என் மலர்
தோஷ பரிகாரங்கள்
- பூர்வ ஜென்ம பந்த ரத்த உறவுகளை உதறித் தள்ள முடியாது.
- வாழும் காலத்தில் அனுசரித்து வாழ்வதே அனைவருக்கும் நல்லது.
பல குடும்பங்களில் தந்தையும் மகனும் பங்காளிகளாகவே வாழ்கிறார்கள். பல குடும்பங்களில் தந்தையும் மகனும் ஒரே வீட்டில் இருந்தும் பல வருடங்களாக பேசாமல் வாழ்கிறார்கள். ஜாதகத்தில் சூரியன் எந்த இடத்தில் இருந்தாலும் - நல்ல நிலையில் இருந்தால், ஜாதகன் தன் தந்தை, மகன் அன்பு சிறக்கும்.
ஜனன கால ஜாதகத்தில் எந்த கிரக நிலவரம் எப்படி இருந்தாலும் தந்தை மகன் கருத்து ஒற்றுமை மிக அவசியம். இதற்கு தீர்வு கிடைக்குமா? உண்டா? என்பதே பலரின் ஆதங்கம். உளவியல் ரீதியாக எந்த பிரச்சினைக்கும் தீர்வு அவரவர் கையில் தான் இருக்கிறது. ஒருவருடைய உணர்வை புரிந்து கொள்ளாமை, சிறிய பிரச்சினையை பெரிது படுத்துவது, சகிப்பு தன்மை இன்மையும், கருத்து வேறுபாட்டிற்கு பிரதானமான காரணமாக திகழ்கிறது.
ஆனால் தாய், தந்தை, முன்னோர்கள், உடன் பிறந்தவர்கள், நமக்கு பிறக்கும் குழந்தைகள், உற்றார் உறவினர்களை தேர்வு செய்யும் உரிமையை பிரபஞ்சம் யாருக்கும் வழங்கவில்லை. எத்தனை கோவிலுக்கு சென்று பரிகாரம் செய்தாலும் இந்த பூர்வ ஜென்ம பந்த ரத்த உறவுகளை உதறித் தள்ள முடியாது, உறவுகளே வேண்டாம் என்று ஒதுங்கி நின்றாலும் நம்முன்னோர்கள் தாய், தந்தை வழியாக நமக்குள் புகுந்த மரபணுக்களே நம்மை இயக்கும். எனவே வாழும் காலத்தில் அனுசரித்து வாழ்வதே அனைவருக்கும் நல்லது.
பரிகாரம்
வாரிசுகளால் மன உளைச்சலை சந்திப்பவர்கள் பிரதோசத்தன்று சிவனுக்கு மஞ்சள் அபிஷேகம் செய்யவும்.
தந்தையுடன் கருத்து வேறுபாடு இருப்பவர்கள் சனிக்கிழமை தோறும் ஸ்ரீ மத் ராமாயணத்தில் சுந்தர காண்டம் பாராயணம் செய்து வர வேண்டும்.
தந்தை-மகன் ஒற்றுமையை அதிகரிக்க கும்பகோணத்துக்கு அருகில் உள்ள சுவாமிமலை சென்று வர நல்ல மாற்றம் தெரியும்.
- பழனி மற்றும் பூம்பாறையில் உள்ள நவபாஷாண சிலைகள் போகர் சித்தரால் உருவாக்கப்பட்டது.
- ‘நவ’ என்ற சொல் ஒன்பது என்ற எண்ணைக் குறிக்கும்.
'பாஷாணம்' என்றால் 'விஷம்' என்று பொருள். 'நவ' என்ற சொல் ஒன்பது என்ற எண்ணைக் குறிக்கும். நவபாஷாணத்தையும் முறைப்படி கட்டுப்படுத்தி, உபயோகிக்கும் தன்மையை சித்தர்கள் பெற்றிருந்தனர். ஒன்பது வகையான பாஷாணங்களுக்கும், தனித்தனியாக வேதியியல், இயற்பியல்பண்புண்டு. சித்தர்கள், அதில் உள்ள அணுக்களை முறைப்படி பிரித்து மீண்டும் சேர்ப்பதை 'நவபாஷாணம் கட்டுதல்' என்பார்கள்.
1. சாதிலிங்கம், 2. மனோசிலை, 3. காந்தம், 4. காரம், 5. கந்தகம், 6. பூரம், 7. வெள்ளை பாஷாணம், 8. கவுரி பாஷாணம், 9. தொட்டி பாஷாணம் என்பதே 'நவ பாஷாணங்கள்' ஆகும்.
இந்த நவ பாஷாணத்தின் தன்மையில் நவக்கிரகங்களின் குணங்கள் ஒத்திருப்பதாக சித்தர்கள் கண்டறிந்துள்ளனர். அதனை கட்டுதல் என்பது சித்தர்களுக்கு மட்டுமே சாத்தியமான விஷயமாகும். நவபாஷாணத்தால் உருவாக்கப்படும் தெய்வ சிலைகள், நவக்கிரகங்களின் சக்தியை பெற்றுவிடுவதாக நம்பிக்கை.
தமிழ்நாட்டில் பழனிமலை முருகன் கோவில், கொடைக்கானல் அருகே உள்ள பூம்பாறை குழந்தை வேலப்பர் கோவில் மற்றும் தேவிப்பட்டினத்தில் உள்ள ஒரு கோவில் ஆகிய மூன்று இடங்களில்தான் நவபாஷாண சிலைகள் இருக்கின்றன. இதில் பழனி மற்றும் பூம்பாறையில் உள்ள நவபாஷாண சிலைகள் போகர் சித்தரால் உருவாக்கப்பட்டது.
நவபாஷாணங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு கிரகத்தின் சுபாவத்தை கொண்டிருப்பவை. நவபாஷாணங்களால் உருவான சுவாமி சிலையை வழிபடுபவர்களுக்கு நவக்கிரகங்களால் ஏற்படும் சிரமங்கள் நீங்கும். பழனிமலை தண்டாயுதபாணியை வழிபடுபவர்கள், நவக்கிரகங்களை ஒருங்கே வழிபட்டதற்கான பலன் கிடைக்கும். இதற்காகவே பழனி மலையில் நவபாஷாண முருகர் சிலையை, போகர் சித்தர் பிரதிஷ்டை செய்தார். இந்த சிலைக்கு அபிஷேகம் செய்து அந்த அபிஷேக தீர்த்தத்தை அருந்தினால், தீராத நோய் கூட தீர்ந்துவிடும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.
- திருவாரூர் அருகே உள்ளது, திருக்காரவாசல் என்ற திருத்தலம்.
- கும்பகோணம் அருகே உள்ளது திருவெள்ளியங்குடி.
