என் மலர்
நீங்கள் தேடியது "Aadipura"
- ஆடிப்பூர வழிபாட்டில் பலப்பல முறைகள் சொல்லப்பட்டு உள்ளது.
- ஆடிப்பூர வழிபாடு கேட்டவருக்கு கேட்ட வரம் தரும் வழிபாடு.
அண்டங்களின் தோற்றமாய், அனைத்துக்கும் தலைவியாய் ஆதியில் தோன்றியவள் அவளே "ஆதி சக்தி" எனப்படும் பராசக்தி. இவளுக்குப் பல்வேறு ரூபங்களும், பல்வேறு நாமங்களும் உண்டு. அவை ஒவ்வொன்றும் உலக நன்மைக்காகவும், மக்களின் நலனுக்காகவுமே தோன்றியது.
சர்வ சக்தி படைத்த அன்னை - உமாதேவியாக தோன்றிய நாளாகவும், பூமி தேவி - ஆண்டாள் நாச்சியாராக அவதரித்த நாளாகவும் திகழ்வது ஆடிப்பூரத் திருநாள்.
ஆலயங்களில் அம்பிகைக்கு பால் அபிஷேகம், வளைகாப்பு உற்சவம், ஊஞ்சல் என கோலாகலமாக பல நிகழ்வுகள் நடைபெறும் நாள். இந்த நல்ல நாளில் அம்பிகையை முறையாக வழிபடக் கேட்டது கிடைக்கும், நினைத்தது நடக்கும்.
ஆடி மாதம் முழுவதும் பலப்பல திருவிழாக்கள். அதில் சைவ, வைணவ பேதம் இன்றி எல்லா ஆலயங்களிலும் நடைபெறக் கூடிய விழா ஆடிப்பூரத் திருவிழா.
அன்னை பராசக்திக்கு எத்தனையோ திருநாமங்கள் உண்டு. அதில் உமா என்ற நாமத்துக்கு தனிச்சிறப்பும் உண்டு.
அ - சிருஷ்டி எழுத்து, உ - ரட்சக எழுத்து, ம - சம்ஹார எழுத்து. இதில் காக்கும் எழுத்து - உ.
இந்த உகாரம் என்பது உமையைக் குறிக்கும். உமா என்றால் அன்னையாக அருள்பவள் என்பது பொருள். ஒரு தாய்க்குத்தான் தனது குழந்தைகளின் தேவை புரியும். அப்படி நமது தேவை அறிந்து அருள்பவள் உமையாகிய தாய்.
ஒரு பெண் தனது வாழ்வில் படிப்படியாக உயர்ந்து ஒவ்வொரு நிலையிலும் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள அருள்பவள் இந்த அம்பிகையே. எனவேதான் இந்த அம்பாளுக்கு உகந்த தினமான ஆடிப் பூரத்தில் சிறப்பான வழிபாடுகளும், பூஜைகளும் நடைபெறுகின்றது.

பூர நட்சத்திரத்தின் அதிபதியாக விளங்குபவர் சுக்கிரன். மகிழ்ச்சியான வாழ்க்கை, நல்ல இல்லறம், வீடு, வாகனம், தொழில் என அனைத்தும் வலுவாக விளங்க அருளும் கிரகம். எனவேதான் அம்பாளின் மாதத்தில் வரும் பூர நட்சத்திரத்தில் செய்யும் வழிபாடுகள் சக்தி படைத்ததாக விளங்குகிறது.
இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 7-ந் தேதியன்று திருஆடிப்பூரத் திருவிழா வருகிறது. அன்றைய தினம் நம்மிடம் இருக்கும் துன்பம் அனைத்தும் விலகி இன்பம் நம்மை வந்து அடைய அம்பாளை வழிபாடு செய்யலாம். ஆடிப்பூர வழிபாட்டில் பலப்பல முறைகள் சொல்லப்பட்டு உள்ளது. அதில் சிலவற்றை நாம் சிந்திப்போம்.
பால் அபிஷேகம்: நமது நாட்டில் ஆடிப்பூரம் கொண்டாடப்படுவது போல் உலக நாடுகளில் உள்ள அம்பாளின் ஆலயங்களிலும் இவ்விழா கொண்டாடப்படுகிறது. இலங்கைத் திருநாட்டில் அம்பாளின் ருது நாளாகவும் இந்த நாள் கொண்டாடப்படுகிறது. அம்பிகைக்கு பால் குடம் சுமந்து வந்து பாலாபிஷேகம் செய்து குளிர வைத்து வழிபடுவது தொன்று தொட்டு வரும் வழிபாட்டு முறை.
பொங்கல் இடுதல்: இந்த ஆடி மாதத்தில் பலருக்கும் தங்களது குலதெய்வ ஆலயத்திலும், இஷ்ட தெய்வ ஆலயங்களிலும், தங்கள் ஊரின் காவல் தெய்வம் மற்றும் எல்லை தெய்வமாக உள்ள அம்பாளுக்கு பொங்கல் இட்டு வழிபடும் வழக்கம் உண்டு. அதிலும் குறிப்பாக இந்த ஆடிப் பூர தினத்தன்று பொங்கல் இட்டு நீண்ட நாள் பிரார்த்தனைகள் நிறைவேற வேண்டும் என்று வேண்டுவதும் உண்டு.
