search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Aadikrittikai"

    • தங்க கவசம், வைர கிரீடம் பச்சைக்கல் மரகத மாலை அணிவிக்கப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.
    • பக்தர்கள் பால் காவடி, மலர் காவடி, பன்னீர் காவடி, மயில் காவடி எடுத்து வந்து முருகனுக்கு நேர்த்திக் கடன் செலுத்தினர்.

    திருவள்ளூர்:

    ஆடிக்கிருத்திகை விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் முருகன் கோவில்களில் குவிந்து சாமி தரிசனம் செய்து சென்றனர்.

    திருத்தணி முருகன் கோவிலில் ஆடிக்கிருத்திகை விழா கோலாகலமாக நடைபெற்றது. இதை யொட்டி இன்று அதிகாலையே கோவில் நடை திறக்கப்பட்டு முருகருக்கு பால், தயிர், இளநீர், பன்னீர் உள்பட வாசனை திரவியங்கள் மூலம் சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது. பின்னர் தங்க கவசம், வைர கிரீடம் பச்சைக்கல் மரகத மாலை அணிவிக்கப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. அமைச்சர் சேகர்பாபு சாமி தரிசனம் செய்தார். இதில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, உள்ளிட்ட பல்வேறு மாவட்டம் மற்றும் பாண்டிச்சேரி, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநி லங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து இருந்தனர்.

    பக்தர்கள் பால் காவடி, மலர் காவடி, பன்னீர் காவடி, மயில் காவடி எடுத்து வந்து முருகனுக்கு நேர்த்திக் கடன் செலுத்தினர்.

    பக்தர்கள் அதிக அளவு குவிந்ததால் மலைக்கோவில் முழுவதும் கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. பக்தர்கள் நீண்டவரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். ஆடிக் கிருத்திகையை முன்னிட்டு இன்று மாலை, முதல் நாள் தெப்ப உற்சவம் நடைபெறுகிறது. தொடர்ந்து நாளையும், நாளை மறுநாளும் தொடர்ந்து தெப்பஉற்சவம் நடைபெற உள்ளது. 3 நாட்கள் தெப்ப உற்சவத்தில் முருகர், வள்ளி-தெய்வானையுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிப்பார். இதில் திரளான பக்தர்கள் குவிவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது

    ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர் ராணிப்பேட்டை, திருவண்ணாமலை உள்ளிட்ட பகுதியில் இருந்து 240 சிறப்பு அரசு பஸ்கள் இயக்கப்பட்டன. இதேபோல் அரக்கோணம்-திருத்தணி இடையே சிறப்பு ரெயில்களும் இயக்கப்படுகிறது. 1700 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதேபோல் சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி கோவில், ஆண்டார்குப்பம் பாலசுப்பிரமணிய சுவாமி கோவில், பாகாசாலையில் உள்ள பாலசுப்பிரமணிய சுவாமி கோயில், திருத்தணி ஆறுமுகசாமி கோவில் உள்ளிட்ட முருகன் கோவிலில் ஆடிக்கிருத்திகை விழா விமரிசையாக நடைபெற்றது.

    சிறுவாபுரியில் உள்ள பிரசித்தி பெற்ற பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். மூலவருக்கு சிறப்பு பூஜைகள், அபிஷேகம் நடைபெற்றது. மூலவர் ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஏராளமான பக்தர்கள் பால்குடம், பால் காவடி, பன்னீர் காவடியுடன் பக்தி கோஷத்துடன் முக்கிய வீதிகளின் வழியாக கோவிலுக்கு வந்தனர். சிறப்பு வழிபாட்டில் இந்து சமய அறநிலையத்துறை மாவட்ட குழு உறுப்பினர் டி.லட்சுமி நாராயணன் பங்கேற்றார். விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் செந்தில்குமார் மற்றும் ஊழியர்கள் செய்து இருந்தனர். பக்தர்கள் கூட்டத்தால் சிறுவாபுரி முருகன் கோவில் வளாகம் முழுவதும் நிரம்பி காணப்பட்டது. கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.

    ஆண்டார்குப்பம் பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆடி கிருத்திகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு, பூஜை நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் குவிந்து சாமி தரிசனம் செய்தனர்.

    பொன்னேரி அடுத்த பெரும்பேடு பகுதியில் உள்ள முத்துக்குமரன்சுவாமி கோவிலில் ஊஞ்சல் சேவை, சிறப்பு பூஜை, அன்னதானம், சாமி ஊர்வலம் நடை பெற்றது.

    சென்னை, வடபழனி முருகன் கோவிலில் ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு அதிகாலை 3 மணி அளவில் கோவில் நடை திறக்கப்பட்டது. 3.30 மணிக்கு பள்ளியெழுச்சி பூஜைகள் நடந்தது. அதிகாலை 5 மணி முதல் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். மதியம் 12 மணி வரை சந்தன காப்பு அலங்காரம், பிற்பகல் 1 மணி முதல் மாலை 4 மணி வரை ராஜ அலங்காரத்தில் முருகப்பெருமான் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். மாலை 5மணி முதல் அபிஷேகம் மற்றும் புஷ்ப அங்கி அலங்காரத்தில் அருள்பாலிக்கிறார்.

    அடிக்கிருத்திகையை முன்னிட்டு அதிகாலை முதலே பக்தர்கள் ஏராளமானோர் சாமி தரிசனம் செய்ய கோவில் முன்பு குவிந்தனர். காவடி எடுத்தும், அலகு குத்தியும் "கந்தனுக்கு அரோகரா... முருகனுக்கு அரோகரா" என்று பக்தி கோஷத்துடன் முருகனை தரிசனம் செய்தனர். ஏராளமானோர் பால்குடம், காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    வெயிலின் தாக்கமின்றி பக்தர்கள் சாமி தரிசனம் செய்யும் வகையில் வரிசையில் காத்து நின்று செல்லும் வழி முழுவதும் 'அரேபியன் டென்ட்' அமைக்கப்பட்டு உள்ளது .மேலும் வயதானவர்கள், கர்ப்பிணி பெண்கள், கை குழந்தையுடன் வருபவர்களுக்கு சிறப்பு பாதை அமைக்கப்பட்டு இருந்தன. அதேபோல் 3 இடங்களில் குடி தண்ணீர் பந்தல், தற்காலிக கழிப்பறை வசதிகளும் செய்யப்பட்டு இருந்தது. வாகனம் நிறுத்து வதற்கு தனி இடமும் ஒதுக்கீடு செய்து இருந்தனர்.

    இன்று இரவு வள்ளி தெய்வானை சமேதராக சுப்பிரமணியர் மாட வீதி புறப்பாடு நடக்கிறது. இரவு 11மணி வரை வடபழனி முருகனை தரிசிக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளன.

    காஞ்சிபுரம் மேற்கு ராஜ வீதியில் உள்ள குமரகோட்டம் முருகன் கோவிலில் ஆடி கிருத்திகையையொட்டி ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். உற்சவர் முருகன், வள்ளி-தெய்வானையுடன் ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    இதேபோல் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற வல்லக்கோட்டை முருகன் கோவில், குன்றத்தூர் முருகன் கோவில், வாலாஜாபாத் அருகே உள்ள இளைஞனார் வேலூர் முருகன் கோவில் ஆகிய கோவில்களில் பக்தர்கள் குவிந்து இருந்தனர். ஏராளமான பக்தர்கள் பால் காவடி, புஷ்பக் காவடி எடுத்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். 

    ×