* காஞ்சிபுரம் அருகே கூரம் என்ற ஊர் உள்ளது. இங்கு ஆதிகேசவப் பெருமாள் கோவில் உள்ளது. இது கூரத்தாழ்வார் என்னும் மகான் வாழ்ந்த புண்ணிய ஊர் ஆகும். இவர் தன்னுடைய குரு ராமானுஜரின் உயிரைக் காப்பதற்காக, தன்னுடைய கண்களை இழந்தவர்.
* திருவாரூர் அருகே உள்ளது, திருக்காரவாசல் என்ற திருத்தலம். இங்கு கண்ணாயிரநாதர் கோவில் அமைந்துள்ளது. இங்குள்ள இறைவன், நான்முகனான பிரம்மனுக்கு, ஆயிரம் கண்களோடு தரிசனம் தந்தவர் ஆவார். இந்த இறைவனை அரைக்கீரை தைலத்தால் அபிஷேகம் செய்து, அத்திப்பழத்தை நைவேத்தியமாக படைத்து வணங்கினால், கண் உபாதைகள் நீங்கும்.
* கேரளா மாநிலம் தலைசேரி அருகில் திருவெண்காடு என்ற திருத்தலம் இருக்கிறது. இங்கு ராமசுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் ராமரும், அனுமனும் மட்டுமே அருள்பாலிக்கிறார்கள். ராமனுக்கு எதிரில், அவரை வணங்கிய நிலையில் காட்சி தரும் ஆஞ்சநேயருக்கு அவல் நைவேத்தியம் படைக்கப்படுகிறது.
* கும்பகோணம் அருகே உள்ளது திருவெள்ளியங்குடி. இங்குள்ள தலத்தில் தன்னுடைய கண் பார்வையை பெற்றார், சுக்ரன். அவருக்கு கண்ணொளி தந்த தீபம், இன்றளவும் 'நேத்ர தீபம்' என தொடர்ந்து எரிந்து வருகிறது. அதில் எண்ணெய் ஊற்றி வேண்டிக்கொண்டால் கண் உபாதைகள் விலகுகின்றன.
* தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ளது, பரக்கலக் கோட்டை. இங்கு பொது ஆவுடையார், மத்தியபுரீஸ்வரர் என்ற பெயர் கொண்ட இறைவனின் தலம் உள்ளது. இங்கே வெள்ளால மரமாகவே இறைவன் காட்சி தருகிறார். சோமவாரத்தில் முனிவர்களுக்கு உபதேசித்ததால் அன்று பூஜை நடக்கிறது. சிதம்பரத்தில் அர்த்தஜாம பூஜை முடிந்த பிறகு ஈசன் இங்கு வந்ததால், இரவு 10.30 மணி முதல் 12 மணி வரை பூஜை நடக்கும். திங்கட்கிழமை இரவில் மட்டும் நடைதிறந்து வழிபாடு செய்யப்படும் இந்தக் கோவிலில், வருடத்திற்கு ஒரு முறை மட்டும் பகலில் நடை திறக்கப்பட்டு பூஜை நடைபெறும். அது தைப் பொங்கல் திருநாள்.
* மதுரை அடுத்த உசிலம்பட்டிக்கு அருகில் உள்ளது கோவிலாங்குளம். இங்கு பட்டசாமி தொண்டியாபிள்ளைசாமி கோவில் உள்ளது. இங்கு மாட்டுப் பொங்கல் அன்று வாழைப்பழத் திருவிழா நடைபெறும். அன்று வாழைப்பழம் சமர்ப்பிப்பார்கள். சோழவந்தான் என்ற ஊரில் இருந்து வாழைப்பழம் வாங்கி அங்கிருந்து தலைச்சுமையாக கோவிலுக்கு கொண்டு வந்து நேர்த்திக்கடன் செலுத்துவார்கள். வீட்டுக்கு ஒருவர் வாழைப்பழம் எடுத்துவர வேண்டும் என்பது நியதி. இது பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும்.
* வேலூர் மாவட்டத்தில் உள்ளது காவேரிப்பாக்கம். இதன் அருகே உள்ள ரங்கநாதர் ஆலயத்தில் திருமணம் ஆகாத ஆண்கள், 116 விரலி மஞ்சளால் கோர்க்கப்பட்ட மாலை, 5 தேங்காய், ஒரு கிலோ நெய், ஒரு கிலோ நல்லெண்ணெய் சமர்ப்பித்து அர்ச்சனை செய்தால் திருமணம் கைகூடும். பெண்கள், ரங்கநாயகி தாயாருக்கு தேன் அபிஷேகம் செய்து வழிபட்டால் மணப்பேறு வாய்க்கும். குழந்தை வரம் வேண்டுபவர்கள், தாயாருக்கு பால் அபிஷேகம் செய்வதோடு, வாசல்படியில் நெய்யால் மெழுகி, சர்க்கரையால் கோலமிட்டு வணங்க வேண்டும்.
* கும்பகோணம் அருகில் தேப்பெருமாநல்லூர் என்ற இடத்தில் விஸ்வநாதர் கோவில் உள்ளது. இந்த ஆலயத்தில் உள்ள மூலவருக்கு 22 ஆயிரம் ருத்ராட்சம் கொண்டு ஆவுடை, பாணம், நாகம் ஆகியவற்றுக்கு கவசம் அணிவிக்கிறார்கள். பிரதோஷம், சிவராத்திரி தினங்களில் இந்த அலங்காரத்தில் இறைவனை தரிசித்தால், விசேஷ பலன் கிடைக்கும் என்கிறார்கள். சூரியன் தன் ஒளிக்கதிர்களால் தினமும் இறைவனை வழிபடும் தலம் இதுவாகும்.
* சீர்காழியில் உள்ள சட்டநாதர் கோவில், திருஞானசம்பந்தருக்கு இறைவனும், இறைவியும் காட்சியளித்த தலம். அம்பாள், சம்பந்தருக்கு ஞானப்பால் கொடுத்து ஞானத்தை ஊட்டிய தலம். இந்த ஆலயத்தில் மூன்று மூலவர்கள் உள்ளனர். பிரம்மன் பூஜித்த பிரம்மபுரீஸ்வரர் -லிங்க வடிவம், ஞானசம்பந்தருக்கு காட்சி கொடுத்த தோணியப்பர்- குரு வடிவம், சட்டநாதர்- சங்கம வடிவம்.
- ஒவ்வொரு மாவட்டத்திலும் ஏதாவது ஒரு கோவில் திருமணத் தடைகளை நீக்கக் கூடியதாக இருக்கும்.
- திருமணத்திற்கு தடை ஏற்படுபவர்கள் இந்த பரிகாரங்களைச் செய்யலாம்.
இப்போது திருமணத்திற்கு தடை அல்லது தாமதம் ஏற்படுபவர்கள் எந்த மாதிரியான பரிகாரங்களைச் செய்யலாம், எந்த ஆலயங்களுக்குச் சென்று வந்தால் விரைவில் திருமணம் நடக்கும் என்பதைப் பார்ப்போம்.
திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் ஆலயம்... இங்கே முருகப்பெருமானுக்கும் தேவயானைக்கும் திருமணம் நடந்தது என்பது நாம் அறிந்ததே! இந்த ஆலயத்திற்குச் சென்று வருவது திருமணத்தடையை நீக்கும்.
திருவேற்காடு கருமாரியம்மன் ஆலயம், திருமணத் தடைகளை முற்றிலுமாக அகற்றி திருமணத்தை விரைவாக நடத்தி தரக்கூடிய ஆலயம். கருமாரி அம்மனை தரிசித்து வேண்டுதல் வைத்து வந்தால் உடனே திருமணம் நடக்கும்.
திருமணஞ்சேரி என்னும் திருத்தலம், கும்பகோணம் ஆடுதுறைக்கு அருகில் உள்ளது. இந்தத் திருத்தலம் திருமணத் தடைகளை அகற்றி திருமணத்தை நடத்தித் தரும் என்பது உலகறிந்தது! இந்த திருத்தலத்திற்கு சென்று வந்தாலே தடைகள் அனைத்தும் அகன்று திருமணம் நடக்கும் என்பது அசைக்க முடியாத நம்பிக்கை!
கும்பகோணம் அருகே கோனேரிராஜபுரம் என்னும் ஊரில் இருக்கக்கூடிய ஆலயம், இங்கு இறைவன் உமா மகேஸ்வரர் மேற்கு நோக்கியும் அன்னை அங்கவள நாயகி கிழக்கு நோக்கியும் காட்சி தருகிறார்கள். இருவரும் மாலை மாற்றிக் கொள்ளும் வைபவம் போல் இருப்பதால் இந்தத் தலம் திருமணத் தடைகளை அகற்றி விரைவாக திருமணம் நடத்தி தரும் ஆலயம் என்று போற்றப்படுகிறது. இந்த ஆலயத்திற்குச் சென்று ஈசனையும் பராசக்தியையும் வணங்கி வந்தால் விரைவில் திருமணம் நடக்கும்.
சென்னை - மகாபலிபுரம் சாலையில் திருவிடந்தை நித்திய கல்யாண பெருமாள் ஆலயத்தில் பெருமாளை சேவித்து வேண்டுதல் வைத்து வந்தால் விரைவாக திருமணம் நடக்கும் என்பது ஐதீகம்.
ஒவ்வொரு மாவட்டத்திலும் ஏதாவது ஒரு கோவில் திருமணத் தடைகளை நீக்கக் கூடியதாக இருக்கும். அப்படிப்பட்ட ஆலயங்களுக்குச் சென்று தரிசித்து பிரார்த்தித்து வருவது நல்ல பலனை தரக் கூடியதாக இருக்கும். அது மட்டுமல்லாமல் குலதெய்வ வழிபாடும் திருமணத் தடையை அகற்றி வம்சம் செழிக்க வழிவகை செய்யும். எனவே தவறாமல் குலதெய்வ வழிபாட்டை மேற்கொள்ளுங்கள்., திருமணத்தடை மட்டுமல்லாமல், குடும்ப வளர்ச்சி, வம்சவிருத்தி போன்றவற்றுக்கும் துணையாக இருக்கும்.
ஏழைப் பெண்களின் திருமணத்திற்கு உதவி செய்வது, புதுமணத் தம்பதிக்கு ஆடைகள் வாங்கித் தருவது, கட்டில் மெத்தை போன்றவற்றை பரிசாகக் கொடுப்பது போன்றவையும் திருமணத் தடைகளை நீக்கக் கூடியதாகும்.
- மூலவர் சுயம்புலிங்கமாக தாமிரநிறத்தில் காட்சியளிக்கிறார்.
- அம்பாளின் பெயர் கிரிசுந்தரி.
தஞ்சாவூர்-கும்பகோணம் செல்லும் வழியில் பாபநாசத்துக்கு கிழக்கே 3 கிலோ மீட்டர் தூரத்தில் நல்லூரில் கல்யாண சுந்தரர் கோவில் அமைந்துள்ளது. நல்லூர் கல்யாணசுந்தரர் கோவில் மூலவர் கல்யாண சுந்தரர் லிங்கத்திருமேனியாக 14 அடி உயர மேற்பரப்பில் அருள்பாலிக்கிறார். அம்பாளின் பெயர் கிரிசுந்தரி. மூலவர் சுயம்புலிங்கமாக தாமிரநிறத்தில் காட்சியளிக்கிறார்.
நீண்ட நாட்கள் திருமணம் ஆகாமல் இருக்கும் பெண்களும், ஆண்களும் இந்த கோவிலுக்கு வந்து வாசனையுள்ள மலர் மாலையை சிவபெருமானுக்கு சூட்டி, பின் ஒரு மாலையை வாங்கி அணிந்து பிரகாரத்தை வலம் வந்து வழிபட்டு சென்றால் தடைபட்ட திருமணம் விரைவில் நடைபெறும் என்று தலபுராணம் கூறுகிறது.
ஒரு முறை பாண்டவர்களின் தாய் குந்திதேவி இந்த கோவிலுக்கு வந்து நாரதமுனிவரை சந்தித்தார். அன்று மாசிமக நாள் என்பதால் கடலில் நீராடுவது சிறந்த புண்ணியம் என நாரதர் கூறினார். இதைக்கேட்ட குந்திதேவி, சிவபெருமானிடம் வேண்டினார். அவரது விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் சிவபெருமான், குந்தி தேவிக்காக கோவில் எதிரில் உள்ள தீர்த்தக்குளத்தில் உப்பு, கரும்புச்சாறு, தேன், நெய், தயிர், பால், சுத்தநீர் ஆகிய 7 கடல்களையும் வருமாறு செய்தார். அதில் குந்திதேவி நீராடி பேறு பெற்றார்.
இந்த 7 கடல்களை குறிக்கும் 7 கிணறுகள் இக்குளத்துக்குள் உள்ளது. அன்று முதல் இது சப்தசாகரம் எனப் பெயர்பெற்றது. தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் சிவபெருமானை வேண்டி இக்குளத்தின் பன்னிரு துறைகளிலும் நீராடி கோவிலை 48 நாட்கள் வலம் வந்தால் நோய் அகலும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
தஞ்சையில் இருந்து கும்பகோணத்துக்கு செல்லும் வழியில் பாபநாசம் அருகே நல்லூர் பகுதியில் கல்யாணசுந்தரர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு செல்ல தஞ்சையில் இருந்தும், கும்பகோணத்தில் இருந்தும் பஸ் வசதி உள்ளது. சென்னையில் இருந்து இந்த கோவிலுக்கு வர விரும்பும் பக்தர்கள் ரெயில் மூலம் கும்பகோணத்துக்கு வந்து அங்கிருந்து பஸ் அல்லது கார் மூலம் பாபநாசம் அருகே உள்ள நல்லூருக்கு வந்து கல்யாண சுந்தரரை தரிசனம் செய்யலாம். தென் மாவட்டங்களில் இருந்து நல்லூர் கல்யாணசுந்தரேஸ்வரரை தரிசிக்க விரும்பும் பக்தர்கள் ரெயில் மூலம் தஞ்சை வந்து அங்கிருந்து கார் அல்லது பஸ் மூலம் பாபநாசத்துக்கு வந்து கோவிலை அடையலாம்.
