search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    உக்ரைன் மீது அடுத்தடுத்து ஏவுகணை, ட்ரோன் தாக்குதல் நடத்திய ரஷியா... அப்பாவி மக்கள் 19 பேர் பலி!
    X

    உக்ரைன் மீது அடுத்தடுத்து ஏவுகணை, ட்ரோன் தாக்குதல் நடத்திய ரஷியா... அப்பாவி மக்கள் 19 பேர் பலி!

    • 2 ஏவுகணைகள் உமான் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்தை தாக்கின.
    • ரஷியாவின் 11 ஏவுகணைளை உக்ரைன் விமானப்படை இடைமறித்து அழித்ததாக தெரிவித்துள்ளது.

    உமான்:

    உக்ரைன் மீது ரஷியா ராணுவ நடவடிக்கையை தொடங்கி தீவிரமாக தாக்குதல் நடத்தி வருகிறது. சில முக்கிய நகரங்களை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்த ரஷியா, தொடர்ந்து முன்னேறி வருகிறது. அடிக்கடி நீண்ட தூர ஏவுகணைகளை வீசி தாக்குதல்களை நடத்துகிறது. ராணுவ நிலைகள் மட்டுமின்றி மக்கள் வசிக்கும் பகுதிகளையும் கடுமையாக தாக்கி வருகிறது. இதனால் உயிரிழப்பு தொடர்ந்து அதிகரிக்கிறது. ரஷியாவின் தாக்குதலுக்கு உக்ரைன் ராணுவம் பதிலடி கொடுத்து வருகிறது. சமாதான பேச்சுவார்த்தைகளில் பெரிய அளவில் முன்னேற்றம் இல்லாததால், ஓராண்டைக் கடந்தும் சண்டை நீடிக்கிறது.

    இந்நிலையில் உக்ரைனின் மத்திய பகுதியில் ரஷியா இன்று அடுத்தடுத்து ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. 20க்கும் மேற்பட்ட ஏவுகணைகள், 2 ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில், 2 ஏவுகணைகள் உமான் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்தை தாக்கின. இதில் 17 பேர் கொல்லப்பட்டதாக பிராந்திய கவர்னர் தெரிவித்துள்ளார். மற்றொரு பகுதியில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். இடிபாடுகளில் சிக்கிய 17 பேர் காயமடைந்துள்ளனர். 3 குழந்தைகள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.

    கிட்டத்தட்ட இரண்டு மாதங்களுக்குப் பிறகு தலைநகர் கீவ் மீது முதல் முறையாக ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. கீவ் மீது பறந்த 11 ஏவுகணைகள் மற்றும் 2 ஆளில்லா விமானங்களை உக்ரைன் விமானப்படை இடைமறித்ததாக நகர நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    Next Story
    ×