என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

மறக்க முடியுமா அந்த கருப்பு ஞாயிறை?- இன்று சுனாமி தாக்கிய 21-ஆம் ஆண்டு நினைவு தினம்
- சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரை கிழக்கு கடலோர பகுதிகள் பாதிக்கப்பட்டன.
- சுனாமியின் போது பெற்றோரை இழந்த குழந்தைகளும், குழந்தைகளை இழந்த பெற்றோரும் ஏராளம்
நாம் வாழும் பூமியின் மொத்த பரப்பளவில் மூன்றில் ஒரு பங்கு மட்டுமே நிலம். மீதி கடல் தான். ஆசியா, ஐரோப்பா, வடஅமெரிக்கா, தென் அமெரிக்கா, ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் அண்டார்டிகா என 7 கண்டங்களாக பிரிந்து கிடக்கும் இந்த நிலப்பரப்பை எப்போதும் முத்தமிட்டு கொண்டிருப்பது கடல் அலைகள் தான்.
ஓய்வில்லாத இந்த அலைகளின் ஓசையை நித்தமும் கேட்டு மகிழ்வது தான் கடலோர மீனவ மக்களின் ஆசை. ஒவ்வொரு நாள் இரவிலும் அவர்களை தாலாட்டு இசை பாடி தூங்க வைப்பதே இந்த அலைகள் தான்.
'அழகு எங்கு இருக்கிறதோ, அங்கு தான் ஆபத்தும் இருக்கும்' என்று கூறுவது போல், இந்த அழகான அலைகளும் ஆபத்தை ஏற்படுத்திய ஆண்டு 2004.
அதே ஆண்டு டிசம்பர் 26-ந்தேதி அதிகாலை இந்தோனேசியாவில் உள்ள சுமத்ரா தீவு கடல் பகுதியில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால், சுனாமி எனும் ஆழிப்பேரலை 30 மீட்டர் உயரத்துக்கு கடலில் எழுந்து இந்தியா, இந்தோனேசியா, இலங்கை, மாலத்தீவு, தாய்லாந்து, மலேசியா உள்பட 14 நாடுகளில் உள்ள கடலோர பகுதிகளை பலமாக தாக்கியது.
என்னமோ... ஏதோ... என கரையோர மக்கள் உயிர் பிழைக்க ஓடிய போதும் இரக்கமில்லாத சுனாமி அரக்கன் வயது வித்தியாசமின்றி ஏராளமானோரை வாரிச் சுருட்டிக் கொண்டான்.
இதில் 14 நாடுகளிலும் கரையோரம் இருந்த 2 லட்சத்து 29 ஆயிரத்து 866 பேர் இறந்தார்கள். 43 ஆயிரத்து 786 பேரை காணவில்லை.
தமிழகத்தையும் இந்த சுனாமி விட்டுவைக்கவில்லை. சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரை கிழக்கு கடலோர பகுதிகள் பாதிக்கப்பட்டன.
10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் இறந்தனர். அதிகபட்சமாக நாகப்பட்டினத்தில் 6 ஆயிரத்து 65 பேரும், கடலூரில் 610 பேரும், சென்னையில் 206 பேரும் இறந்தனர். உயிர்ப்பலியை தாண்டி, பொருட்களின் சேத மதிப்பு பல ஆயிரம் கோடியை தாண்டியது.
சுனாமியின் போது பெற்றோரை இழந்த குழந்தைகளும், குழந்தைகளை இழந்த பெற்றோரும் ஏராளம். கடலோரப் பகுதியில் அன்றைக்கு எழுந்த மரண ஓலம் அடங்க பல ஆண்டு காலம் ஆனது. ஆனால், கடல் அலை போல இன்னும் துயரச் சுவடுகள் மட்டும் மறையவில்லை.
அன்றைக்கு சிறுவயதில் இறந்து போனவர்கள், உயிரோடு இருந்திருந்தால் இன்றைக்கு திருமணமாகி குடும்பமாக வாழ்ந்திருப்பார்கள். நடுவயதை ஒத்தவர்கள், பேரன், பேத்தி என்று வாழ்வை ரசித்து வந்திருப்பார்கள்.
இறந்தவர்கள் என்றும் மீள முடியாது என்பது இயற்கையின் இரக்கமற்ற நியதி. 'காலங்கள் கரைந்து போனாலும் கண்ணீர் மட்டும் மறையவில்லையே' என மக்கள் இன்றும் ஏங்கும் அளவுக்கு உறவுகளை பிரித்துச்சென்று பெருந்துயரம் தந்த சுனாமி வந்து சென்று 21 ஆண்டுகள் ஆகி விட்டது. ஆனாலும், கடற்கரையோரம் அந்த சோக கீதம் ஒலித்துக் கொண்டே தான் இருக்கிறது.
அந்த வகையில் சுனாமி தந்த சோகத்தின் 21-ம் ஆண்டு நினைவு தினம் இன்று சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரை வசிக்கும் கடலோர மக்களால் கடைபிடிக்கப்படுகிறது.
இதையொட்டி பல இடங்களில் கடலில் பால் ஊற்றி, பூக்களை தூவி இறந்து போனவர்களுக்காக அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியும் நடக்கிறது.






