என் மலர்
உலகம்

பொதுத்தேர்தல்: மாகாண முதல்வர்களுடன் ஆலோசனை நடத்திய நேபாள பிரதமர் சுஷிலா கார்கி
- அடுத்த ஆண்டு மார்ச் மாதம் பொதுத் தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
- ஒருமித்த கருத்து ஏற்பட கட்சி தலைவர்கள் உள்ளிட்டோர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
இந்தியாவின் அண்டை மாநிலமான நேபாளத்தில், ஊழல் அரசியல் தலைவர்களுக்கு எதிராக Gen Z என்ற பெயரில் இளைஞர்கள் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டம் காரணமாக பிரதமர் கே.பி. ஷர்மா ஒலி தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனால் 73 வயதான முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி சுஷிலா கார்கி பிரதமராக பதவி ஏற்றார். பதவி ஏற்ற சுஷிலா கார்கி, அடுத்த வருடம் மார்ச் 5ஆம் தேதி பொதுத் தேர்தல் நடத்தப்படும் என அறிவித்தார்.
அதற்கான பணிகளை அவர் செய்து வருகிறார். இந்த நிலையில், நேபாளத்தில் உள்ள 7 மாகாண முதல்வர்களுடன் இன்று ஆலோசனை நடத்தினார்.
மாறிவிட்ட அரசியல் சூழலில் மத்திய மற்றும் மாகாண அரசுகளுக்கு இடையேயான உரையாடல் மற்றும் ஒருங்கிணைப்பை வலுப்படுத்துவதற்காக இந்தக் கூட்டம் கூட்டப்பட்டதாக பிரதமரின் செய்தித் தொடர்பாளர் ராம் பகதூர் ராவல் தெரிவித்தார்.
தேர்தல் தொடர்பாக கட்சிகளின் நிலைகளை தெளிவாக தெரிந்து கொள்ள நேற்று, நேபாளி காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர்கள் ககன் தபா, பிஷ்வா பிரகாஷ் சர்மாவை சந்தித்து பேசினார்.
நேபாளி காங்கிரஸ், தேர்தலில் போட்டியிட திட்டமிட்டுள்ளது என உறுதி அளித்துள்ளது. நாங்கள் Gen Z குரூப்புகளுடனும் மற்ற அரசியல் கட்சிகளுடன் தீவிர பேச்சுவார்த்தை நடத்துவோம் எனத் தெரிவித்தனர்.






