவாய் துறையினரும், பொதுப் பணித் துறையினரும் இணைந்து செய்து வருகிறார்கள்.

    காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் சின்னையா உத்தரவுப்படி செங்கல்பட்டு, சிங்கபெருமாள் கோவில், காட்டாங்கொளத்தூர், மறை மலைநகர், கூடுவாஞ்சேரி, ஊரப்பாக்கம், வண்டலூர், மண்ணிவாக்கம் பகுதிகளில் ஏரிகள், குளங்களுக்கு செல்லும் கால்வாய்கள், ஓடைகள் அகலப்படுத்தப் படுகின்றன.

    இதையொட்டி கூடுவாஞ்சேரி அருகே உள்ள சங்கர் கணேஷ் நகர் பகுதியில் அடையாறு ஓடையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகளை அகற்றக்கோரி நோட்டீசு அனுப்பப்பட்டு இருந்தது. இந்த வீடுகளை இடிக்கும் பணி நேற்று தொடங்கியது.

    செங்கல்பட்டு வருவாய் கோட்டாட்சியர் முத்து வடிவேலு மேற்பார்வையில் தாசில்தார் பாக்கியலட்சுமி, பொதுப்பணித்துறை உதவி என்ஜினீயர் பிரகாஷ் நேவ்பிரபு முன்னிலையில் ஆக்கிரமிப்பு வீடுகள் இடிக்கப்பட்டது. போலீஸ் பாதுகாப்புடன் வருவாய்துறை, பொதுப்பணித்துறை ஊழியர்கள் இந்த பணியில் ஈடுபட்டனர்.

    அடுக்குமாடி வீடுகள் உள்பட மொத்தம் 19 வீடுகள் இடிக்கப்பட்டன. இதில் அரசுக்கு சொந்தமான ஒன்றரை ஏக்கர் நிலம் மீட்கப்பட்டது. இதன் மதிப்பு ரூ.25 கோடி. வீடுகளை இழந்த அனைவருக்கும் நாவலூரில் உள்ள அரசு அடுக்குமாடி குடியிருப்பில் வீடுகள் வழங்கப்பட்டுள்ளன. ‘‘இந்த அக்கிரமிப்பு வீடுகளை அகற்றியதால் இந்த பகுதியில் இனி மழை காலத்தில் வெள்ளம் தேங்காது’’ என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ×