என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

அரசியல் நாகரீகத்துக்கு கலங்கரை விளக்கமாகத் திகழ்ந்தவர் தோழர் நல்லக்கண்ணு - கமல் ஹாசன் இரங்கல்
- நல்லக்கண்ணு மறைவு தமிழ்நாடு முழுவதிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
- கமல் ஹாசன் தோழர் நல்லக்கண்ணு மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
சுதந்திர போராட்ட வீரரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவருமான தோழர் நல்லக்கண்ணு உடல்நலக்குறைவு காரணமாக இன்று (பிப். 25) மதியம் உயிரிழந்தார். இவரது மறைவு தமிழ்நாடு அரசியலில் பெரும் இழப்பை ஏற்படுத்தியுள்ளது. தோழர் நல்லக்கண்ணு மறைவு தமிழ்நாடு முழுவதிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
மறைந்த தோழர் நல்லக்கண்ணுவுக்கு அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் மற்றும் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்த வரிசையில், நடிகரும், எம்.பி.யுமான கமல் ஹாசன் தோழர் நல்லக்கண்ணு மறைவுக்கு இரங்கல் தெரிவித்து X தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில், "தனக்கென்று ஒரு வாழ்க்கை என்ற சிந்தையே இல்லாதவர்; பொதுநலத்துக்கென்றே சகலத்தையும் அர்ப்பணித்து வாழ்ந்தவர்; இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர், தோழர் நல்லகண்ணு ஐயா நம்மிடமிருந்து விடைபெற்றுக்கொண்டார்.
ஏழை எளிய மக்கள், தொழிலாளர்கள், விவசாயிகள் ஆகியோரின் நலன்களுக்காக 80 ஆண்டு காலம் அயர்வே இல்லாமல் களத்தில் நின்றவர். நேர்மைக்கும் தூய்மைக்கும் எளிமைக்கும் அரசியல் நாகரீகத்துக்கும் ஒரு கலங்கரை விளக்கமாகத் திகழ்ந்தவர்.
தகைசால் தமிழரே, செவ்வணக்கம். உமது புகழ் நிலைக்கட்டும். உமது பணிகள் எம்மில் தொடரட்டும்," என்று குறிப்பிட்டுள்ளார்.