- கருங்காலி மாலை மிகவும் சக்தி வாய்ந்ததாக கருதப்படுகிறது.
- இந்த மாலையை பெறுவதற்கு 98425 99006 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
நவக்கிரக நாயகர்களில் செவ்வாய் பகவானுக்குரியதாக விளங்கும் கருங்காலி மாலை அணிவதன் மூலம் தடங்கல்கள் நீங்கி அனைத்து காரியமும் வெற்றி பெறும் என்பது நம்பிக்கை. இந்த கருங்காலி மாலையானது அதிக உறுதி தன்மை கொண்ட மரத்தில் இருந்து மணிகளாக செதுக்கி, 108 மணிகளை கொண்டு மாலையாக தயாரிக்கப்படுகிறது. இது கதிர்வீச்சுகளை ஈர்த்து சேமிக்கும் தன்மை கொண்டது. எனவே அனைத்து எதிர்மறை எண்ணங்களையும் நீக்கி நேர்மறை எண்ணங்களை உருவாக்கும் சக்தி படைத்தது.
இத்தகைய சிறப்பு பெற்ற கருங்காலி மாலை ஈரோடு மாவட்டம் அறச்சலூர் அருகே ராட்டை சுற்றிபாளையம் காங்கேயம் மெயின்ரோட்டில் உள்ள பைரவர் கோவில் வளாகத்தில் செயல்படும் பைரவா பவுண்டேசனில் கிடைக்கிறது.
இதுகுறித்து பவுண்டேசன் நிர்வாகி விஜயசாமிகள் கூறியதாவது:-
கருங்காலி மாலை மிகவும் சக்தி வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த மாலை முறைப்படி பூஜை செய்து பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த மாலையை தொடர்ந்து அணிந்து கொண்டிருப்பவர்களுக்கு வாழ்வின் அனைத்து முயற்சிகளும் வெற்றி அடைந்து உள்ளது. குறிப்பாக தொழிலில் வெற்றி இலக்கை எட்ட வேண்டுமென்றால் இந்த கருங்காலி மாலையை அணிந்து கொள்ளலாம்.
அனைவரது வாழ்க்கைக்கும் அடித்தளமாக உறவுகள் அமையும். தாய், தந்தை, கணவன், மனைவி, குழந்தைகள், சகோதரர்கள் என உறவினருடன் எந்தவொரு பெரிய பிரச்சினையும் ஏற்படாமல் சந்தோஷமாக வாழ்வதற்கு கருங்காலி மாலை வழிவகுக்கிறது. மேலும், வணிக தொடர்பு கொண்ட உறவின் வளர்ச்சிக்கும் சிறப்பு வாய்ந்தது.
பைரவரின் ஆசீர்வாதம் கிடைப்பவர்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள். அவரது ஆசீர்வாதத்தை பெறுவதற்கான மிக எளிய வழியாக கருங்காலி மாலை உள்ளது. இதை கழுத்தில் அணிவது மூலமாக அவரது ஆசீர்வாதத்தை பெறலாம். இதன் மூலமாக பைரவர் கொடுக்கும் அனைத்து பலன்களும் கிடைக்கும்.
நவக்கிரகங்களில் மிக வலுவானதாகவும், வேகமானதாகவும் செவ்வாய் கிரகம் உள்ளது. அந்த கிரகத்துக்குரிய மாலையாகவும் கருங்காலி மாலை திகழ்கிறது. இந்த மாலையை அணிந்திருந்தால் பிரச்சினைகளை எதிர்த்து நிற்கும் ஆற்றல் கொண்டவராக விளங்கலாம். மன உறுதி அதிகமாகும். இறைவனுக்கு ஸ்லோகங்கள் சொல்லவும் பயன்படுத்தலாம். இறை ஆகர்ஷண சக்தி அதிகமுள்ள கருங்காலி மாலை பயன்படுத்துவதால் உடலில் உள்ள பிரச்சினை நீங்குவதோடு தன வசியம், வாழ்வில் முன்னேற்றம், குல தெய்வ அருள் கிடைக்கும். துன்பங்கள் மறையும். செல்வவளம் பெருகும். எடுத்த காரியத்தில் ஜெயம் உண்டாகும். மனக்கசப்புகள் அகலும். சகல கிரக தோஷ நிவர்த்தி உண்டாகும்.
கருங்காலி மாலை அணிந்து இருந்தால் உடலில் சோம்பல் நீங்கி சுறுசுறுப்பு உண்டாகும். மேலும் மாங்கல்ய பலத்தை பலப்படுத்தும். உடல் உறுதியடைய செய்யும். கோபங்கள் சிறிது சிறிதாக குறையும். நம் மன பயத்தை நீக்கி தைரியத்தை வழங்கும். பெண்களில் செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் இந்த மாலையை அணிந்தால் தோஷம் நீங்கி திருமண தடைகளை நீக்கும். கணவன்-மனைவி பிரச்சினை நீங்கி உறவு மேம்படும். வறுமை நீங்கும்.
மகத்தான நன்மைகள் நிறைந்த கருங்காலிமாலையை நமது பைரவ பீடத்தில் முறைப்படி பூஜை செய்து, மந்திரங்களால் உரு ஏற்றி வழங்கப்படுகிறது. எனவே இந்த மாலையை அணிந்து பைரவரின் முழு அருளையும் பெற்று சந்தோஷமாக வாழலாம். இந்த மாலையை பெறுவதற்கு 98425 99006 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- இந்த பரிகாரத்தை ஜோதிட சாஸ்திரங்கள் குறிப்பிடவே இல்லை.
- இந்த தோஷத்திற்கு மிக எளிமையான பரிகாரம் உள்ளது.
இருதார தோஷம் உள்ளவர்கள் வாழை மரத்திற்கு தாலி கட்டி, அந்த வாழை மரத்தை வெட்டி விடுவார்கள்! இப்படிப்பட்ட ஒரு பரிகாரம் இந்த இருதார தோஷத்திற்கு செய்து வருகிறார்கள். இது ஏற்புடையதா? என்றால் நிச்சயமாக இல்லை.!
