என் மலர்
உலகம்

வரிகள் மூலம் பணம் குவிகிறது: எனது ஆட்சி அமெரிக்காவின் பொற்காலம்- பாராளுமன்றத்தில் டிரம்ப் பேச்சு
- நான் விதித்த வரி மூலம் நாட்டின் வளர்ச்சி அதிகரித்துள்ளது.
- சாதனை அளவில் நாடு கடத்தல் நடவடிக்கையை மேற்கொண்டோம்.
அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது 2-வது ஆட்சி காலத்தின் முதலாம் ஆண்டு நிறைவையொட்டி பாராளுமன்றத்தில் உரையாற்றினார். தனது ஆட்சியின் முக்கிய சாதனைகள், எதிர்கால திட்டங்கள் குறித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
நான் ஆட்சி பொறுப்பேற்று ஓராண்டு காலத்திலேயே யாரும் பார்த்திடாத மாற்றத்தை அடைந்து உள்ளோம். எனது ஆட்சி அமெரிக்காவின் பொற்காலமாக திகழ்ந்து வருகிறது. இது ஒரு யுகத்திற்கான திருப்பம் ஆகும்.
அமெரிக்க பொருளாதாரம் வலுப்பெற்று வருகிறது. நாட்டின் எல்லைகள் பாதுகாப்பாக உள்ளன. ஒரு ஆண்டுக்கு முன்பு இருந்த பொருளாதார தேக்கநிலை, பணவீக்கம் போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டு உள்ளோம். உலக அரங்கில் அமெரிக்காவுக்கு மீண்டும் மரியாதை கிடைத்துள்ளது. நாட்டின் எதிரிகள் பீதியில் உள்ளனர்.
அமெரிக்கா மீது பல நாடுகள் அதிக வரிகளை விதித்தன. இதனால் அந்த நாடுகள் மீது வரி நடவடிக்கைகளை எடுத்தேன். அமெரிக்காவின் பொருளாதார மாற்றத்திற்கான முதன்மைக் காரணங்களில் ஒன்று இந்த வரி விதிப்பு ஆகும். பல தசாப்தங்களாக நம்மை ஏமாற்றி வந்த நாடுகள் இப்போது நூற்றுக்கணக்கான பில்லியன் டாலர்களை வரிகள் மூலம் நமக்குக் கொடுத்து வருகின்றன.
அவர்கள் நம்மை மிகவும் மோசமாக ஏமாற்றி வந்தனர். வெளிநாடுகளால் செலுத்தப்படும் வரிகள் நவீன கால வருமான வரி முறையை கணிசமாக மாற்றும். அமெரிக்க மக்களிடமிருந்து ஒரு பெரிய நிதிச் சுமையை நீக்கும். வரி விதிப்பு மூலம் பல நாடுகளுடன் வர்த்தக ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஒப்பந்தங்கள் அனைத்தும் முடிந்துவிட்டன. அவர்கள் முன்பு போல் பணம் சம்பாதிக்கவில்லை. ஆனால் நாம் நிறைய பணம் சம்பாதிக்கிறோம்.
கடந்த 4 நாட்களுக்கு முன்பு பரஸ்பர வரி விதிப்பு நடவடிக்கையை ரத்து செய்து அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டு ஒரு துரதிருஷ்டவசமான தீர்ப்பை வழங்கியது. ஆனால் அனைத்து நாடுகளும், நிறுவனங்களும் தாங்கள் ஏற்கனவே செய்த ஒப்பந்தத்தை வைத்திருக்க விரும்புகின்றன. நான் விதித்த வரி மூலம் நாட்டின் வளர்ச்சி அதிகரித்துள்ளது.
இந்த வரிகள் சட்டபூர்வமானது. அது தொடர்ந்து செயல்பாட்டில் இருக்கும். வரிகள் மூலம் அமெரிக்காவுக்கு பணம் குவிகிறது. நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்துகிறது.
நாட்டில் சட்டவிரோத குடியேற்றத்தை தடுத்து வருகிறோம். சட்ட விரோதமாக குடியேறியவர்களை நாடு கடத்துகிறோம். அவர்கள் நமக்கு தேவையில்லை. சாதனை அளவில் நாடு கடத்தல் நடவடிக்கையை மேற்கொண்டோம்.
சட்டவிரோத குடியேறிகளுக்கு வணிக ஓட்டுநர் உரிமங்களை வழங்குவதை தடுக்கும் டலிலா சட்டத்தை பாராளுமன்றம் நிறைவேற்ற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
ஆபரேஷன் மிட்நைட் ஹேமர் நடவடிக்கை மூலம் அணுசக்தி திட்டத்தை நாங்கள் அழித்தோம். இல்லையென்றால் ஈரானின் ஆட்சி பயங்கரவாதத்தை பரப்பியிருக்கும். ஈரானிடம் அணு ஆயுதத்தை வைத்திருக்க அனுமதிக்க முடியாது.
ஈரான் ஏற்கனவே ஐரோப்பாவையும் வெளிநாடுகளில் உள்ள அமெரிக்க தளங்களையும் அச்சுறுத்தக்கூடிய ஏவுகணைகளை உருவாக்கியுள்ளன. விரைவில் அமெரிக்காவை அடையும் ஏவுகணைகளை உருவாக்க பணியாற்றி வருகின்றனர்.
எதிர்காலத்தில் ஈரானின் எந்தவொரு அணுசக்தி லட்சியங்களையும் அமெரிக்கா பொறுத்துக்கொள்ளாது என்றார்.






