என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

கடலுக்கு மீன்பிடிக்க படகுகளில் சென்ற நாகை மீனவர்கள்.
11 நாட்களுக்கு பிறகு கடலுக்கு மீன்பிடிக்க சென்ற நாகை மீனவர்கள்
- நாகை துறைமுகத்தில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.
- நீண்ட நாட்களுக்கு பிறகு கடலுக்கு செல்வதால் அதிகளவில் மீன்கள் கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் மீனவர்கள் சென்றுள்ளனர்.
நாகப்பட்டினம்:
வங்கக்கடலில் உருவான மோன்தா புயல் காரணமாக மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என கடந்த 18-ந் தேதி மீன்வளத்துறை மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இதனால் நாகை மாவட்டத்தில் உள்ள அக்கரைப்பேட்டை, நாகூர், பட்டினச்சேரி, நம்பியார் நகர், செருதூர், காமேஷ்வரம், விழுந்தமாவடி, ஆறுகாட்டுதுறை, கோடியக்கரை உள்ளிட்ட 25 மீனவ கிராமங்களில் உள்ள 700 விசை படகுகள், 3,000 பைபர் படகுகள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. மேலும் நாகை துறைமுகத்தில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டும் ஏற்றப்பட்டது.
அதைத்தொடர்ந்து நேற்று மோந்தா புயல் கரையை கடந்ததை அடுத்து நாகை துறைமுகத்தில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு இறக்கப்பட்டது.
இதனால் கடல் சீற்றம் குறைந்தது. எனவே கடந்த 11 நாட்களுக்கு பிறகு மீனவர்கள் கடலுக்கு சென்று மீன்பிடிக்க மீன்வளத்துறையினர் அனுமதித்தனர்.
இதையடுத்து மீன்வளத்துறை மூலம் படகுகளுக்கு வழங்கப்படும் டோக்கன்கள் வழங்கப்பட்டு இன்று அதிகாலை நாகப்பட்டினம் மீன்பிடித்துறைமுகத்தில் இருந்து படகுகளில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.
நீண்ட நாட்களுக்கு பிறகு கடலுக்கு செல்வதால் அதிகளவில் மீன்கள் கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் மீனவர்கள் சென்றுள்ளனர்.