எந்த ஜோதிட நூல்களிலும் இப்படிப்பட்ட பரிகாரத்தை ஜோதிட சாஸ்திரங்கள் குறிப்பிடவே இல்லை. பொதுவாக இந்தப் பரிகாரத்தைச் செய்பவர்கள் வாழைமரத்தை ஏற்கெனவே வெட்டி எடுத்து வந்து, அதற்கு தாலி கட்டச் சொல்வார்கள். ஏற்கெனவே வெட்டப்பட்ட வாழைமரம் உயிர்ப்போடு இருக்காது என்பது எல்லோரும் அறிந்ததே.
இன்னும் ஒரு சிலர் வாழைத்தோப்புக்கே கூட்டிச் சென்று, அங்கே ஒரு வாழை மரத்திற்கு தாலி கட்டி, அந்த வாழை மரத்தை வெட்டுவதைச் செய்கிறார்கள். இது எதுவுமே பரிகாரத்தில் வரவே வராது. இதில் வருந்தக் கூடிய விஷயம் என்னவென்றால் பெண்களுக்குக் கூட இந்த வாழைமர பரிகாரத்தை செய்கிறார்கள் என்பதுதான் வருத்தத்திற்குரிய விஷயம்.
அப்படியானால் இந்த இருதார தோஷத்திற்கு என்னதான் பரிகாரம்? என்று கேட்டால்..! மிக எளிமையான பரிகாரம் உள்ளது.... இரு தார தோஷம் இருப்பவர்கள் திருமணம் முடிந்தவுடன், மூன்றாவது மாதத்தில், கட்டிய தாலியை ஏதாவது ஒரு ஆலயத்தின் உண்டியலில் செலுத்தி விட்டு, அந்த ஆலயத்தின் இறைவன் முன்னிலையில் மீண்டும் தாலி கட்டிக்கொள்வதே எளிமையான பரிகாரம்! இரு தாரம் எனும் தோஷம் இப்படித்தான் விலகும் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். இது ஆண் பெண் இருபாலருக்கும் பொருந்தும்.
- ஒருவரின் ஜனன ஜாதகத்தின் படி தான் கடன் வாழ்க்கை அமைகிறது.
- உறவே ஒருவரை கடனில் இருந்து மீட்கும் வலிமை படைத்தவர்.
ஒருவரின் சுய ஜாதக ரீதியாக 5-ம் இடத்துடன் சம்பந்தம் பெற்ற கிரக காரக உறவே ஒருவரை கடனில் இருந்து மீட்கும் வலிமை படைத்தவர்.
சூரியன்
5-ம் இடத்துடன் சூரியன் சம்பந்தம் பெற்றவர்களுக்கு தந்தை, மாமனார், அரசியல்வாதிகள் அல்லது சூரியனின் ஆதிக்கம் நிறைந்த பெயர் கொண்டவர்கள், சிவனின் பெயர் கொண்டவர்கள் மூலம் கடனை தீர்க்க உதவி கிடைக்கும்.
சந்திரன்
5-ம் இடத்திற்கு சந்திரன் சம்பந்தம் பெற்றவர்களுக்கு தாயார், மாமியார் அல்லது வயதான உறவுப் பெண்கள், சந்திரனின் ஆதிக்கம் நிறைந்த பெயர்கள் கொண்டவர்கள், அம்மன் பெயர் கொண்டவர்கள் கடன் தீர்க்க உதவுவார்கள்.
செவ்வாய்
5-ம் இடத்திற்கு செவ்வாய் சம்பந்தம் இருந்தால் உடன் பிறந்த சகோதர, சகோதரிகள், மைத்துனர்கள், முருகனின் பெயர் கொண்டவர்கள் உதவி செய்வார்கள். சிலருக்கு வீடு, நிலம் போன்ற சொத்துகளை விற்பதன் மூலம் கடன் அடையும்.
புதன்
5-ம் இடத்திற்கு புதன் சம்பந்தம் பெற்றால் தாய் மாமன், நண்பர்கள், காதலன், காதலி, மகா விஷ்ணுவின் பெயரில் உள்ளவர்கள், வங்கி கடன், நிலம் விற்பனை மூலம் கடன் தீரும்.
குரு
5-ம் இடத்திற்கு குரு சம்பந்தம் பெற்றால் பிள்ளைகள், பாட்டனார் சித்தர்களின் பெயரை கொண்டவர்கள் மூலம் உதவி கிடைக்கும்.
சுக்ரன்
5-ம் இடத்திற்கு சுக்ரன் சம்பந்தம் இருந்தால் அத்தை, பெரியம்மா, மனைவி, மகாலட்சுமியின் பெயர் உள்ளவர்கள் மூலம் கடன் தீரும்.
சனி
5-ம் இடத்திற்கு சனி சம்பந்தம் பெற்றால் ரத்த பந்த உறவுகளான சித்தப்பா, பங்காளிகள், சின்ன மாமனார், வேலையாட்கள் , நம்பிக்கையான விசுவாசிகள், காவல் தெய்வத்தின் பெயரைக் கொண்டவர்கள் மூலம் உதவி கிடைக்கும். பலர் சுயமாக உழைத்து கடன் தீர்க்கிறார்கள்
ராகு/கேது
5-ம் இடத்துடன் ராகு/கேது சம்பந்தம் பெறுபவர்கள் குல தெய்வ வழிபாட்டால் கடனில் இருந்து விடுபட முடியும். மேலே குறிப்பிட்டது போல் 6-ம் பாவக அதிபதியோடு தொடர்பு பெறும் கிரகம் கடனையும், 5-ம் பாவகத்தோடு தொடர்பு பெறும் கிரகம் கடனிலிருந்து விடுபடும் காலத்தையும் உணர்த்தும். கடன் வாங்கும் முன்பே சுய ஜாதகத்தில் பூர்வ புண்ணியம் , ருண ஸ்தானம் , பாக்கிய ஸ்தானம், அஷ்டம ஸ்தானங்களையும் தசா, புத்திகளை ஆய்வு செய்து கடன் வாங்குவதை முடிவு செய்தல் சிறப்பு. எவர் ருணம், ரோக சத்ரு ஸ்தானத்தை பரிபூரணமாக அனுபவித்து அவதியுறுகிறார்களோ அவர்களுக்கு தான் ஞானம் பிறக்கும். ஞானம் பிறந்தவன் தான் முக்திக்கு வழி தேடுகிறான். சென்ற பிறவியில் தவறுகளால் உருவான நோய் மற்றும் கடனுக்கு ஒவ்வொரு மாதமும் வரும் பவுர்ணமி அன்று குல தெய்வ வழிபாடு செய்ய வேண்டும்.
- புதனுடன் தொடர்புடைய கடனானது வங்கி கடனை திரும்ப செலுத்த முடியாத சூழ்நிலையை உருவாக்கும்.
- குருவுடன் தொடர்புடைய கடனானது கந்து வட்டியில் சிக்க வைக்கிறது.
