search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    சென்னை விமான நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி புதுவை பெண்ணிடம் ரூ.14½ லட்சம் மோசடி
    X

    சென்னை விமான நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி புதுவை பெண்ணிடம் ரூ.14½ லட்சம் மோசடி

    • சென்னை விமான நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி புதுவை பெண்ணிடம் ரூ.14½ லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது.
    • இது குறித்து புதுவை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    புதுச்சேரி:

    புதுவை நெல்லித்தோப்பு பெரியார் நகர் 9-வது குறுக்குத் தெருவை சேர்ந்தவர் லெனின். இவரது மனைவி ஜனனி.

    கடந்த ஆண்டு இவர் சமூக வலைதளத்தில் சென்னை விமான நிலைய நிறுவனத்துக்கு கஸ்டமர்ஸ் சர்வீஸ் பணிக்கு ஆட்கள் தேவை என்று தகவல் வந்ததையடுத்து அந்த நிறுவனத்துக்கு இ.மெயில் மூலம் விண்ணப்பித்தார்.

    அப்போது அந்த நிறுவன பெண் அனுசிங் மற்றும் பங்கஜ் ஆனந்த், ஹேமாகோபால்ரத்தினம் ஆகிய 3 பேர் ஜனனியிடம் செல்போனில் தொடர்பு கொண்டு தாங்கள் விண்ணப்பித்த பணியை வாங்கி தருகிறோம். அதற்கு நீங்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பத்துக்கு ரூ.1,800 செலுத்த வேண்டும் என்று தெரிவித்தனர். அதன்படி ஜனனி வங்கி மூலம் ரூ.1,800 செலுத்தினார்.

    பிறகு சான்றிதழ்களை சரிபார்க்க ரூ.6,500, வேலை செய்வதற்கான இடம், சம்பளம் குறித்த விபரங்களுக்கு ரூ.19,500 செலுத்த வேண்டும் என்று கூறினர். அதனையும் ஜனனி வங்கி மூலம் செலுத்தினார். இதுபோன்று சிறுக சிறுக ஜனனியிடம் பல காரணங்களை கூறி அவர்கள் ரூ.16 லட்சத்து 48 ஆயிரத்து 680-ஐ பெற்றனர்.

    ஆனால் அவர்கள் விமான நிறுவனத்தில் வேலை வாங்கி தரவில்லை. இதனால் சந்தேகமடைந்த ஜனனி ஒருமுறை நேரடியாக அந்த நிறுவனத்துக்கு சென்றார். அப்போது அங்கிருந்த ஒரு பெண் முக்கிய கூட்டம் ஒன்று நடப்பதாகவும், பிறகு வந்து பார்க்கும்படி ஜனனியை திருப்பி அனுப்பி விட்டார்.

    அதன் பின்னர் ஜனனி அந்த நிறுவனத்தை தொடர்பு கொண்ட போது நேர்காணலுக்கு வருமாறு அழைப்பு விடுத்தனர். அதன்படி கடந்த ஜனவரி 26-ந் தேதி ஜனனி அந்த நிறுவனத்துக்கு சென்ற போது இன்று குடியரசு தினம் என்பதால் நேர்காணல் செய்யமுடியாது என்று திருப்பி அனுப்பி விட்டனர்.

    இதன் பின்பு ஜனனி விசாரித்த போது சென்னை விமான நிறுவனத்துக்கு இதுபோன்று யாரையும் வேலைக்கு எடுக்கவில்லை என்று தெரியவந்தது. மேலும் ஜனனியிடம் வேலை வாங்கி தருவதாக பணம் பெற்ற 3 பேரும் தலைமறைவாகி விட்டனர். இதனால் பணம் மோசடி செய்யப்பட்டதை அறிந்த ஜனனி இதுகுறித்து புதுவை சி.பி.சி.ஐ.டி. போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×