search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குர்திஸ்தானில் நடந்த பொதுவாக்கெடுப்பு முடிவுகளை வெளியிடக்கூடாது: ஈராக் பிரதமர் வலியுறுத்தல்
    X

    குர்திஸ்தானில் நடந்த பொதுவாக்கெடுப்பு முடிவுகளை வெளியிடக்கூடாது: ஈராக் பிரதமர் வலியுறுத்தல்

    குர்திஸ்தானில் சுதந்திர நாடு கோரி நடத்தப்பட்ட பொது வாக்கெடுப்பு முடிவுகளை வெளியிடக்கூடாது என ஈராக் பிரதமர் வலியுறுத்தி உள்ளார்.
    பாக்தாத்:

    ஈராக்கின் வடபகுதியில் குர்து இன மக்கள் பெரும்பான்மையாக வாழும் குர்திஸ்தான் பகுதி ஈராக் ஆட்சியின் கீழ் தன்னாட்சி அதிகாரத்துடன் செயல்படுகிறது. ஈராக்கின் எண்ணெய் வளம் மிக்க இந்த பகுதியை குர்திஸ்தான் என்ற சுதந்திர நாடாக அறிவிக்கும்படி குர்து மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இதற்காக போராட்டங்களிலும் ஈடுபட்டனர்.

    இந்நிலையில், குர்திஸ்தான் பிராந்தியத்தில் சுதந்திர நாடு கோரி கடந்த திங்கட்கிழமை பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அரசாங்கத்தின் கடும் எதிர்ப்பையும் மீறி நடத்தப்பட்ட இந்த வாக்கெடுப்பின் முடிவுகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. எனினும், சுதந்திரத்திற்கு ஆதரவாக பெருவாரியான மக்கள் வாக்களித்திருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த வாக்கெடுப்பின் முடிவுகள், தனி நாடு தொடர்பான பேச்சுவார்த்தையை தொடங்குவதற்கு அழுத்தம் கொடுக்கும் என குர்திஷ் தலைவர்கள் கூறுகின்றனர்.

    இந்நிலையில், ஈராக் பாராளுமன்றத்தில் இன்று உரையாற்றிய பிரதமர் ஹைதர் அல் அபாதி, குர்திஸ்தான் பிராந்திய அரசு பொதுவாக்கெடுப்பு முடிவுகளை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்.

    “ஈராக் அரசுக்கு எதிராக நடத்தப்பட்ட பொது வாக்கெடுப்பின் முடிவுகள் குறித்து குர்திஸ்தான் பிராந்திய அரசு அதிகாரிகளுடன் ஒருபோதும் விவாதிக்கப் போவதில்லை. மாறாக அரசியலமைப்பை உருவாக்குவது தொடர்பான விவாதத்தை தொடங்க குர்திஷ் தலைவர்கள் வரவேண்டும். குர்திஸ்தான் பிராந்தியத்தின் அனைத்து பகுதிகளிலும் ஈராக் ஆட்சிமுறையை நடைமுறைப்படுத்துவோம்.

    வெள்ளிக்கிழமை பிற்பகலுக்குள் இர்பில் மற்றும் சுலைமானியா விமான நிலையங்களை தங்கள் கட்டுப்பாட்டில் இருந்து  விடுவித்து ஒப்படைக்காவிட்டால் குர்திர்ஸ்தான் பிராந்தியத்திற்கு நேரடி சர்வதேச விமானங்களை வர விடாமல் தடுப்போம். மேலும், அனைத்து எல்லைகள் மற்றும் எண்ணெய் வருவாயை ஒப்படைக்க வேண்டும்” என்று வலியுறுத்தினார் பிரதமர் அபாதி.
    Next Story
    ×