search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வங்காளதேசத்தில் பாராளுமன்ற தேர்தல் முடிந்தது - வன்முறைக்கு 17 பேர் பலி
    X

    வங்காளதேசத்தில் பாராளுமன்ற தேர்தல் முடிந்தது - வன்முறைக்கு 17 பேர் பலி

    வங்காளதேசத்தில் பாராளுமன்ற தேர்தலில் வாக்குப்பதிவு இன்று மாலை 4 மணியுடன் முடிந்த நிலையில் தேர்தல்சார்ந்த வன்முறை சம்பவங்களில் 17 பேர் கொல்லப்பட்டனர். #Bangladeshelection #Bangladeshelectionclash #BNPsupporters
    டாக்கா:

    வங்காளதேசம் நாட்டு பாராளுமன்ற தேர்தல் இன்று காலை 8 மணியளவில் தொடங்கியது.  பாராளுமன்றத்தில் மொத்தமுள்ள 300 தொகுதிகளில் 299 தொகுதிகளில் நடைபெறும் தேர்தலில் 1,848 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.   

    அடுத்த பிரதமரை தேர்ந்தெடுக்க 40,183 மையங்களில் நடைபெற்ற வாக்குப்பதிவில் பெண்கள் உள்பட பலர் ஆர்வத்துடன் வரிசையில் நின்று வாக்களித்தனர்.  பிரதமர் ஷேக் ஹசீனா டாக்கா சிட்டி கல்லூரியில் இன்று காலை முதல்நபராக நின்று வாக்களித்தார். 

    தேர்தலுக்கு முன்னர் நடைபெற்ற வன்முறை சம்பவங்களில் 13 பேர் உயிரிழந்ததால் அசம்பாவித சம்பவங்களை தடுக்க ராணுவ வீரர்கள், துணை ராணுவ படையினர் உள்ளிட்ட 6 லட்சத்திற்கும் கூடுதலான வீரர்கள் நாடு முழுவதும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். 

    எனினும், ஷேக் ஹசீனா தலைமையிலான ஆளும் அவாமி லீக் கட்சி மற்றும் ஊழல் வழக்கில் சிறையில் தண்டனை அனுபவித்துவரும் கலிதா ஜியா தலைமையிலான வங்காளதேச தேசியவாத கட்சி (பி.என்.பி.) ஆதரவாளர்களிடையே நாட்டின் சில பகுதிகளில் வன்முறையும் மோதலும் ஏற்பட்டது. 

    இந்த மோதல்களில்  இன்று மாலை நிலவரப்படி 17 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். வன்முறை வெடித்த பகுதிகளுக்கு கூடுதலாக போலீசாரும் ராணுவத்தினரும் அனுப்பி வைக்கப்பட்டனர். காயமடைந்த சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்ககூடும் என அஞ்சப்படுகிறது. 

    இந்த வன்முறைகள் தொடர்பான செய்திகள் பிறபகுதிகளுக்கு பரவாத வகையில் கைபேசி இன்டர்நெட்  சேவைகள் நாடு முழுவதும் முடக்கப்பட்டது. ஒரு தனியார் தொலைக்காட்சி சேவையும் இடைமறித்து தடை செய்யப்பட்டது.

    இந்நிலையில், இன்று மாலை 4 மணியுடன் வாக்குப்பதிவு முடிவடைந்தது. வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்னும் 24 மணி நேரத்தில் முடிவுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. #17killed #Bangladesh #Bangladeshelection #Bangladeshelectionclash #AwamiLeague #BNPsupporters
    Next Story
    ×