குடும்ப கடன்
1, 2, 6-ம் பாவகங்கள் ஒன்றோடொன்று இணைவு பெறும் போது ஜாதகரின் நடவடிக்கையாலும், குடும்பத்தின் அத்தியாவசிய தேவைக்காகவும் நோயினாலும் கடன் ஏற்படுகிறது. 1,3,6,8,12-ம் பாவக இணைவால் போலீஸ், கோர்ட், கேஸ், கட்டப்பஞ்சாயத்து, நஷ்டம் அவமானமும், தற்கொலை எண்ணம், சிறை தண்டனையும் உண்டாகும் இவர்களில் பெரும்பான்மையானோர், ஷேர், சீட்டு, ரேஸ், தவறான நடவடிக்கைகள் மூலம் பணத்தை தொலைத்து கடனாளியானவர்கள். 6, 7-ம் பாவக இணைவால் தொழில் கூட்டாளியாலும், களத்திரத்தின் மூலமும் கடன் ஏற்படும். கூட்டுத் தொழில் செய்பவர்களுக்கு 6, 7-ம் பாவகம் தொடர்பு இருக்கக் கூடாது. 6, 7, 8-ம் பாவக தொடர்பு பெற்ற தம்பதியினர் மற்றும் தொழில் கூட்டாளிகள், போலீஸ் கோர்ட், கேஸ், விவாகரத்து என்று அலைந்தே பாதி வாழ் நாளை தொலைத்து எஞ்சிய வாழ்நாளில் விரக்தியின் உச்ச கட்டத்திற்கு சென்று தவறான முடிவு எடுக்கிறார்கள். பல சந்தர்பங்களில் கணவனால், மனைவியும், மனைவியால் கணவனும் கடன் தொல்லையால் பிரிகிறார்கள். 5,6,9-ம் பாவக இணைவால் பூர்வீக சொத்தைக் காப்பாற்ற கடன், பூர்வீகச் சொத்து வழக்கு, தந்தை மற்றும் தந்தை வழி உறவுகள் மூலமும் உருவாகும்.
தொழில் கடன்
6, 10-ம் பாவக இணைவால் தொழில் இழப்பு, தொழில் நட்டமும் ஏற்படுகிறது. இத்துடன் சூரியன், சுக்கிரன் இணைவு பெற்றவர்கள் தொழில் நிர்வாகத்திற்கும், ஆடம்பரத்திற்கும் செலவு செய்தே கடனாளியாகிறார்கள். 6,7,10-ம் பாவகம் தொடர்பு பெற்றவர்கள் கூட்டுத் தொழிலால் கடனாளியாகிறார்கள்.
நம்பிக்கைத் துரோக கடன்
3, 11-ம் பாவகம் 6-ம் பாவகத்தோடு இணைவு பெறும் போது உடன் பிறந்த சகோதர, சகோதரிகளாலும், இளைய மனைவியாலும், காதலர்கள் அதீத அன்பால் ஒருவர் பிரச்சினையை அடுத்தவர் சுமப்பது போன்றவைகளாலும் ஏற்படுகிறது. 6-ம், 6-ம் இணைவு பெற்றால் பரிவு மிகுதியால் ஜாமின் போட்டு கடனையும் சத்ருவையும் உருவாக்கி வட்டிக்கு வட்டிகட்டி சொல்ல முடியாத துயரம் ஏற்படும்.
சுப கடன்
4 மற்றும் 6-ம் பாவக இணைவால் வீடு, வாகனம், நிலம், விவசாயம், தாய் மற்றும் தாய் வழி உறவினர் மூலமும் கடன் உருவாகும். சுகஸ்தானத்தில் கோச்சார அஷ்டமாதிபதி அல்லது பாதகாதிபதி பயணம் செய்யும் போது நகை அடமானத்திற்கு சென்று விடுகிறது. 5, 6-ம் பாவகம் இணைவால் குழந்தைகளின் கல்வி, திருமணம், நோயினால் கடன் ஏற்படும்.
பேராசை கடன்
6-ம் அதிபதி 11-ம் அதிபதியுடன் சம்மந்தப்பட்டால் மூத்த சகோதரிகளால் நஷ்டம், கடன் உருவாகும். சிலர் பேராசை மிகுதியால் உத்தியோகத்தில் இருக்கும் காலத்தில் லஞ்ச ஒழிப்பு துறையிடம் மாட்டி வாழ்வாதாரத்தை இழக்கிறார்கள். அல்லது சேர்மார்க்கெட், சூதாட்டத்தால் கடன்படுகிறார்கள். சிலர் ஆடம்பரச் செலவினால் கடனை விலை கொடுத்து வாங்குகிறார்கள். சிலர் இளைய தாரம் எனும் வைப்பாட்டி கொடுமையால் உடம்பில் உயிரைத் தவிர மீதி அனைத்தையும் கடனுக்காக இழக்கிறார்கள். தங்களுடைய வரவிற்கு அதிகமாக கடன் வாங்கிய பலர் கடன் பிரச்சினைகளை தீர்க்க முடியாமல் பணக்காரனாக வாழ முடியாவிட்டாலும் பரவாயில்லை கடன் இல்லாமல் வாழ வேண்டும் என்ற மன நிலைக்கு வந்து விடுகிறார்கள். 6-ம் அதிபதியுடன் புதன், குரு, ராகு, கேதுக்கள் இணைவு பெறும் போதும் தசா நடக்கும் போதும் 80 சதவீதம் பேர் தங்களின் தகுதிக்கு மீறிய கடனை சுமக்கிறார்கள். புதனுடன் தொடர்புடைய கடனானது வங்கி கடனை திரும்ப செலுத்த முடியாத சூழ்நிலையையும், குருவுடன் தொடர்புடைய கடனானது கந்து வட்டியிலும் சிக்க வைக்கிறது. ஜனன கால ஜாதகத்தில் குரு, ராகு கேதுவுடன் உள்ள தொடர்பே கடன் ஏற்படும் காலத்தையும் நிவாரணம் ஏற்படும் காலத்தையும் உணர்த்தும்.
- திருமணத் தடையை சிலருக்கு உருவாக்குகிறது.
- சர்ப்ப பரிகாரங்கள் செய்யும்போது சைவ உணவு விரதம் மேற்கொள்ள வேண்டும்.
செவ்வாய் தோஷத்திற்கு அடுத்தபடியாக அனைவரும் அறிந்தது சர்ப்ப தோஷம். நிழல் கிரகம், சர்ப்பங்கள் எனப்படும் ராகு கேதுக்கள் 1, 2, 5, 7, 8, 12 ஆகிய இடங்களில் அமர்ந்தால் திருமணத் தடையை சிலருக்கு உருவாக்குகிறது. 1,7-2,8 மிட சர்ப்ப தோஷத்தின் வீரியம் அதிகம். எனவே இந்த தோஷ அமைப்பு உள்ள ஜாதகங்களை அதே சம தோஷம் உள்ள ஜாதகத்துடன் சேர்ப்பதே தோஷ நிவர்த்திக்கு பரிகாரமாகும். 5-ல் சர்ப்ப கிரகம் உள்ள ஜாதகத்திற்கு 5, 11-ல் சர்ப்பங்கள் இல்லாத ஜாதகத்தை இணைப்பது சிறப்பு. சர்ப்ப தோஷத்தால் திருமணத் தடையை சந்திப்பவர்கள் ராகு வேளையில் துர்க்கை அல்லது காளியை நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடவும்.
