என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    நடமாடும் உணவு பகுப்பாய்வு வாகனம் - பேக்கரி, தேநீர் கடைகள் ஆய்வு
    X

    நடமாடும் உணவு பகுப்பாய்வு வாகனம் - பேக்கரி, தேநீர் கடைகள் ஆய்வு

    • எண்ணெய்களில் பலமுறை பயன்படுத்திய எண்ணெய் கண்டறியப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டது.
    • வறுத்த நிலக்கடலை மற்றும் கோபி மஞ்சூரியனில் செயற்கை நிறமூட்டி சேர்க்கப்பட்டது கண்டுபிடித்து பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது.

    தர்மபுரி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் மருத்துவர் கைலாஷ்குமார் எம்.பி.,பி.எஸ்., மற்றும் சேலம் பகுப்பாய்வு கூட நடமாடும் பகுப்பாய்வு வாகன பொறுப்பாளர் முதுநிலை பொது பகுப்பாய்வாளர் நரசிம்மன் ஏற்பாட்டின்படி, தர்மபுரி மாவட்டத்தில், ஒன்றியம் வாரியாக ' நடமாடும் உணவு பகுப்பாய்வு வாகனத்தை முன்னிறுத்தி பொதுமக்கள் கூடும் இடங்கள் பேருந்து நிலைய மட்டும் தயாரிப்பு கூடங்கள் விற்பனை இடங்களில் விழிப்புணர்வு மற்றும் உணவுப் பொருட்கள் சேகரம் செய்து வாகனத்திலேயே பகுப்பாய்வு செய்து விழிப்புணர்வு மற்றும் உரிய மேம்பாட்டு அறிவிக்கை, அபராதம் உள்ளிட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    கடந்த வாரம் ஆந்திராவில் கலப்பட பால் அருந்தி கலப்படத்தினால் நான்கு பேர் உயிரிழப்பு அடிப்படையில் பால் மற்றும் பால் சார்ந்த உணவுப் பொருட்கள் விற்பனை நிலையங்கள், தயாரிப்பு கூடங்கள், சில்லறை நிலையங்கள், விநியோகப்பு நிலையங்களில் ஆய்வு செய்து கலப்படம் சார்ந்து உரிய நடவடிக்கை அபராதம், உணவு பாதுகாப்பு விதிகளை கண்காணித்து மேற்கொள்ள விழிப்புணர்வு நடவடிக்கை செய்ய மாநில உணவு பாதுகாப்பு துறை ஆணையர் உத்தரவிட்டார்.

    அதன் அடிப்படையில், தர்மபுரி ஒன்றியத்துக்கு உட்பட்ட எட்டிமரத்துப்பட்டி, ஆலிவாயன்கொட்டாய் , பருத்திநத்தம் உள்ளிட்ட பகுதிகளில் பால் சார்ந்த தயாரிப்பு முக்கியமாக பனீர், கிரீம், நெய் உள்ளிட்ட தயாரிப்பு நிலையங்களில் மாவட்ட நியமன அலுவலர் மருத்துவர் கைலாஷ் குமார் மேற்பார்வையில், தர்மபுரி நகராட்சி மற்றும் ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால் மற்றும் சேலம் பகுப்பாய்வுகூட இளநிலை பொது பகுப்பாய்வாளர் கார்த்திகேயன் உள்ளிட்ட குழுவினர் ஆய்வு செய்து பால் மாதிரி எடுத்து வாகனத்தில் ஆய்வு செய்யப்பட்டது.

    நான்கு இடங்களில் எடுக்கப்பட்ட பாலில் இரண்டு இடங்களில் தரம் குறைவாக காணப்பட்டு எச்சரிக்கை செய்யப்பட்டது. மேலும் மாவட்ட நியமன அலுவலர் அவ்விடம் சட்ட ரீதியான உணவு மாதிரி எடுத்து மேல் நடவடிக்கை எடுக்க உணவு பாதுகாப்பு அலுவலருக்கு உத்தரவிட்டார். மேலும் மேல்காரவோணி, பென்னாகரம் ரோடு கோதுமை மாவு மில் அருகில், சோகத்தூர் கூட்ரோடு மற்றும் புதிய பேருந்து நிலையப் பகுதிகளில் உள்ள பேக்கரி மற்றும் உணவகங்கள், தேநீர் கடைகள் ஆய்வு செய்தனர்.

