என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

போச்சம்பள்ளி அருகே லாரி மோதி பிளஸ்-2 மாணவன் பலி
- மகன் ஹரிபிரசாத், தற்போது 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதி வந்தார்.
- காயமடைந்த இளைஞருக்கு அதே மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
போச்சம்பள்ளி:
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த கொடமாண்டப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சபாபதி. இவரது மனைவி மேனகா. இவர் அதே ஊராட்சியில் தூய்மைப் பணியாளராக பணியாற்றி வருகிறார்.
இந்த தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இதில் இளைய மகன் ஹரிபிரசாத், தற்போது 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதி வந்தார்.
இந்நிலையில், நேற்றிரவு ஹரிபிரசாத் தனது நண்பருடன் இருசக்கர வாகனத்தில் கொடமாண்டப்பட்டி கூட்ரோடு நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த கனரக லாரி ஒன்று எதிர்பாராதவிதமாக இருசக்கர வாகனத்தின் பக்கவாட்டில் உரசியது.
இதில் நிலைதடுமாறி விழுந்த ஹரிபிரசாத், லாரியின் சக்கரத்தில் சிக்கி தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். உடன் சென்ற நண்பர் சாலையோரம் தூக்கி வீசப்பட்டதில், அவருக்கு கை முறிவு ஏற்பட்டது.
இந்த விபத்து போச்சம்பள்ளி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
விபத்தில் இறந்த ஹரிபிரசாத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக போச்சம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காயமடைந்த இளைஞருக்கு அதே மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேர்வு எழுதி வந்த மாணவன் விபத்தில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.






