என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

வீராணம் ஏரி 6-வது முறையாக நிரம்பியது: விவசாயிகள் மகிழ்ச்சி
- கடந்த சில நாட்களாக பெய்த மழை காரணமாக மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியது.
- சென்னை மக்களின் குடி நீர் தேவைக்காக வினாடிக்கு 73 கன அடி தண்ணீர் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.
சேத்தியாதோப்பு:
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில் அருகே லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது.
இந்த ஏரி கடலூர் மாவட்டத்தில் மிகப்பெரிய நீர் ஆதாரமாகவும், விவசாய பயன்பாடு மற்றும் உள்நாட்டு மீனவர்கள் வாழ்வாதாரமாக விளங்கி வருகிறது.
இந்த ஏரி மூலம் 34 பாசன மதகுகள் வழியாக 44 ஆயிரத்து 856 ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. இது தவிர சென்னை மக்களின் குடி நீர் தேவைக்காக வினாடிக்கு 73 கன அடி தண்ணீர் அனுப்பப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் வீராணம் ஏரி அதன் முழு கொள்ளவை 5-வது முறையாக கடந்த 1-ந்தேதி எட்டியது. கடந்த சில நாட்களாக பெய்த மழை காரணமாக மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியது.
இதனால் பாதுகாப்பு கருதி அணையில் இருந்து கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டது.
இந்த நிலையில் கீழணையில் இருந்து பல்வேறு ஓடைகள், மதகுகள் வழியாக வீராணம் ஏரிக்கு 470 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது.
மேலும் கடந்த வாரம் வெயிலின் தாக்கத்தில் ஏரியின் நீர் மட்டம் குறைந்த நிலையில் தற்போது தொடர் நீர்வரத்து அதிகரிப்பால் வீராணம் ஏரி 6-வது முறையாக முழு கொள்ளளவான 47.40 அடியை எட்டியது.
சென்னை மக்களின் குடி நீர் தேவைக்காக வினாடிக்கு 73 கன அடி தண்ணீர் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.
வி.என். எஸ். மதகு மூலம் 150 கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. மேலும் 470 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. பாசனத்திற்கு 247 கனஅடி நீர் திறந்து விடப்படுகிறது. ஏரியின் பாதுகாப்பு கருதி அதிகாரிகள் ஏரியின் மதகு, கரைகளை ஆய்வு செய்து வருகின்றனர்.
தற்போது வீராணம் ஏரி முழு கொள்ளளவை எட்டி உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
வீராணம் ஏரி பகுதியில் 11 மி.மீ மழை பதிவாகியுள்ளது.






