என் மலர்
உலகம்

இந்திய சுதந்திர தினம்: அதிபர் புதின் உள்ளிட்ட உலக தலைவர்கள் வாழ்த்து
- நாடு முழுவதும் 79-வது சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
- ரஷியா, அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் வாழ்த்து தெரிவித்துள்ளன.
மாஸ்கோ:
இந்தியா முழுவதும் நேற்று 79-வது சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. 79-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்திய நாட்டு மக்களுக்கு ரஷிய அதிபர் புதின் வாழ்த்து தெரிவித்தார். ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடிக்கு ரஷிய அதிபர் புதின் வாழ்த்துச் செய்தி அனுப்பி உள்ளார்.
இதுதொடர்பாக, ரஷிய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி:
அறிவியல், தொழில்நுட்ப மற்றும் பிற துறைகளில் இந்தியா பரவலாக அங்கீகரிக்கப்பட்ட வெற்றியைப் பெற்றுள்ளது. உலக அரங்கில் முக்கிய பிரச்சனைகளைத் தீர்ப்பதில் இந்தியா முக்கிய பங்களிக்கிறது. கூட்டு முயற்சிகள் மூலம் இந்தியா-ரஷியா ஒத்துழைப்பை தொடர்ந்து விரிவுபடுத்துவோம் என தெரிவித்தார்.
அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி மார்கோ ரூபியோ: இந்தியாவும் அமெரிக்காவும் ஒன்றாகச் செயல்படுவது இன்றைய நவீன சவால்களை எதிர்கொள்ளும், இரு நாடுகளுக்கும் பிரகாசமான எதிர்காலத்தை உறுதி செய்யும் என தெரிவித்துள்ளார்.
ஈரான் வெளியுறவு அமைச்சகம், இந்தியாவிற்கு அன்பான வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். இரு நாடுகளுக்கும் இடையே இருதரப்பு உறவுகள் மற்றும் ஒத்துழைப்பை மேம்படுத்துவதில் தெஹ்ரான் உறுதியாக உள்ளது.
பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு, மாலத்தீவு அதிபர் முகமது முய்சு உள்ளிட்டோரும் வாழ்த்து தெரிவித்தனர். மேலும், ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், உக்ரைன், நேபாளம், இலங்கை நாடுகளும் இந்தியாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளன.






