search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "2 boys dead"

    • மதுரையில் இன்று கண்மாயில் மூழ்கி 2 சிறுவர்கள் பலியானார்கள்.
    • மீன்பிடிக்க சென்றபோது இந்த சம்பவம் நடந்தது.

    மதுரை

    மதுரை கருப்பாயூரணியை அடுத்துள்ள சக்கிமங்கலம் சவுராஷ்டிரா காலனியைச் சேர்ந்தவர் கணேசன். இவரது மகன் ஆதிசேசன் (வயது 14). 8ம் வகுப்பு படித்து வந்தார். இவரது வீட்டின் அருகே வசிப்பவர் கண்ணன். இவரது மகன் ஹேமன் (வயது 8). 3ம் வகுப்பு படித்து வந்தார். விடுமுறையை முன்னிட்டு வீட்டில் இருந்த 2 பேரும் இன்று மதியம் சக்கிமங்கலம் கண்மாய்க்கு மீன்பிடிக்க சென்றதாக தெரிகிறது.

    கண்மாயில் ஹேமன் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக தவறி தண்ணீரில் விழுந்தார். நீச்சல் தெரியாததால் தத்தளித்தபடி உயிருக்கு போராடினார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த ஆதிசேசன், ஹோமனை காப்பாற்றுவதற்காக தண்ணீரில் குதித்ததாக கூறப்படுகிறது.

    2 பேரும் ஆழமான பகுதிக்குள் சென்று சிக்கியதால் கரைக்கு திரும்ப முடியாமல் தத்தளித்தனர். சிறிது நேரத்தில் 2 பேரும் தண்ணீரில் மூழ்கி மூச்சுத்திணறி அடுத்தடுத்து பரிதாபமாக இறந்தனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த சிலைமான் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து 2 சிறுவர்களின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். முன்னதாக சிறுவர்களின் உடலை பார்த்து பெற்றோர்களும், உறவினர்களும் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது. இந்த சம்பவம் தொடர்பாக சிலைமான் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×