    கடைகளில் இருந்து தேயிலை, உபயோகப்படுத்திய சமையல் எண்ணெய், இனிப்பு, காரம் , மசாலா பொருட்கள், கோபி மஞ்சூரி, வறுத்த நிலக்கடலை உள்ளிட்ட உணவுப் பொருட்கள் மாதிரி சேகரித்து நிகழ்விடத்திலேயே ஆய்வு செய்வதில் மூன்று இடங்களில் எடுக்கப்பட்ட எண்ணெய்களில் ஒரு எண்ணெய், பலமுறை பயன்படுத்திய எண்ணெய் என கண்டறியப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டது.

    இதேபோல் வறுத்த நிலக்கடலை மற்றும் கோபி மஞ்சூரியனில் செயற்கை நிறமூட்டி சேர்க்கப்பட்டது கண்டுபிடித்து பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது. மேற்படி மூன்று கடை உரிமையாளர்களுக்கு தலா ஆயிரம் வீதம் உடனடி அபராதம் விதித்து எச்சரிக்கை நோட்டீஸ் அளிக்கப்பட்டது.

    காரவோணி நான்கு ரோடு சந்திப்பில் ஒரு பேக்கரியில் ஆய்வின்போது தயாரிப்பு கூடம் சுகாதாரமின்மை குறைவாகவும், செய்தித்தாள்களில் உணவுப்பொருட்கள் பரிமாறுதல் காட்சிப்படுத்துதல், நெகிழி கவர்கள் காணப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் காலாவதியான எசென்ஸ் பாட்டில்கள் மற்றும் உரிய விபரங்கள் இல்லாத லோக்கல் குளிர்பானங்களும்

    பறிமுதல் செய்து அப்புறப்படுத்தப்பட்டது. பேக்கரிக்கு மேம்பாட்டு அறிவிக்கை நோட்டீஸ் அளித்து உடனடி அபராதம் ரூ.2000 விதிக்கப்பட்டு குறைபாடுகள் களைய எச்சரிக்கை செய்யப்பட்டது.

    இதேபோல் பென்னாகரம் ரோடு மேம்பாலம் அருகில் ஒரு பேக்கரியில் தேயிலை தரம் பார்வையிட்டதில் கலப்படம் கண்டறியப்பட்டு பறிமுதல் செய்து அப்புறப்படுத்தப்பட்டது. மேலும் பேக்கரியில் நெகிழிகவர்கள், அச்சிடப்பட்ட செய்தித்தாள்களில் எண்ணெய் பலகாரங்கள் பரிமாறுதல் மற்றும் காட்சிப்படுத்தல் காரணமாக மேற்படி கடை உரிமையாளர்க்கு ரூ.2000 அபராதம் விதித்து உடன் குறைபாடுகளை களைய எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்பட்டது.

    அப்போது அக்கடைக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கேன்களில் சப்ளை செய்ய வந்த வாகனத்தை ஆய்வு செய்ததில் கம்பெனிக்குரிய உரிய லேபிள் அச்சடிக்கப்படாமலும் பல்வேறு கம்பெனி குடிநீர்க்கேன்கள் இருந்ததும் தயாரிப்பு தேதி இல்லாமலும் சப்ளை செய்தது கண்டறிந்து மேற்படி சப்ளையருக்கு உடனடி அபராதம் ரூபாய்.2000 விதித்ததுடன் தண்ணீரை திருப்பி எடுத்துச் சென்று உரிய கம்பெனி லேபிள் மற்றும் தயாரிப்பு தேதி அச்சிட்டு சப்ளை செய்திட எச்சரிக்கை செய்யப்பட்டது.

    மேலும் ஆய்வில் விதிமுறைகள் மீறிய உணவகம், பலகார கடை மற்றும் ஒரு ஜூஸ் கடை என மூன்று கடைகளுக்கு எச்சரிக்கை செய்து தலா ஆயிரம் உடனடி அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் உணவு பாதுகாப்பு உரிமம் பெறாத கடைகளுக்கு உடனடியாக எடுத்திட விழிப்புணர்வு செய்யப்பட்டது. ஆய்வில் நடமாடும் பகுப்பாய்வு வாகனத்தை மக்கள் கூடும் இடங்களில் நிறுத்தி வாகனத்தில் உள்ள எல்இடி தொடுதிரை வாயிலாக கலப்படம் குறித்த விழிப்புணர்வு காணொளி காட்சிகள் காண்பிக்கப்பட்டது.

    Next Story
    ×