மாணவர்கள் தூங்குவதற்கு கட்டணம் கேட்கும் தொடக்கப் பள்ளி: மேஜை, தரை, பெட் என தனித்தனி பீஸ்

அடுத்து பள்ளி ரெஸ்ட்ரூம் அல்லது மூச்சு விடுவதற்கு பணம் வசூலிக்குமா? பணம் சம்பாதிப்பதற்காகவே பள்ளி பைத்தியமாகிவிட்டது என விமர்சனம்
மாணவர்கள் தூங்குவதற்கு கட்டணம் கேட்கும் தொடக்கப் பள்ளி: மேஜை, தரை, பெட் என தனித்தனி பீஸ்
Published on

சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில் உள்ள தனியார் தொடக்க பள்ளி ஒன்று, மாணவர்கள் மதிய உணவிற்குப் பிறகு தூங்குவதற்கு கட்டணம் வசூலிக்க முடிவு செய்தது. இதுகுறித்து பெற்றோர்களுக்கு பள்ளி சார்பில் தகவல் குறுஞ்செய்தி அனுப்பியுள்ளது.

அதில் குழந்தைகள் பள்ளி மேஜையில் (டெஸ்க்) தலை வைத்து தூங்குவதற்கு இந்திய பண மதிப்பல் 2,275 ரூபாய் செலுத்த வேண்டும். அதேவேளையில் வகுப்பறை தரையில் தூங்குதவற்கு 4,049 ரூபாய் செலுத்த வேண்டும். மிகவும் வசதியாக பெட்டில் (மெத்தை) தூங்க வேண்டுமென்றால் 7,856 ரூபாய் செலுத்த வேண்டும் என தெரிவித்துள்ளது.

இந்த தகவலை அறிந்த பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும், இதுகுறித்த செய்தி சமூக வலைத்தளங்களில் பரவி, விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.

பள்ளியில் தூங்க விருப்பம் இல்லாத மாணவர்கள் வீட்டிற்கு செல்லலாம் என அறிவித்துள்ள பள்ளி நிர்வாகம், மாணவர்கள் தூங்கும்போது, ஆசிரியர்கள் அவர்களை பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதால் பணம் வசூலிப்பதை நியாயப்படுத்தியுள்ளது.

"இது நகைச்சுவையா? பணம் சம்பாதிப்பதற்காகவே பள்ளி பைத்தியமாகிவிட்டது" என ஒருவர் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

இன்னொருவர், "மாணவர்கள் தங்கள் மேஜைகளில் தூங்குவதற்கு ஏன் பணம் செலுத்த வேண்டும் என்பதை நான் மட்டும் புரிந்து கொள்ளவில்லையா?" எனக் குறிப்பிட்டுள்ளார்.

மற்றொருவர், "இது கேலிக்கூத்தானது. அடுத்து பள்ளி ரெஸ்ட்ரூம் அல்லது மூச்சு விடுவதற்கு பணம் வசூலிக்குமா?" என கேள்வி எழுப்பியுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com