ஜாதகத்தில் லக்னத்தில் இருந்து 1, 5, 9 இந்த ஸ்தானங்களில் சனி, ராகு, கேது, போன்ற கிரகங்கள் இருக்கும் பொழுது அது நாகதோஷம் உடைய ஜாதகமாகிறது. கால சர்ப்பயோகம் கொண்ட ஜாதகர்கள், ராகு காயத்திரியையும் கேது காயத்திரியையும் ஆயுள் முடியும் வரைக்கும் தினசரியும் படித்து வர தோஷங்கள் படிப்படியாக நீங்கும்
திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவிலில் கோமதி அம்மன் ஆலயம் உள்ளது. நாக தோஷம் உள்ளவர்கள் இந்தக் கோவிலுக்கு வெள்ளிக்கிழமை அன்று வந்து பாம்பு புற்றுக்கு பால், பழம் வைத்து வழிபடுகின்றனர். இவ்வாறு 11 வாரம் தொடர்ந்து புற்றுக்கு பால், பழம் வைத்து வழிபட்டு வந்தால் நாக தோஷத்தால் தடைப்பட்டு வரும் திருமணம் விரையில் நடைபெறும். ராமேஸ்வரம் சென்று மூன்று நாள் தங்கி கடலில் நீராடி ராமலிங்க சுவாமியை வணங்கி வந்தால் சர்ப்ப தோஷம் நீங்கி நல்ல புத்திரர் பிறப்பார்கள்.
தங்கம் அல்லது வெள்ளி சிறு ஐந்து தலை நாகம் செய்து வீட்டில் வைத்து நாற்பது நாள்கள் பாலபிஷேகம் செய்து, பூசித்து பிறகு ஒருவருக்கு புது வேட்டி துண்டு தாம்பூலம் தட்சணையுடன் நாக விக்கிரகத்தையும் தானம் செய்யலாம். கருங்கல்லில் நாகப் பிரதிஷ்டை செய்து ஆறு, குணம் அருகில் வைத்து நாற்பது நாள்கள் பாலபிஷேகத்துடன் பூசித்து தினமும் 108 முறை வலம் வந்தால் நாக தோஷம் நிவர்த்தியாகும். கண்ணன் நடனமாடுவது போலவும், அவனுக்கு ஐந்து தலை நாகம் குடை பிடிப்பது போலவும் கல்லில் வடித்து வேம்பும் அரசும் இணைந்திருக்கும் குளக்கரையில் பிரதிஷ்டை செய்து நாற்பது நாள் விளக்கேற்றி வலம் வந்து வணங்கினால் நாகதோஷம் நிவர்த்தியாகும்.
இரண்டு நாகங்கள் பின்னிக் கொண்டு ஒன்றின் முகத்தை ஒன்று பார்க்குமாறு கல்லில் வடித்து அரசமரத்தின் அடியில் பிரதிஷ்டை செய்து நாற்பது நாள்கள் விளக்கேற்றி வைத்து பூசித்தால் நாகதோஷம் விலகும். சர்ப்ப பரிகாரங்கள் செய்யும்போது சைவ உணவு விரதம் மேற்கொள்ள வேண்டும். தான தர்மங்களை மனம் கோணாமல், மனமுவந்து நம்மால் முடிந்த அளவு செய்ய வேண்டும். நாகப் பிரதிஷ்டம் என்பது ஆண் பாம்பும் பெண் பாம்பும், நாகப்பாம்பும், சாரைப் பாம்பும் இணைவது போன்று கல்லில் வடித்து அரசும், வேம்பும் சேர்ந்திருக்கும் இடத்தில் பிரதிஷ்டை செய்தால் விசேஷம் என்று மனுநீதி என்ற நூலில் கூறப்பட்டிருக்கிறது.
சிவலிங்கத்திற்கு ஐந்து தலை நாகம் குடை பிடிப்பது போல் சிலை வடித்து நதிக்கரை அல்லது, குளக்கரையில் பிரதிஷ்டை செய்து, நாற்பது நாள் பூசித்து வலம் வந்தால் நாகதோஷம் பரிகாரமாகும். குளம் அல்லது நதிக்கரையில் அரசு, வேம்பு கன்றுகளை நட்டு, முறையாகத் திருமணம் செய்து குறைந்தது நூறு தம்பதிகளுக்கு விருந்தும் தட்சணை தாம்பூலம் அளித்தால் நாகதோஷம் நிவர்த்தியாகி புத்திரர்கள் பிறப்பதுடன் வாழ்க்கையும் இன்பமாக அமையும்.
- கால சர்ப்ப தோஷம் உள்ள அனைவருக்கும் திருமண தடை ஏற்படாது.
- கால சர்ப்ப தோஷத்திற்கு தகுந்த ஆலோசனையின்றி சுய பரிகாரம் செய்யக் கூடாது.
திருமணத் தடை: கால சர்ப்ப தோஷம் உள்ள அனைவருக்கும் திருமண தடை ஏற்படாது. ராகு/கேதுக்கள் நின்ற நிலைக்கு ஏற்ப பலன்கள் மாறுபடும். திருமணம் தொடர்பான பாவகங்களான 1, 2, 7, 8-ல் ராகு- கேதுக்கள் இருந்தால் பாதகத்தை தரும். தசா புக்தி சாதகமாக இருந்தால் திருமணம் உரிய வயதில் நடக்கும்.
சிலருக்கு காதல் திருமணத்தை நடத்தி இல்வாழ்க்கையில் சங்கடத்தை மிகைப்படுத்தும் அல்லது சிலருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட திருமணம் நடக்கும். அதனால் 27 வயதிற்கு மேல் திருமணம் நடத்துவது சிறப்பு.
பரிகாரம்: ஜனன கால ராகு கேதுக்கள் நிற்கும் நட்சத்திரத்தின் அதிதேவதைகளுக்கு ஜென்ம நட்சத்திர நாளில் அர்ச்சனை செய்து வர வேண்டும். சுவாதி, சதயம், திருவாதிரை, அசுவினி, மகம், மூலம் ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் பிரதோஷ காலத்தில் சிவனுக்கு வில்வ அர்ச்சனை செய்தால் தோஷத்தின் வீரியம் குறைந்திடும்.
