என் மலர்
வழிபாடு

வேதாரண்யேஸ்வரர் கோவிலில் மாசிமக பெருவிழா
- அகத்தியருக்கு, சிவபெருமான் திருமண கோலத்தில் காட்சி அளித்த தலம்.
- பல்வேறு சிறப்புகள் அடங்கிய இக்கோவிலில் ஆண்டுதோறும் மாசிமக பெருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.
நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யத்தில் சுமார் 1000 ஆண்டுகள் பழமையான வேதாரண்யேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இத்தலம் மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றிலும் சிறப்புடையது. அகத்தியருக்கு, சிவபெருமான் திருமண கோலத்தில் காட்சி அளித்த தலம்.
மேலும், பல்வேறு சிறப்புகள் அடங்கிய இக்கோவிலில் ஆண்டுதோறும் மாசிமக பெருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டுக்கான விழா இன்று (வெள்ளிக்கிழமை) காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
முன்னதாக பஞ்சமூர்த்திகளுடன் சந்திரசேகரர் மகர தோர வாயில் கொடிமரம் முன்பு எழுந்தருளினார். தொடர்ந்து, கொடிமரத்துக்கு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்று, தீபாராதனை காண்பிக்கப்பட்டு, நந்தி பகவான் உருவம் பொறித்த கொடியேற்றப்பட்டது.
இதில் யாழ்ப்பாண பரணி ஆதீனம் செவ்வந்திநாத பண்டார சன்னதி, குருகுல நிர்வாகி வேதரத்தினம், கேடிலியப்பன், கோவிலின் செயல் அலுவலர் ஜெயக்குமார், உபயதாரர் சுப்பையா பிள்ளை குடும்பத்தினர் உள்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
விழா நாட்களில் தினமும் சிறப்பு அலங்காரத்தில் சுவாமி-அம்பாள் எழுந்தருளி வீதிஉலா நடைபெறுகிறது. முக்கிய நிகழ்வுகளான திருக்கதவு அடைக்க, திறக்க பாடும் வரலாற்று ஐதீக விழா வருகிற 18-ந் தேதியும், தேரோட்டம் 28-ந்தேதியும், தெப்பத்திருவிழா அடுத்த மாதம் (மார்ச்) 5-ந்தேதி நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.






