சீமானுக்கு எதிரான வழக்கு விசாரணை வருகிற 21-ந் தேதிக்கு தள்ளிவைப்பு

சீமான் தரப்பு வழக்கறிஞர் அவரது தரப்பு விளக்கத்தை தெரிவிக்க மறுத்து மீண்டும் கால அவகாசம் கேட்டார்.நீதிபதி, ஏற்கனவே கடந்த எட்டாம் தேதி கடைசி வாய்ப்பு அளிக்கப்பட்டது என்று கூறினார்.
சீமானுக்கு எதிரான வழக்கு விசாரணை வருகிற 21-ந் தேதிக்கு தள்ளிவைப்பு
Published on

திருச்சி:

திருச்சி சரக டி.ஐ.ஜி.யாக இருப்பவர் வருண்குமார். இவர் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் அக்கட்சியை சேர்ந்தவர்கள் தன்னையும் தனது குடும்பத்தையும் சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாக திருச்சி ஜூடிசியல் மாஜிஸ்திரேட் நான்காவது கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது டி.ஐ.ஜி. கோர்ட்டில் ஆஜரானார். சீமான் ஆஜராகவில்லை.

பின்னர் டி.ஐ.ஜி தரப்பு வழக்கறிஞர் முரளி கிருஷ்ணன், ஏற்கனவே டி.ஐ.ஜி. கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையிலான விளக்கத்தை மாஜிஸ்ட்ரேட்டிடம் நேரில் அளித்தார்.

அப்போது, மனுதாரரை (டி.ஐ.ஜி. யை) எதிர்தரப்பினர் பிறப்பு வெறுப்பு ஏற்படும் வகையில் பேசியதாகவும், இதனால் கடும் மன உளைச்சலில் இருப்பதாகவும் தெரிவித்தார்.

ஆனால் இன்று சீமான் தரப்பு வழக்கறிஞர் அவரது தரப்பு விளக்கத்தை தெரிவிக்க மறுத்து மீண்டும் கால அவகாசம் கேட்டார்.

அப்போது நீதிபதி ஏற்கனவே கடந்த எட்டாம் தேதி கடைசி வாய்ப்பு அளிக்கப்பட்டது. அப்போது நீங்கள் வாதத்தை முன்வைக்கவில்லை.

வருகிற 21-ந் தேதி அடுத்த விசாரணை நடைபெறும். அன்று சீமான் தரப்பு விளக்கத்தை அளிக்க வேண்டும் என கூறினார்.

அதைத்தொடர்ந்து வழக்கு விசாரணை மீண்டும் 21-ந் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.

இந்த வழக்கில் டி.ஐ.ஜி. தரப்பு வழக்கறிஞர் ஆஜரான நேரத்தில் சீமான் தரப்பு வழக்கறிஞர் ஆஜராகாமல் தாமதம் செய்தார். அதைத்தொடர்ந்து அவருக்கு சிறிது நேரம் நீதிபதி அவகாசம் அளித்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com