புத்திரபாக்கியம் : குழந்தை பாக்கியம் கிடைப்பதில் தடை, தாமதம், அடிக்கடி கருக்கலைதல் பெண் குழந்தைகள் மட்டும் இருப்பது அல்லது ஆண் வாரிசுகள் மட்டும் இருப்பது போன்ற குறைபாடு இருக்கும். சிலருக்கு பெற்ற பிள்ளைகளால் வாழ்நாள் முழுவதும் மனவேதனை இருந்து கொண்டே இருக்கும்.
பரிகாரம் : கிருத்திகை, விசாகம் நட்சத்திரம் அல்லது சஷ்டி திதி அன்று திருச்செந்தூர் முருகனை நினைத்து 27 முறை கந்த சஷ்டி கவசம் பாராயணம் செய்ய வேண்டும். திருவாதிரை, மகம் நட்சத்திரம் வரும் நாட்களிலும் பாராயணம் செய்யலாம்.
நோய் : தோஷத்தின் வீரியம் அதிகமாக இருந்தால் ராகு-கேதுவின் தசா, புத்தி அந்தர காலங்களில் அல்லது 6,8,12-ம் இடத்துடன் சம்பந்தம் பெறும் கிரகங்களின் தசா, புக்தி, அந்தர காலங்களில் இனம் புரியாத நோய் அல்லது தீராத நோய் அல்லது ஆயுள் பயம் அதிகமாக இருக்கும்.
பரிகாரம் : மகா மிருத்யுஞ்ஜய மந்திரத்தை தினமும் 108 முறை ஜெபிப்பதன் மூலம் மரண பயம் நீங்கும், ஆயுள் அதிகரிக்கும், இறை வழிபாட்டில் நாட்டம் ஏற்படும், தீராத நோய் தீரும்.
ஓம் த்ரயம்பகம் யஜாமஹே ஸுகந்திம் புஷ்டி வர்த்தனம்
உர்வாருகமிவ பந்தனான் மிருத்யோர் முக்ஷீய மாம்ருதாத்
அதிர்ஷ்டம் : நித்திய கண்டம் பூரண ஆயுள் என சிலருக்கு அதிர்ஷ்டக் குறைபாடு மிகுதியாக இருக்கும், பூர்வீகச் சொத்து தொடர்பான பிரச்சினைகள், நிரந்தர தொழில் மற்றும் வேலை இல்லாத நிலை, வறுமை, குடும்பத்தில் மிகுதியான கூச்சல் குழப்பம் , உழைப்பிற்கு தகுந்த ஊதியமின்மை, தொடர் விரயம், வீட்டில் தங்கம் தங்காத கஷ்டம் நிலவும்.
பரிகாரம் : திருவாரூர் மாவட்டம் ஸ்ரீவாஞ்சியம்: நன்னிலம்குடவாசல் பேருந்து சாலையில் உள்ள வாஞ்சி நாதேஸ்வரரை வழிபட வேண்டும்.
சாதாரண பாதிப்பை தரும் எந்த தோஷத்திற்கும் பரிகாரம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. கால சர்ப்ப தோஷத்திற்கு தகுந்த ஆலோசனையின்றி சுய பரிகாரம் செய்யக் கூடாது.
மேலேயே கூறியது போன்ற குறைபாடு இருப்பவர்கள் நம்பிக்கையுடன் குலதெய்வ வழிபாடு, கருட வழிபாடு செய்து கருட சுலோகங்களை படித்து வர பாதிப்பின் சுவடே தெரியாது.
- கேரளாவில் உள்ளது மண்ணார சாலை நாகராஜா கோவில்..
- இந்த கோவிலில் முக்கிய வழிபாடு உருளி கவிழ்த்தலாகும்.
கேரள மாநிலம் ஆலப்புழை மாவட்டம் ஹரிப்பாடு அருகே புகழ்பெற்ற மண்ணார சாலை நாகராஜா கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் முக்கிய வழிபாடு உருளி கவிழ்த்தலாகும். குழந்தையில்லா தம்பதிகள் இந்த கோவிலுக்கு வந்து நாகராஜாவையும் சர்ப்ப யக்சி அம்மாவையும் மனமுருக பிரார்த்தனை செய்து நடத்தும் வழிபாடு இது.
இதற்காக பல நாடுகளில் இருந்து சாதி, மத பேதமின்றி திரளான பக்தர்கள் அனைத்து நாட்களிலும் கோவிலுக்கு வந்து பூஜை வழிபாடுகளில் பங்கேற்பது இங்கு சிறப்பு வாய்ந்ததாகும்.
ஆயுள் குறைவு, வம்ச நாசம், தீராவியாதி, மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், பேய் பிடித்தவர்களின் குறையை போக்கவும் சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.
ஆரோக்கிய வாழ்வு பெற நல்ல மிளகு, கடுகு, சிறு பயிறு ஆகியவையும் சர்ப்ப தோஷ பரிகாரத்திற்கு தங்கத்தில் செய்யப்பட்ட புற்று, நாகத்தின் முட்டை, மரம், பூமி போன்ற வடிவங்களும், நீண்ட ஆயுள் பெற நெய், நினைத்த காரியம் கை கூடுவதற்கு பால், கதலிப்பழம், நிலவறை பாயாசமும், குழந்தை பாக்கியத்திற்கு மஞ்சள் பொடி, பால் பூஜை நடத்த தங்கத்திலான சிறிய உருளி வழங்குதல், மரங்களின் செழிப்புக்கு மரங்களில் இருந்து கிடைக்கும் காய்கள், கிழங்குகள் போன்றவை படைக்கப்பட வேண்டும். நாக தோஷ பரிகாரம், சர்ப்ப பலி, மஞ்சள் பொடி காணிக்கை, பால் பழம் நிவேத்யம், பால் பாயாசம், அப்பம், இளநீர், பூக்கள், அவல் போன்றவை படைத்து சிறப்பு வழிபாடு நடைபெறும்.
மண்ணாரசாலை கோவிலில் தினமும் அதிகாலை 5 மணிக்கு நிர்மால்ய தரிசனம், 5.30 மணிக்கு அபிஷேகம், 6.30 மணிக்கு உஷ பூஜை, 10 மணிக்கு உச்ச பூஜை, 12 மணிக்கு நடை அடைத்தல், மாலை 5.30 மணிக்கு நடை திறப்பு, 6.30 மணிக்கு தீபாராதனை, இரவு 8.30 மணிக்கு நடை அடைக்கப்படும். பக்தர்கள் வேண்டுதலுக்காக சுத்தமான தங்கத்திலும், வெள்ளியிலும் தயாரிக்கப்பட்ட நாகர் வடிவங்கள், நாகர் முட்டை, புற்று, ஆள் வடிவங்கள், விளக்குகள், மஞ்சள் பொடி, உப்பு, நல்ல மிளகு, கடுகு, கற்பூரம், பட்டுத்துணி ஆகிய அனைத்து பொருட்களும் கோவில் கவுண்ட்டர்களில் கிடைக்கும்.






