என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

'காந்தியாக இருந்தால் என்ன... ராமராக இருந்தால் என்ன? பெயரா முக்கியம்' - சி.வி.சண்முகம்
- ராமன் ஆண்டால் என்ன? ராவணன் ஆண்டால் என்ன?
- மகாத்மா காந்தியின் பெயரை நீக்குவது அவரது பாரம்பரியத்தை மறைக்கும் செயல்
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் பெயரை 'விக்சித் பாரத் - வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார உத்தரவாத இயக்கம் - கிராமப்புறம்' என்று மத்திய அரசு மாற்றியது. இது சுருக்கமாக விபி-ஜி ராம்ஜி என அழைக்கப்படுகிறது. மத்திய அரசின் இந்த மசோதாவிற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
இத்திட்டத்தில் இருந்து மகாத்மா காந்தியின் பெயரை நீக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழ்நாடு சட்டசபையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தீர்மானம் நிறைவேற்றினார். காந்தியின் பெயரை மீண்டும் சேர்க்க வேண்டும் என்று இத்தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
தற்போதுவரை மகாத்மா காந்தியின் பெயரை நீக்குவது அவரது பாரம்பரியத்தை மறைக்கும் செயல் என எதிர்க்கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகின்றன. இந்நிலையில் காந்தியாக இருந்தால் என்ன, ராமராக இருந்தால் என்ன பெயரா முக்கியம், வேலைதான் முக்கியம் என அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பேசியுள்ளார்.
விழுப்புரத்தில் அதிமுக நிர்வாகிகளிடையே பேசிய அவர்,
"திமுக அரசு மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் பெயரை மத்திய அரசு மாற்றிவிட்டது எனக்கூறி வருகிறது. வேலையை நிறுத்திவிட்டார்கள் எனக்கூறுகிறார்கள். என்ன பெயராக இருந்தால் என்ன? ராமன் ஆண்டால் என்ன? ராவணன் ஆண்டால் என்ன? எங்களுக்கு என்ன? எங்களுக்கு சோறு கிடைத்தால் போதும். காந்தி பெயரை வைத்தால் என்ன? ராமர் பெயரை வைத்தால் என்ன? திட்டம்தான் முக்கியம். பெயரில் என்ன இருக்கிறது?
காந்திமேல் ரொம்ப பாசம். இந்திரா காந்தியை கல்லால் அடித்தார்கள். ஆனால் காந்திமேல் பாசம் வந்துள்ளது திமுகவுக்கு. எங்களுக்கு தேவை வேலை". எனப் பேசியுள்ளார்.






