என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருச்செந்தூர் கோவிலில் இன்று தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்ட காட்சி.
    X
    திருச்செந்தூர் கோவிலில் இன்று தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்ட காட்சி.

    திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் 8 நாட்களுக்கு பிறகு இன்று பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி

    கடலில் புனித நீராடவும், நாழிக்கிணறு தீர்த்தத்தில் புனித நீராடவும் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. ஆனால் பக்தர்கள் முடி காணிக்கை செலுத்த அனுமதி அளிக்கப்பட்டது.
    கொரொனா தடுப்பு நடவடிக்கையாக ஆடி கிருத்திகை, ஆடி அமாவாசையையொட்டி கோவில்களில் பக்தர்கள் அதிகளவில் கூடுவதை தவிர்க்கும் பொருட்டு முக்கிய கோவில்களில் கடந்த 1-ம் தேதி முதல் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.

    திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் கடந்த 1-ந்தேதி முதல் நேற்று வரை பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்படவில்லை. அதே நேரம் கோவிலில் வழக்கமான பூஜைகள் நடந்தது.

    இந்நிலையில் 8 நாட்களுக்குப் பிறகு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இன்று பக்தர்கள் மீண்டும் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.

    ஏற்கனவே உள்ள கட்டுப்பாடுகளின்படி கடலில் புனித நீராடவும், நாழிக்கிணறு தீர்த்தத்தில் புனித நீராடவும் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. ஆனால் பக்தர்கள் முடி காணிக்கை செலுத்த அனுமதி அளிக்கப்பட்டது.

    இன்று அதிகாலை 6 மணி முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த பக்தர்கள் முககவசம் அணிந்து, கைகளை கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்த பின்னரே தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். கொரொனா தடுப்பு நடவடிக்கையாக பக்தர்கள் அதிகளவில் கூடுவதை தவிர்க்கும் பொருட்டு மேலும் வருகின்ற 11-ந் தேதி ஆடி பூரம் தினத்தன்றும், வருகிற வெள்ளி சனி, ஞாயிறு ஆகிய தினங்களிலும் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி இல்லை என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
    Next Story
    ×