என் மலர்
செய்திகள்

நைஜீரியா - லசா காய்ச்சலுக்கு பலியானோர் எண்ணிக்கை 93 ஆக அதிகரிப்பு
நைஜீரியாவில் வேகமாக பரவி வரும் லசா காய்ச்சலுக்கு பலியானோர் எண்ணிக்கை 93 ஆக அதிகரித்துள்ளது. #NigeriaLassafever
அபுஜா:
உலகின் மிக மோசமான நோய்களில் ஒன்றான லசா காய்ச்சல் கடந்த ஆண்டு தொடக்கத்தில் திடீரென வேகமாக பரவி, 23 நாடுகளை தாக்கி, 171 பேரை கொன்றது. இந்த நோய் நைஜீரியாவில் மீண்டும் பரவி வருகிறது.
நைஜீரியாவில் கடந்த இரு மாதமாக லசா காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. லசா காய்ச்சலுக்கு பலியாவோர் எண்ணிக்கை 93 ஆக அதிகரித்துள்ளது. நைஜிரியாவின் 21 மாநிலங்களில் லசா காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என தேசிய மையக் கண்காணிப்பு அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
லசா வைரசானது மார்பர்க் மற்றும் எபோலா எனும் இரண்டு கொடிய வைரஸ்களின் குடும்பத்தைச் சார்ந்தது. இதனால் கடுமையான காய்ச்சல், வாந்தி மற்றும் இரத்த சோகை போன்ற பிரச்னைகள் ஏற்படும். லசா எனும் பெயர் வடக்கு நைஜீரியாவின் லசா நகரத்திலிருந்து வந்ததாகும். இந்நோய் 1969 ஆம் ஆண்டில் கண்டறியப்பட்டது.
இந்த வைரஸ் எலிகள் மூலமாகவும், இந்நோய் பாதிக்கப் பட்டவர்களின் தொற்றினாலும் பரவ அதிக வாய்ப்புள்ளது. மேலும் இந்நோய் பரவுவதை தடுக்க சுகாதாரத்துடனும், எலிகளின் தொற்று இல்லாமலும் இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. #NigeriaLassafever
Next Story






