search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    அணு உலை
    X
    அணு உலை

    ரஷிய ராணுவம் தாக்குதல் நடத்திய அணுமின் நிலையத்தில் இன்று தீப்பிடித்தது

    உக்ரைனில் உள்ள ஜாபோரி ஜியா அணுமின் நிலையம் மீது ரஷியா நேற்று தாக்குதல்களை நடத்தியது.

    கீவ்:

    உக்ரைனில் தாக்குதல் நடத்தி வரும் ரஷிய படைகள் அந்நாட்டில் உள்ள அணுமின் நிலையங்களை கைப்பற்றவும் தாக்குதல் நடத்தியது.

    முதலில் செர்னோபில் அணுமின் நிலையத்தை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விட்டதாக ரஷியா அறிவித்தது. கைவிடப்பட்ட செர்னோபில் அணுமின் நிலையம் ரஷியா வசம் சென்று விட்டதால் பேரழிவு ஏற்படலாம் என்று உக்ரைன் தெரிவித்தது.

    இதற்கிடையே உக்ரைனில் உள்ள ஜாபோரி ஜியா அணுமின் நிலையம் மீது ரஷியா நேற்று தாக்குதல்களை நடத்தியது. பின்னர் அந்த அணுமின் நிலையத்தை ரஷிய படைகள் கைப்பற்றியது. தாக்குதல் காரணமாக அணுமின் நிலைய முக்கிய கட்டிடங்கள் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அந்த தீயை போராடி அணைத்தனர்.

    அணுஉலை நிலையத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டதால் அங்கு கதிர்வீச்சு ஆபத்து ஏற்பட்டு விடுமோ என்ற பீதி நிலவி வருகிறது.

    இதுகுறித்து உக்ரைன் அரசு கூறும்போது, “செர்னோபில் மற்றும் புகுஷிமா போன்ற அணுமின் நிலைய விபத்துக்களை விட ஜபோரி ஜியாவில் அணுசக்தி பேரழிவு மோசமாக இருக்கலாம்” என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.

    இந்த நிலையில் ரஷியாவின் தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கும் ஜபோரி ஜியா அணுஉலை நிலையத்தில் இன்று அதிகாலை திடீரென்று தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அங்குள்ள முக்கிய பகுதிகளில் தீப்பிடித்து எரிவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

    இதனால் அந்த அணுமின் நிலையத்தில் இருந்து கதிர் வீச்சு கசிவு ஏற்பட்டுவிடுமோ என்ற பெரும் பீதி நிலவி வருகிறது. இதனால் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டு இருக்கிறார்கள்.

    ஜபோரி ஜியா அணுமின் நிலையம் ஐரோப்பாவின் மிகப்பெரிய அணுமின் நிலையம் என்பது குறிப்பிடத்தக்கது.

    ரஷிய படை, ஜபோரி ஜியா அணுமின் நிலையத்தை கைப்பற்றி இருக்கும் நிலையில் மேலும் ஒரு அணுமின் நிலையத்தை கைப்பற்ற தீவிரமாகி உள்ளது.

    உக்ரைன் நாட்டில் உள்ள 2-வது பெரிய அணுமின் நிலையம் யுஷ்னோக்ரைன்ஸ்க் நகரில் உள்ளது. இந்த அணுமின் நிலையத்தை குறி வைத்து தாக்குதல் நடத்த ரஷியா தயாராகி வருகிறது.

    தற்போது யுஷ்னோக்ரைன்ஸ்கில் உள்ள அணுமின் நிலையத்துக்கு 32 கிலோ மீட்டர் தொலைவில் ரஷிய படைகள் உள்ளன. இதனால் விரைவில் 2-வது அணுமின் நிலையத்தையும் கைப்பற்ற தாக்குதல் நடத்தப்படும் என்று தெரிகிறது.

    இதற்கிடையே அணுமின் நிலையம் அருகே துப்பாக்கி சூடு நடத்துவதை நிறுத்த வேண்டும் என்று உக்ரைன் வலியுறுத்தி உள்ளது.

    இதையும் படியுங்கள்... கேரளாவில் இன்று முதல் 3 நாட்கள் பலத்த மழைக்கு வாய்ப்பு

    Next Story
    ×