வளைகாப்பு: உலகம் அனைத்தையும் ஈன்றவள் அன்னை. ஆனால் அவளே நித்ய கன்னியாகவும் உள்ளார். இப்படி ஒரு அதிசய தெய்வத்தை வேறு எங்கும் காண முடியுமா? இதைத்தான் தாயுமானவர்,
பூரணி புராதனி சுமங்கலை சுதந்தரி புராந்தகி த்ரியம்பகி எழில்
புங்கவி விளங்கு சிவசங்கரி சகஸ்ரதள புஷ்பம் மிசை வீற்றிருக்கும்
நாரணி மனாதீத நாயகி குணாதீத நாதாந்த சத்தி என்று உன்
நாமமே உச்சரித்திடும் அடியர் நாமமே நான் உச்சரிக்க வசமோ
ஆர் அணி சடைக் கடவுள் ஆரணி எனப் புகழ அகிலாண்ட கோடி ஈன்ற
அன்னையே பின்னையும் கன்னி என மறை பேசும் ஆனந்த ரூப மயிலே
வார் அணியும் இரு கொங்கை மாதர் மகிழ் கங்கை புகழ் வளம் மருவு தேவை அரசே
வரை ராசனுக்கு இரு கண்மணியாய் உதித்த மலை வளர் காதலிப் பெண் உமையே
எனப் பாடியுள்ளார்.
அப்படி சர்வ சக்தி படைத்த அம்பிகை தனது குழந்தைகளாக பாவித்து நமக்குத் தேவையான நன்மைகளைத் தகுந்த காலத்தில் தருபவள்.
ஒரு பெண்ணின் வாழ்வில் நல்ல கணவன் அமைந்து, தனது இல்லறத்தைத் துவங்கி மனைவி என்ற இடத்தைப் பெறுவது தான் முதல் சிறப்பு. பெண்ணுக்கு எத்தனையோ பெயர்கள் இருப்பினும் மனைவி என்ற பெயருக்கு உண்டான பெருமையே தனி. அந்தத் திருமண பந்தத்தை நமக்கு சிறப்பாக அமைத்துத் தருபவள் அம்பாள்.
இந்த பூரத்தன்று நல்ல வரன் அமைய வேண்டும் எனப் பெண்களும், ஆண்களும் வழிபடலாம். கல்யாண வளையல் என் கைகளில் ஏற வேண்டும் என அம்பாளை வழிபட்டு வளைகாப்பு விழாவில் வளையல் வாங்கித் தந்து வழிபடுவது வழக்கம்.

திருமணம் ஆன ஒரு பெண் மனைவி என்ற நிலையை அடைந்த பின் தாய்மை என்ற நிலையை அடைவதே பேரானந்தம். சிலருக்கு அது இயல்பாக வாய்க்கிறது. இன்று பலருக்கும் பல முயற்சிகள் செய்த பின்னரே வாய்க்கிறது.
செல்வத்திலேயே தலை சிறந்த செல்வம் மக்கட் செல்வமே. இதைத் திருவள்ளுவர் அழகு பட சொல்கிறார். குழந்தையின் மழலை மொழி அறியாதவர்களே குழல் இனிது, யாழ் இனிது எனக் கூறுவார்கள் என்கிறார்.
குழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள்
மழலைச்சொல் கேளாதவர்
அந்த மழலையின் மொழி கேட்க காத்திருப்பவர்களுக்கு இந்நாள் ஓர் பொன்னான நாள்.
சர்வ மங்கள ரூபிணி, அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகி, ஆதி சக்தியான பராபரை, அண்டம் முழுவதும் ஆளும் சுந்தரனின் பாதியானவள், எல்லா உயிர்க்கும் தாயானவள் எனக்கும் தாய்மை நலனைத் தர வேண்டும் என வேண்டி அம்பாளுக்கு வளையல், மாலை சூட்டி வளைகாப்பு செய்து வழிபட்டால் குழந்தைப்பேறு திண்ணமே.
ஊஞ்சல் சேவை:
அன்னை மகிழ்ந்து இருக்கும் காலத்தில் அவளை ஊஞ்சலில் வைத்து பாடி வாழ்த்தி வணங்குவது ஒரு தனி இன்பமே.
ஒரு பெண்ணுக்கு நலங்கு இட்டு உற்றார், உறவு, நட்பு, சுற்றம் என எல்லோரும் வாழ்த்தி நீ அன்னையான இந்தத் தருணத்தை நினைத்து மகிழ்ச்சியாக இரு எனச் சொல்லி வளைகாப்பு செய்வர். தாயான மகிழ்வு ஒரு புறம் இருந்தாலும் நமக்காக இவ்வளவு உறவுகள் உள்ளதே! நம் குழந்தையை வரவேற்கவும், பாதுகாக்கவும் இந்த உறவுகள் காட்டும் மகிழ்வும், கொண்டாட்டமுமே ஒரு பெண்ணை மிகவும் மகிழ்ச்சியின் எல்லைக்கே கொண்டு செல்லும்.
அதுபோல் சர்வ லோக மாதாவை நாம் வாழ்த்தி, வணங்கிக் கொண்டாட அவள் பூரணமாய் மகிழ்ந்து அருளை மழை என வாரி வழங்குவாள். எனவேதான் இந்த ஆடிப்பூர வழிபாடு கேட்டவருக்கு கேட்ட வரம் தரும் வழிபாடு. அம்பாள் தன்னை வணங்கும் அனைவருக்கும் எல்லா நலனையும் தருவாள்.
தனம் தரும் கல்வி தரும் ஒரு நாளும் தளர்வு அறியா
மனம் தரும் தெய்வ வடிவும் தரும் நெஞ்சில் வஞ்சம் இல்லா
இனம் தரும் நல்லன எல்லாம் தரும் அன்பர் என்பவர்க்கே
கனம் தரும் பூங்குழலாள் அபிராமி கடைக்கண்களே
அவளின் கடைக்கண் பார்வைக்கு நாம் பாத்திரமாவோம். அன்னையைக் கொண்டாடி மகிழ்வோம்.






