ராம கதை கேட்க பிரதமராக வரவில்லை, இந்துவாக வந்துள்ளேன் - ரிஷி சுனக் பெருமிதம்

ஆன்மீக தலைவரான மொராரி பாபு கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் ராம கதை உபன்யாசம் செய்து வருகிறார்.இந்த நிகழ்ச்சி ஆகஸ்ட் 12-ல் தொடங்கியது. வரும் 20-ம் தேதியுடன் முடிவடைகிறது.
ராம கதை கேட்க பிரதமராக வரவில்லை, இந்துவாக வந்துள்ளேன் - ரிஷி சுனக் பெருமிதம்
Published on

லண்டன்:

ஆன்மீக தலைவரான மொராரி பாபு பிரிட்டனில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் சென்று ராம கதை தொடர்பான உபன்யாசம் நிகழ்த்தி வருகிறார்.

இந்த நிகழ்ச்சி கடந்த 12ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. வரும் 20-ம் தேதியுடன் முடிவடைகிறது.

இந்நிலையில், இந்திய சுதந்திர தினமான நேற்று இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.

அப்போது அவர் பேசியதாவது:

இந்திய சுதந்திர தினத்தன்று ராம கதை நிகழ்ச்சியில் பங்கேற்பதை பெருமையாகக் கருதுகிறேன்.

நான் இங்கு பிரதமராக வரவில்லை, ஓர் இந்துவாக வந்துள்ளேன்.

என்னைப் பொறுத்தவரை நம்பிக்கை மிகவும் தனிப்பட்டது. என் வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திலும் அது என்னை வழிநடத்துகிறது.

பிரதமராக இருப்பது மிகப்பெரிய கவுரவம், ஆனால் அது எளிதான பணி அல்ல. எடுக்க கடினமான முடிவுகள் உள்ளன. நம் நம்பிக்கை எனக்கு தைரியத்தையும், வலிமையையும், நம் நாட்டிற்கு என்னால் முடிந்ததைச் செய்ய உறுதியையும் அளிக்கிறது.

ராமாயணம், பகவத் கீதை மற்றும் அனுமான் சாலிசா ஆகியவற்றை நினைவு கூர்ந்து இன்று இங்கிருந்து புறப்படுகிறேன்.

என்னைப் பொறுத்தவரை வாழ்க்கையின் சவால்களை தைரியமாக எதிர்கொள்ளவும், பணிவுடன் ஆட்சி செய்யவும், தன்னலமின்றி உழைக்கவும் ராமர் எப்போதும் ஓர் உத்வேகமான நபராக இருப்பார் என தெரிவித்தார்.

பிரதமர் ரிஷி சுனக் தனது உரையை ஆரம்பிக்கும் போதும், முடிக்கும் போதும் ஜெய் ராம் என கூறியது குறிப்பிடத்தக்க்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com